Skip to main content

ஜாலியன் வாலாபாக் தெரியும், தமிழ்நாட்டில் நடந்த அந்தப் படுகொலை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? - எழுத்தாளர் ரத்னகுமார்

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பெருங்காமநல்லூர் படுகொலை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"குற்றப்பரம்பரை சட்டம் என்பது ஆங்கிலேயர்களுக்கு எதிராக இருந்த மண்ணின் மைந்தர்கள் மீதும், பழங்குடியின மக்கள் மீதும் போடுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். ஆனால், அதில் 1914ஆம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அது முழுக்க முழுக்க பிரமலைக் கள்ளர் சமூகத்தை குறிவைத்தே கொண்டுவரப்பட்டது. அதற்கான குறிப்புகள் மதுரை ஆவணங்களில் உள்ளன. வெள்ளைக்காரனின் அதிகார வலிமை பற்றியெல்லாம் தெரியாத அம்மக்கள், எங்கள் மீது எப்படி இந்தச் சட்டத்தை போடலாம் என்று வெள்ளைக்காரனை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்கள்.  

 

அவர்களைப் பொறுத்தவரை திருமலை நாயக்கர்தான் மன்னன். அவர்தான் அவர்களுக்கு கண்கண்ட கடவுள். பின், சேதுபதி, பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மனை தெரியும். இவங்கதான் எங்க மன்னன். உனக்கு வரி கட்ட மாட்டோம், உன்னால முடிஞ்சத பாரு என்றுதான் அந்த மக்கள் அன்றைக்கு இருந்திருக்கிறார்கள். அதேபோல கத்தி, அருவா, கம்புதான் அவர்களுக்குத் தெரியும். வெள்ளைக்காரன் வைத்திருக்கும் துப்பாக்கி பற்றியெல்லாம் பெரிதாக தெரியாது.

 

பெருங்காமநல்லூரில் 1920 ஏப்ரல் 3ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடக்கிறது. ரைபிள் 303ஐ அவர்கள் மீது வெள்ளைக்காரன் பயன்படுத்தினான். அதில் சுட்டால் 6 முதல் 7 பேர் உடலை பிய்த்து எறிந்துவிடும். அந்த ரைபிளை 3000 பேர் இருந்த கூட்டத்திற்குள் பயன்படுத்தினான். ஒரு பெண் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். இதுதான் பெருங்காமநல்லூர் படுகொலை என அறியப்படுகிறது. 

 

ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919ஆம் ஆண்டு நடக்கிறது. அடுத்த ஆண்டே பெருங்காமநல்லூர் படுகொலை நடக்கிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை தேசிய கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள் பெருங்காமநல்லூர் படுகொலையை சாதிய கண்ணோட்டத்தில் குறுக்கிவிட்டார்கள். அது விடுதலைக்காக நடந்த போராட்டமாகவும் இதை ஒரு சாதிக்காரர்களின் போராட்டமாகவும் சுருக்கிவிட்டதால் பெருங்காமநல்லூர் படுகொலை வரலாற்றிலேயே இடம்பெறவில்லை. 

 

வரலாறு என்பது வரலாற்று ஆசிரியர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுவதுதான் வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படும். வெள்ளைக்காரன் அந்த மக்களை திருடன் என்று சொன்னான். இவர்கள் தங்களை போராளி என்று சொன்னார்கள். இந்த சர்ச்சைக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே பெருங்காமநல்லூர் படுகொலை கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவமாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

முதன்முதலில் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் சுதந்திரத்திற்காக போராடிய ஹர் என்ற முஸ்லீம் மக்கள் மீது போடுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம், பெங்கால், ராஜஸ்தான், மராட்டியம் என விரிந்து பல மண்ணின் மக்களை அழித்து முடித்துவிட்டு 1911இல் தமிழ்நாட்டிற்கு வந்தது. இதுதான் குற்றப்பரம்பரை சட்டத்தின் உண்மையான வரலாறு".

 

 

Next Story

5 ரூபாய்க்கு வேலைக்கு வந்தவர் ஆற்காட்டை கைப்பற்றியது எப்படி? - சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களை விளக்கும் ரத்னகுமார்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ராபர்ட் க்ளைவ் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”நான் ராபர்ட் க்ளைவின் மிகப்பெரிய ரசிகன். அலெக்சாண்டர், நெப்போலியன் போல ராபர்ட் க்ளைவும் வரலாற்று நாயகன். அடிதடி, வெட்டுக்குத்து எதற்கும் அஞ்சாதவன் ராபர்ட் க்ளைவ். ஹைதர் அலி வேகமாக முன்னேறுவதில் வல்லவர். மருதநாயகம் வியூகம் வகுப்பதில் வல்லவர். இந்த இரண்டையும் ஒருசேரப் பெற்றவர் ராபர்ட் க்ளைவ். வெறும் 500 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ஆற்காட்டைப் பிடித்துக்காட்டியவர். 

