Skip to main content

ரூபாய் 20 கோடி எங்கே? வேலுமணியை லெஃப்ட் & ரைட் வாங்கிய ஜெயலலிதா!!!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

ddd

 

சுகுணாபுரம் பழனிச்சாமி வேலுமணி, ‘அமைதிப்படை' படத்தில் இயக்குநர் மணிவண்ணன் படைத்த ‘நாகராஜசோழன்' என்கிற அரசியல்வாதி கேரக்டரின் அசல் வடிவம். மிகமிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்த வேலுமணி, இன்று சசிகலாவைவிட அதிக சொத்து மட்டுமல்ல... அதிகாரமும் படைத்த நபர். இவரை எதிர்த்துப் பேச எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்.ஸும் கூட பயந்து நடுங்குவார்கள்.

 

அரசியலில் ஆரம்ப கட்டத்தில் தன்னை வளர்த்துவிட்ட கே.டி.ராஜு என்கிற எம்.எல்.ஏ., கிணத்துக்கடவு தாமோதரன் என்கிற அமைச்சர் ஆகியோரை சரி செய்து கீழே தள்ளிவிட்டு எம்.எல்.ஏ.வான வேலுமணி, சசிகலாவின் உறவினர் ராவணன் தயவில் அமைச்சரானார்.

 

ddd

 

ஹுண்டாய் கம்பெனியில் ஜெ.வுக்குத் தெரியாமல் 20 கோடி ரூபாய் வாங்கினார் என ஜெ.வின் செயலாளரான ஷீலா பிரியா கண்டுபிடித்தார். அதனால் அவரை பதவியிலிருந்து நீக்கிய ஜெ.விடம், "அந்த 20 கோடியை சசியின் உறவினர் டாக்டர் வெங்கடேஷிடம் கொடுத்தேன்' என அப்படியே போட்டுக்கொடுத்தார் வேலுமணி. பின்னர் சசிகலாவின் காலில் விழுந்து சமாளித்து, மறுபடியும் அமைச்சரான வேலுமணியையும் அவரது மேனரிசத்தையும் அடிக்கடி கிண்டலடித்து ஜெ. சிரிப்பாராம்.

 

கடைசியாக சசியின் குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரனிடம் மோதினார் வேலுமணி. ஒட்டுமொத்த அதிமுகவினரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சசிகலாவுக்கு எதிராக பாஜகவுக்கு ஆதரவாக கொண்டுபோய் நிறுத்தி, தனது தொகுதியில் ஆசிரமம் வைத்துள்ள சாமியார் ஜக்கி வாசுதேவ் ஆதரவுடன் பவர்ஃபுல்லாக வலம்வந்த வேலுமணிக்கு ரெய்டு செக் வைத்தது திமுக அரசு.

 

ஆரம்பத்தில் குனியமுத்தூர் நகராட்சித் தலைவராக அரசியல் வாழ்வைத் துவக்கிய வேலுமணி, குடிநீர் கனெக்ஷனுக்கு கட்டிங் கேட்டுதான் தனது ஊழல் கணக்கைத் துவக்கினார். இன்று சென்னையில் மிக விலையுயர்ந்த அபார்ட்மெண்ட்டான பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரி ஈஊஊ இதஞந ஞசஊ 74 என்கிற குடியிருப்பில் ஆறு பிளாட்டுகளை வைத்துள்ளார். "ஒரு பிளாட்டின் விலை 35 கோடி ரூபாய் என 210 கோடி ரூபாய்க்கு ஒரே இடத்தில் சொத்து வாங்கியுள்ளார்' என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

ddd

 

"ஜெ.'வையே பதம் பார்த்தது சொத்துக் குவிப்பு வழக்கு என்பதால் வேலுமணி இதற்குத்தான் அதிகம் பயந்தார். வேலுமணிக்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதியும், அறப்போர் இயக்கமும் போராடினார்கள். திமுக, கவர்னரிடமும் வேலுமணியின் ஊழல் பட்டியலை அளித்தது. அறப்போர் இயக்கத்துடன் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போட்டது.

 

வேலுமணியோ அறப்போர் இயக்கத்தின் மீதும், ஊழல்களை வெளியிட்ட பத்திரிகைகளின் மீதும் வழக்கு போட்டே சரிக்கட்டலாம் என நினைத்தார். அறப்போர் இயக்கத்தின் மேல் 32 வழக்குகளைப் போட்ட வேலுமணி, பத்திரிகையாளர்கள் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்தார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையைத் தனது கைப்பாவையாகவே மாற்றினார். டி.ஐ.ஜி.யான ராதிகா, எஸ்.பி.யாக இருக்கும் சண்முகம், பொன்னி ஆகியோரை வைத்தே விளையாடினார். தினமும் வேலுமணியிடம் தொலைபேசியில் பேசும் ராதிகா, வேலுமணி மீது விசாரணை நடந்துங்கள் என உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்குப் பதிலாக அவர்மீது எந்தத் தவறும் இல்லை என சான்றிதழ் கொடுத்தார்.

