Skip to main content

அமெரிக்காவின் சில பெண்கள்..!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

women leaders in america

 

பல நூற்றாண்டுகளாக பெண்கள் இச்சமூகத்தில், கலை, அரசியல் மற்றும் தலைமை பொறுப்புகள் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்றைய நவீன கால கட்டத்திலும், அரசியல்வாதிகள், தத்துவவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மேலோங்கி காணப்படுகிறது. அந்தவகையில், அன்று முதல் இன்று வரை வரலாற்றில் நமக்கு முன் மாதிரியாகச் செயல்பட்ட, சில சாதனை பெண்கள் அடங்கிய சில தொகுப்பே இது. 

 

women leaders in america

 

ரூத் பேடர் கின்ஸ்பர்க்:

 

1993-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனால், அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் பெண் உரிமை ஆர்வலர் ரூத் பேடர் கின்ஸ்பர்க். இவர், அமெரிக்காவில் முக்கிய பெண்ணியவாதியாகவும், தாராளவாதிகளுக்கான ஒரு முக்கிய தலைவராகவும் இருந்தார். பெண்ணுரிமை சார்ந்து இவர் வழங்கிய பல தீர்ப்புகள், அமெரிக்க மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. இவர் உயிருடன் இருந்த வரையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பழைமைவாதிகள் ஐந்து பேரும், தாராளவாதிகள் நான்கு பேரும் நீதிபதிகளாக இருந்தனர். குற்றவாளிகளுக்கான மரண தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும் என இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ரூத் பேடர் கின்ஸ்பர்க், அந்நாட்டின் மிகவும் பழமையான நீதிபதி மற்றும் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 2-வது பெண் நீதிபதி என்கிற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஆவார்.

 

செப்டம்பர் 2020 இல் ரூத் பேடர் கின்ஸ்பர்க் காலமானபோது, 'பாலின சமத்துவத்தின் முன்னணி சாம்பியன்களில் ஒருவரின் இழப்பு' என அமெரிக்கா இரங்கல் தெரிவித்தது. அவரது இழப்பு குறித்து தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "நம் நாட்டின் வரலாற்றை நாம் இழந்துவிட்டோம்" என்று தெரிவித்திருந்தார். கின்ஸ்பர்க்கின் பதவிக்காலத்தில் ஊனமுற்றோர் மற்றும் 18 வயதுக்குக் குறைவான கொலையாளிகளுக்கு மாகாண நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

women leaders in america

 

ரோசா மெக்காலே பார்க்ஸ்:

 

ஜேம்ஸ் மெக்காலே மற்றும் லியோனா எட்வர்ட் மெக்காலே தம்பதியினரின் மகளான ரோசா மெக்காலே பிப்ரவரி 4, 1913 இல் பிறந்தார். தனது தந்தை இறந்த பிறகு தாயுடன் அலபாமாவின் பைன் பவனில் வசித்து வந்த இவர், 1932 ஆம் ஆண்டில் ரேமண்ட் பார்க்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நிறவெறிக்கு எதிராகவும், மக்களின் சமத்துவத்திற்காகவும் போராடிய ரோசா மெக்காலே பார்க்ஸ் சிவில் உரிமைகள் இயக்கத்தின் ஒரு முக்கிய நபராவார்.1965-1966 -ல் இவர் மான்ட்கோமரி பஸ் புறக்கணிப்பைத் தூண்டியது அந்த இயக்கத்தின் திருப்புமுனை போராட்டங்களில் ஒன்று. சிவில் உரிமைகள் மீதான தனது உறுதிப்பாட்டை ரோசா பார்க்ஸ் இறக்கும் வரை தொடர்ந்தார். நகரப் பேருந்தில் தனது இருக்கையை வெள்ளையின நபர் ஒருவருக்கு விட்டுக்கொடுக்க மறுத்ததற்காகக் கைது செய்யப்பட்டார். இவர் ஒரு சிவில் உரிமை ஆர்வலர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இன நீதிவாதி ஆவார். அதுமட்டுமின்றி, அலுவலக எழுத்தர், உள்நாட்டு மற்றும் செவிலியர் உதவியாளராகவும் பணியாற்றியவர் ஆவார். தனது 92 வது வயதில் அக்டோபர் 24, 2005 அன்று தனது டெட்ராய்ட் வீட்டில் இயற்கை எய்திய அவர், உரிமைகள் தொடர்பான தனது படைப்புகள் மூலம் இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

women leaders in america

 

