Skip to main content

ஆளுநர் மாளிகைகளுக்கு முன்பு போராட்டம் - அறிவிப்பை வெளியிட்ட விவசாயிகள்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

farmers

 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆறு மாதங்களுக்கு மேலாக அவர்கள் போராட்டம் தொடர்ந்துவருகிறது. விவசாயிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மத்திய அரசோ சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

 

விவசாயிகளும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். கடந்த 26ஆம் தேதி, தங்கள் போராட்டம் ஆரம்பித்து ஆறு மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி, அன்றைய நாளை கருப்பு தினமாக அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்தநிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதி, தங்கள் போராட்டத்தை ஆரம்பித்து 7 மாதங்கள் நிறைவடைவதையொட்டி நாடு முழுவதுமுள்ள ஆளுநர் மாளிகைகள் முன்பு போராட்டங்கள் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அகில இந்திய கிசான் சபை, ஆளுநர் மாளிகைகள் முன்பு நடக்கும் போராட்டங்களை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா நடத்தும் என்றும், ஜூன் 26ஆம் தேதி விவசாயத்தைக் காப்பாற்றும் தினமாகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தினமாகவும் கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்