Skip to main content

பெண்களுக்கு உரிமை அளிக்கக்கூடாது என அம்பேத்கர் உருவப் படத்தை தீயிட்டு எரித்தவர்களுக்கு இப்போது என்ன திடீர் பாசம்...? - இள. புகழேந்தி கேள்வி

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

 

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் அவருக்கு நேற்று மரியாதை செய்யப்பட்டது. தமிழகத்திலும் அவருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் மரியாதை செய்தனர். சில இடங்களில் இந்து அமைப்பினருக்கும் சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாக்குவாதம் ஆன சம்பவங்களும் நடைபெற்றன.

 

குறிப்பாகத் தமிழகத்தில் இந்து அமைப்பினர் சிலர் அவரின் உருவப்படத்தை இந்து வழிபாடு முறையோடு தொடர்புபடுத்திக் காவி வண்ணத்தில் உடை, விபூதி உள்ளிட்டவற்றோடு அவரின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த இள.புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அவருக்குப் பொதுமக்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். சில இடங்களில் அம்பேத்கர் புகைப்படத்திற்குக் காவி வண்ணம் பூசப்பட்டு, விபூதி உள்ளிட்ட இந்து மத அடையாளங்களோடு பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

இந்தியாவில் உள்ள அனைவரும் மதிக்க வேண்டிய ஒரு தலைவர் அண்ணல் அம்பேத்கர். இன்றைக்கு அவர் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தையே பயன்படுத்தி வருகிறோம். அந்த சட்டத்தின் படி பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன மக்கள் என அனைவருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்து கொடுத்துள்ளார். இன்றைக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறுகள் உருவாக்கி அனைத்துத் தரப்பு மக்களையும் இந்நாட்டில் சரிசமமாக வாழ வழிவகை செய்தவர். 

 

அவரின் சிறு வயதிலேயே இந்த சாதி மத ஒழிப்புக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடியவர். மத பிரிவினைவாதிகளை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்தார். புத்தர் மீது கொண்ட நாட்டத்தின் காரணமாக இந்த சனாதன மதத்திலிருந்து விலக வேண்டும் என்று நினைத்து புத்த மதத்திற்கு மாறினார். இன்றைக்கு அவர் மீதே சனாதன சக்திகள் மதத் தாக்குதல்களைச் செய்து வருகிறார்கள். இதை யாராலும் ஏற்க  முடியாது. 

 

வாழ்நாள் எல்லாம் இந்த மத தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடிய அவருக்கு இன்றைக்குக் காவி வண்ணம் பூசி விபூதி அடிக்கிறார்கள் என்றால் இவர்களின் அறியாமையை என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவர்களுக்கு எல்லாம் வெக்கமாகவே இல்லையா என்று தெரியவில்லை. அவரின் கொள்கை கோட்பாடு என்னவென்று அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும். இவர்கள் திடீரென்று அவருக்குக் காவி வண்ணம் பூசினால் அம்பேத்கர் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் ஆகிவிடுவாரா? இவர்களுக்குச் சுத்தமாக அறிவில்லையா, இல்லை அறிவில்லாத மாதிரி நடிக்கிறார்களா என்று தெரியவில்லை. 

 

அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தில் பெண்கள் படிக்கலாம், மறுமணம் செய்து கொள்ளலாம், அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கப்படும் என்று பேச்சு எழுந்த உடனே அதனைக் கண்டித்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டத்தில் அண்ணலின் உருவப் படத்தை எரித்தவர்கள் இன்றைக்கு அவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துகிறேன் என்கிறார்கள். ஒருபோதும் நாட்டு மக்களை இவர்கள் ஏமாற்ற முடியாது. 

 


 

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story

'அம்பேத்கர் விரும்பிய ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்'-திருமாவளவன் பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
 'The India alliance must win to protect the democracy Ambedkar wanted' - Thirumavalavan speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளில் அங்குள்ள அவரது திருவுருவ சிலைக்கு கூட்டணி கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழக அரசு வகுத்துள்ள சமத்துவம் குறித்த உறுதிமொழியை அவர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், கருணாகரநல்லூர், அறந்தாங்கி, மாமங்கலம், கொண்ட சமுத்திரம், வடக்கு பாளையம், சோழத்தரம், குமாரக்குடி, கானூர், நாச்சியார் பேட்டை, திருமுட்டம், கள்ளிப்பாடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரித்து பேசிய அவர், 'அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தையும், அவர் விரும்பிய சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். நடப்பது சாதாரண தேர்தல் அல்ல நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கும் அறப்போர். முதல்வர் ஸ்டாலின், தலைவர் ராகுல் இணைந்து பாரதிய ஜனதா பாசிச அரசு தொடரக்கூடாது வீழ்த்தப்பட வேண்டும் என தேசிய அளவில் அமைக்கப்பட்ட வியூகம் தான் இந்தியா கூட்டணி.  இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் இங்கு  40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். சிதம்பரம் தொகுதி உட்பட 40 தொகுதியிலும் முதல்வர் தான் வேட்பாளர்' என பேசினார்.

விசிக காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, கூட்டணி கட்சியினர் 200-க்கும் மேற்பட்டவர்கள் உடன் இருந்தனர்.