 

திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தலைவராக, அமித்ஷாவையே கைது செய்த தமிழக அதிகாரியான கந்தசாமி பொறுப்பேற்றார். அவர் "ராதிகாவை மாற்றுங்கள்” என டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதியிடம் கேட்டார். அவர் "முடியாது' என மறுத்தார். இது காவல்துறைக்குள் சர்ச்சையானது.

 

ddd

 

ராதிகா தற்போது திருச்சி பகுதி சட்டம் - ஒழுங்கு அதிகாரியாக உள்ளார். எஸ்.பி. சண்முகத்தை இதுவரை மாற்றவில்லை. "ராதிகா, திருச்சியில் இருந்தவாறே சண்முகத்தின் துணையுடன் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவான வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்' என நடப்பவற்றைச் சொல்கிறார்கள் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள்.

 

மத்திய பாஜக. அரசில் அமைச்சராக உள்ள பியூஸ் கோயல் உதவியுடன் வேலுமணியின் மகன் படித்து ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தமிழ்நாட்டில் சேர்த்த பணத்தை முதலீடாக செய்தார் என்பதை, அவரது ஆடம்பர வாழ்வுடன் அட்டைப்படமாக வெளியிட்டது நக்கீரன். அந்த முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை ஒரு இடத்தில் வைக்காமல் கண்டெய்னர் லாரிகளில் வைத்து நிரந்தரமாக தமிழ்நாட்டையே சுற்றிவர வைத்திருக்கிறார் வேலுமணி.

 

இந்நிலையில், கந்தசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை, "திமுகவும் அறப்போர் இயக்கமும் வேலுமணிக்கு எதிராக கொடுத்த புகாரில் உண்மை இருக்கிறது. மத்திய ஆடிட்டர் ஜெனரல் கொடுத்த அறிக்கைப்படி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது. ஹோட்டல், நகைக்கடை, கட்டுமான நிறுவனங்கள், என்ஜினியரிங் கம்பெனிகள் என 17 நிறுவனங்கள் மூலம் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், சந்திரபிரகாஷ், சந்திரசேகர் உள்ளிட்ட ஏழு பேர் வேலுமணி ஆதரவுடன் உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்து சுமார் 810 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார்கள்'' என முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

 

லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கைகளில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் நடந்த ஒப்பற்ற முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த முறைகேடுகளை செய்த காலகட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த கார்த்திகேயன், பிரகாஷ், பாஸ்கரன் போன்ற அதிகாரிகள் சேர்க்கப்படவில்லை. அவர்கள் சாட்சிகளாக வருவார்கள். "வேலுமணி சொன்னார்... செய்தோம்' என சொல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... திமுக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில் உள்ளாட்சித்துறை முறைகேடுகளும் இடம்பெற்றன. அடுத்து ரெய்டுதான் என ராதிகா மூலம் முன்கூட்டியே அறிந்த வேலுமணி, தனது அபார்ட்மெண்ட்டிலிருந்து எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்து தங்கினார். காலை எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் "என்ன இவ்வளவு லேட்டா வர்றீங்க?' என ஜோக்கடித்து சிரித்திருக்கிறார் வேலுமணி.

 

ஜெ. வீட்டிற்கு சோதனை செய்ய போலீசார் போனபோதுகூட கூடாத கட்சிக்காரர்களை வேலுமணியை போலீசார் ரெய்டு செய்தபோது வேலுமணி திரட்டியிருக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், கட்சித் தொண்டர்கள் என ஏதோ ஒரு மாநாட்டிற்கு கூட்டிய கூட்டம் சேர்த்தார். 65 இடங்களில் நடந்த ரெய்டில் வெறும் 13 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துக்கள் குறித்த ஆவணங்களுடன் திரும்பியது லஞ்ச ஒழிப்புத்துறை. "வேலுமணி மீது போட்ட வழக்கு மிகவும் நேர்த்தியானது. அதற்கு பெரிய புதிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஏற்கனவே கொடுத்த புகார் தொடர்பான கூடுதல் ஆதாரங்களை, இன்றைய திமுக அரசு அளித்த ஆதாரங்களை எளிதாக அரசு திரட்டிவிடும்'' என்கிறார் அறப்போர் இயக்கம் ஜெயராமன். ஆனால் "பல ஆயிரம் கோடிகளை வைத்துள்ள வேலுமணியின் வீடுகளில் வெறும் 13 லட்சமா கிடைத்தது?' என திமுகவினர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

வேலுமணி, "திமுக அரசின் இந்த நடவடிக்கை தோல்வி, நான் மிஸ்டர் க்ளீன்' என டி.வி.க்களில் பேசுகிறார். அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு இயல்பாக இருப்பதுபோல வெளிப்படுத்துகிறார்.

 

லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமியிடம் ஸ்டாலினும் காட்டமாகப் பேசியிருக்கிறார். வேலுமணியுடனான ஆடு-புலி ஆட்டத்தில் திமுக ஒரு முக்கியமான காயை, ரெய்டுகள் மூலம் எழுப்பியிருக்கிறது. "இது ஆரம்பம்தான். லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள வேலுமணிக்கு விசுவாசமான கறுப்பு ஆடுகளைக் களைந்துவிட்டு முழு முதல் தாக்குதலை லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமி தலைமையில் மேற்கொள்ளும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.

படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.