 

இந்தியா பற்றிய அறிவை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில்தான் நான் கற்றுக்கொண்டேன் என்று  ராபர்ட் க்ளைவ் பதிவு செய்துள்ளார். அவர் இந்தியாவிற்கு வந்தபோது அவருடைய வயது 19. கிளர்க் வேலைக்காக வந்தவருக்கு 5 ரூபாய் சம்பளம். பின், சில காலம் குடோனில் கணக்குவழக்கு எழுதியுள்ளார். அதன் பிறகு ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில் புத்தகத்தைத் துடைத்து வைக்கும் வேலை பார்த்திருக்கிறார். 

 

அந்த நூலகத்தில் வெள்ளைக்காரர்கள் எழுதிய புத்தகம்தான் இருக்கும். கடுக்காய் மையைப் பயன்படுத்தித்தான்  வரலாற்றைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். அதை விருப்பு வெறுப்பு இன்றி உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை படித்துத்தான் இந்தியர்களை அடையாளம் கண்டதாக  ராபர்ட் க்ளைவ் பதிவுசெய்துள்ளார். வெறும் கிளர்க்காக பணியில் சேர்ந்த  ராபர்ட் க்ளைவ், ஆறு வருடங்களிலேயே லாரன்ஸ் ஸ்டிங்கர் மூலமாக ஆர்மி கேப்டனாகிவிடுகிறார்.  

 

திருச்சியில் ஆற்காடு நவாப் முகமது அலி சண்டை செய்துகொண்டு இருக்கிறார். அவருக்குப் பிரிட்டிஷ் ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. பிரெஞ்சு படைகள் சந்தா சாஹேப்பிற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருந்தன. அந்த சமயத்தில் பிரெஞ்சு படைகளை ஒப்பிடும்போது பிரிட்டிஷ் படைகள் சற்று பலவீனமாக இருந்தன. இந்த திருச்சி முற்றுகையில் சந்தா சாஹேப் தோல்வியடைகிறார். அதற்கு முக்கிய காரணம் ராபர்ட் க்ளைவ் வகுத்த நேர்த்தியான போர் வியூகம்தான். 

 

இந்தச் சண்டையின்போது பிரெஞ்சு படைகள் வலுவுடன் இருந்ததால் சந்தா சாஹேப்பை தாக்க வேண்டுமா என்று பிரிட்டிஷுக்கு யோசனை இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்தான், சந்தா சாஹேப்பை வீழ்த்த இங்குதான் அடிக்க வேண்டும் என்றில்லை; ஆற்காட்டிலும் அடிக்கலாம் என்று யோசனை கூறுகிறார். ஆற்காட்டுக் கோட்டையில் சந்தா சாஹேப்பின் மொத்த குடும்பமும் இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்வுக்கு 30 வயதுக்குள்தான் இருக்கும். பிரிட்டிஷ் உயரதிகாரிகள் அந்த யோசனையை ஏற்கவில்லை. நான் செய்துகாட்டுகிறேன், எனக்கு ஒருநாள் அவகாசமும் 500 பேரும் கொடுங்கள் என ராபர்ட் க்ளைவ் கேட்டுள்ளார். தான் சொன்னது போலவே 500 பேரோடு சென்று ஒரு குண்டைக்கூட வெடிக்கச் செய்யாமல் ஆற்காட்டைக் கைப்பற்றிக்காட்டினார் ராபர்ட் க்ளைவ்”.     

 

Next Story

”’கருங்காலிப் பயலே’னு திட்டுறோமே, அதன் அர்த்தம் தெரியுமா?” - உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ரத்னகுமார்

Published on 16/06/2022 | Edited on 22/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கருங்காலி என்ற சொல்லுக்கான பெயர்க்காரணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"தோகத்தி மரத்தைத்தான் கருங்காலி மரம் என்று அழைப்பார்கள். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் தோகத்தி கருமை நிறத்தில் இருக்கும். அந்த மரத்தை அரிவாள் கொண்டு வெட்டவே முடியாது. கருங்காலி மரக்கட்டை கோடாலி, ஈட்டி, வேல் கம்பு செய்வதற்குப் பயன்படும். அந்தக் கட்டையை பாறையில் அடித்தால்கூட உடையாது, தெறிக்காது. 

 

கருங்காலிப் பயலே என்று சிலர் திட்டி கேட்டிருப்போம். அதற்கு என்ன காரணம்? தற்போது கருங்காலி மரம் வெட்ட நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் காலத்தில் கருங்காலியை வெட்ட வேண்டுமென்றால் கோடாரியைத்தான் பயன்படுத்துவார்கள். கோடாரி வலிமையாக இருக்க வேண்டுமென்பதால் கருங்காலி கட்டையில்தான் அதன் கைப்பிடி செய்யப்பட்டிருக்கும். கருங்காலி கட்டையில் செய்யப்பட்ட கோடாரி கருங்காலி மரத்தை வெட்டவே பயன்படுவதால், தன்னுடைய இனத்தை காட்டிக்கொடுப்பவனை குறிப்பிட கருங்காலி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கருங்காலி என்பதற்கான பெயர்க்காரணம் இதுதான்".