மாயா ஏஞ்சலோ:

 

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல்-4 அன்று பிறந்த மாயா ஏஞ்சலோ ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஆவார். மாயா ஏஞ்சலோ, மிக எளிய குடும்பத்தில் பிறந்திருந்ததாலோ என்னவோ, தனது வாழ்நாளில் எண்ணற்ற ஒடுக்குமுறைகளைச் சந்தித்தவர். இவர் எழுத்தாளர், கவிஞர், நடிகை, நாடக ஆசிரியர், பாடலாசிரியர், நடனக் கலைஞர், பத்திரிகையாளர் மற்றும் பெண்ணுரிமைப் போராளி என்று பல்வேறு பரிமாணங்களில் சிறந்து விளங்கியவர். மேலும் நவீன அமெரிக்க இலக்கியங்களில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்படுபவர். மாயாவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, அவரின் அம்மாவின் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். குழந்தைப் பருவ பாலியல் துஷ்பிரயோகம், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக, ஏஞ்சலோவால் பல ஆண்டுகளாகப் பேச முடியவில்லை என்று தேசிய மகளிர் வரலாற்று அருங்காட்சியகம் தகவல் தெரிவித்துள்ளது.  

 

பின்னர், அவர் தனது எழுத்தின் மூலம் தான் இழந்த குரலை மீட்டெடுத்தார். வயது வந்தவராக, அவர் சிவில் உரிமைகள் இயக்கத்தில் ஈடுபட்டார். மால்கம் எக்ஸ் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றோருடன் நட்பு கொண்டிருந்தார். மாயா தனது 17வது வயதில் தன் வலிகளை எழுத்தாக இறக்கி வைத்து 'I Know Why the Caged Bird Sings' (1969) என்ற நூலை எழுதுகிறார். அவரின், கற்பனையான சுயசரிதை அமெரிக்காவில் ஒரு இளம் கறுப்பினப் பெண்ணாகத் தனது அனுபவத்தை விவரித்தது. கறுப்பினப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வலிமிகுந்த சிக்கலான தருணங்களை, தனது படைப்புகளில் பதிவு செய்பவராக மாயா அப்போது திகழ்ந்தார். அவரது சுயசரிதை மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார். இந்த புத்தகம் அதன் புரட்சிகர அணுகுமுறையால் பாராட்டப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகளை ஒட்டுமொத்த உலகிற்கும் பறைசாற்றும் விதமான தனது எழுத்துக்களுக்காகச் சர்வதேச அளவில் பலவித விருதுகளையும் வாங்கி குவித்தார். தனது வாழ்நாளில் பெண்ணுரிமைக்காகவே வாழ்ந்த மாயா, கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 86வது வயதில் இயற்கை எய்தினார்.  

 

women leaders in america

 

கமலா ஹாரிஸ்:

 

அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தற்போதைய அமெரிக்கத் குடியரசுத் துணைத் தலைவருமான கமலா ஹாரிஸ், 1964ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி ஓக்லாந்தில் பிறந்தார். கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவைச் சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றதையடுத்து, இவர் தாய் ஷியாமலா கோபாலன் அரவணைப்பில் வளர்ந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்று சட்டக் கல்வியில் பட்டம் பெற்ற இவர், ஒரு வழக்கறிஞராகத் தனது தொழிலைத் துவங்கினார். 2003ல் அவர் சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார். இதையடுத்து, கமலா ஹாரிஸ், அமெரிக்க செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற சாதனையைப் படைத்தார். தமிழக வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதான கமலா ஹாரிஸ், அந்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியை வகித்த முதல் ஆசிய அமெரிக்கக் கறுப்பின பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். 

 

 

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.