Skip to main content

ஓட்டுக்கு நோட்டு! மகளிர் படை ரெடி! இலையை சமாளிக்குமா சூரியன்?

Published on 06/03/2021 | Edited on 06/03/2021
ddd

 

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்றபடி தி.மு.க. தலைவர் வலம் வர, "வெற்றிநடை போடும் தமிழகமே' என எடப்பாடி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

 

மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வது, அதனைத் தீர்த்து வைக்குமளவு மக்களிடம் நம்பிக்கையை வரவழைப்பது ஸ்டாலினுக்கான வியூகங்களை ஐபேக் வகுக்க, அ.தி.மு.க. அரசு நிறைவேற் றிய திட்டங்களை டிஜிட்டல் வீடியோவாக்கி, அதனை மேடையிலுள்ள மெகா ஸ்கிரீனில் ஓடவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக் கான ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது சுனிலின் நிறுவனம்.

 

சங்கரன்கோவிலில் நடந்த எடப்பாடியின் தேர்தல் பரப்புரை மகளிர் கூட்டக் கலந்துரையாடலில் ஐ.டி. அணி, வந்திருந்த ஆண்கள் -பெண்களிடம் மைக்கைக் கொடுத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல வைத்தபோது, எதிர்பாராத வகையில், பேசிய வேப்பங்குளம் மஞ்சுளாவும், புளியம்பட்டியின் வேல்சாமியும், ""கிராமங்களில் எங்க புள்ளைக ரொம்பப் பேரு படிச்சிட்டு வேலையில்லாம தவிக்கிறாங்க. டி.என். பி.எஸ்.சி. பரீட்சை எழுதி என்னைக்கி எங்க புள்ளைக வேலைக்கிப் போவ. அதனால அதுமாதிரி பரீட்சை வைக்காம, படிச்சி முடிச்ச சீனியாரிட்டிப்படி வேலை கொடுங்க'' என்று பேசியது கண்டு அரண்டுபோனது. அடுத்து மக்களிடம் மைக் கொடுத்தால் வேறு மாதிரி ஆகிவிடும் என்பதால் நாசூக்காக நிறுத்திக்கொண்டது.

ddd

எடப்பாடியின் தேர்தல் பரப்புரை வருகைக்குப் பின்னர் இலைக் கட்சியினரிடமிருந்தே அவர்களின் தேர்தல் நேர வியூகங்கள் தொகுதிகளில் கசியத் தொடங்கியுள்ளன.

 

""தொகுதியின் ஒவ்வொரு வார்டிலுமுள்ள அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள் என இருவர் இருப்பர். அவர்கள் இரண்டு பேருக்கும் தேர்தல் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை வேட்பாளரால் சன்மானமாகத் தரப்படும். அவர்கள் சார்ந்த வார்டுகளில் கட்சியைச் சேர்ந்த பெண்கள், அவர்களுக்குப் பரிட்சயமானவர்கள் என 25 பேர் திரட்டப்பட்டுள்ளனர். அவர்களின் மொபைல் நம்பர்கள், முகவரிகள் அத்தனையும் கலெக்ட் செய்யப் பட்டுள்ளதாம். இந்த 25 பெண்களுக் கும் வார்டிலுள்ள வாக்காளர்களை, தலைக்கு இத்தனை பேர் என பங்கீடும் செய்யப்பட்டுள்ளது.

 

இதில் அந்த 25 பெண்களுக்கும் கூலியாகத் தலா ஒரு தொகை தனியாகத் தரப்படும். வாக்காளர்களுக்குத் தரப்படும் பணத்தில் அவர்கள் கைவைக்கக்கூடாது. அந்த 25 பெண்களும் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட வாக்காளர்களிடம் வோட்டுக்கு இவ்வளவு என்று வேட்பாளர் தரும் தொகையை அப்படியே கொண்டுபோய் சேர்த்துவிட வேண்டும். அதன்பின் அவர்கள் பணப்பட்டுவாடா செய்த வாக் காளர்களின் பெயர்கள், அவர்களின் அத்தனை மொபைல் நம்பர்களையும், வேட்பாளர் தரப்பிடம் சேர்த்து விடவேண்டும். பணம், வாக்காளர் களுக்கு முறையாகப் போய்ச் சேர்ந்துவிட்டதா என்பதை வாக்காளர்களிடமே செக்கப் செய்து கொண்டுவிடுமாம் அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு. இப்படிப்பட்ட பக்காவான ஏற்பாடுகள் செய்யப் பட்ட இந்தப் பெண்களின் டீம், தேர்தல் நேரத்தில் ஓவர் நைட்டில் சிந்தாமல் சிதறாமல் ஓசையின்றிக் காதும் காதும் வைத்தது போன்று பணப்பட்டுவாடாவை முடித்து விடும். இதுதான் வாக்காளர் ஆபரேஷனுக்காகக் கட்சித் தலைமை வைத்திருக்கிற மகளிர் வியூகம்'' என்கிறார்கள் இலைத்தரப்பு நிர்வாகிகள்.

 

மேலும் ""நகர மற்றும் ஒன்றியச் செயலாளர்களுக்கு வெயிட்டான தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கு. தவிர, தற்போது தமிழகம் முழு வதும், புதிய குடிநீர் பைப்லைன்கள் போடப்பட்டு வருவதால் அதற்காகத் தோண்டப்படும் சாலைகளில் புதிதாக தார்ச்சாலைகள் தமிழகம் முழுக்க போடப்பட்டு வருகின்றன. அப்படி தார்ச்சாலைகள் போடப்படுகிற இடத்தை ஒட்டியுள்ள இரண்டு பக்கத்திலுமுள்ள இரண்டு வார்டு களைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் இரண்டு கிளைச் செயலாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் கணிசமான தொகையைக் கமிசனாகக் கொடுத்துவிடவேண்டும் என்பது வாய்மொழி ஆணையாம். இப்படி வரப்போகும் தேர்தலில் இலைக் கட்சியின் நிர்வாகிகளின் காட்டில் பண அடைமழைதானாம்.

ddd

வழக்கம்போல் பிரச்சாரம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், இலைத்தரப்பு கரன்சியையே இந்தத் தேர்தலின் பிரம்மாஸ்திரமாகவும் நாகாஸ்திரமாகவும் பயன்படுத்தும் திட்டம் வைத்திருக்கிறது'' என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

 

"தி.மு.க.வில் ஆட்சியமைந்த 100 நாட்களில் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம்' என்று வாக்குறுதியாகவே தரப்படுவதால் தொகுதிக்கு இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நம்பிக்கையில் மனுக்கள் அளிக்கிறார்கள். மனுக்கள் கொடுப்பதோடு நின்றுவிடக்கூடாது. நாம் வாக்களித்தால்தானே அவர்களால் ஆட்சியமைக்க முடியும். நம் குறைதீரும் என்ற எண்ணத்தில் மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு வாக்களிப்பார்கள். நமது வாக்கு வங்கி பெருகி வெல்வோம் என்பது சூரியத் தரப்பின் நம்பிக்கையாக உள்ளது.

 

வைட்டமின் ப இல்லாமலா... அதற்கு சூரியத் தரப்பு என்ன வியூகங்கள் வகுத்திருக்கிறது என்பதில் இருக்கிறது கழகங்களின் வெற்றி வாய்ப்புகள்!

 

 


 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.