Skip to main content

"ஆளுநர் மாளிகையில் எதையோ பார்க்கக் கூடாததைப் பார்த்த பழனிசாமி; அவர்கள் கூட்டத்திலேயே எங்களுக்கு ஸ்பை இருக்கு - புகழேந்தி டாக்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

kjl

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுங்கட்சியான திமுக மீது பல்வேறு ஊழல் புகார்களைக் கொடுத்ததாகச் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு,

 

இன்றைக்கு உங்கள் பழைய சகாக்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார்கள். உள்ளாட்சித் துறையில் எண்ணற்ற ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்கள். போஸ்டர் அடித்ததில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? எதிர்க்கட்சி என்ற பாதையில் எடப்பாடி தரப்பிலான அணி சரியான திசையில் பயணிப்பதாகக் கருதுகிறீர்களா? 

 

எடப்பாடி குரூப் எதற்காக ஆளுநரைச் சந்தித்தார்கள். என்ன தவறு நடைபெறுவதைக் கண்டுபிடித்ததாகச் செய்தியாளர்களிடம் கூறினார்கள். அங்கே எடப்பாடியின் அடிப்பொடிகள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தீர்களா? அவர்கள் எல்லாம் ஆளுநரை சந்தித்துவிட்டு தெம்போடு நின்று கொண்டிருந்தவர்களைப் போல் அவர்கள் இருந்தார்களா? ரஜினி ஒரு படத்தில் ஐயோ பாத்துட்டேன், ஐயோ பாத்துட்டேன்னு அதகளம் செய்து படம் முழுவதும் சிரிக்க வைத்திருப்பார். அதைப்போல தற்போது எதையோ பார்க்கக்கூடாததைப் பார்த்ததைப் போல் எடப்பாடி தரப்பினர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால் யாருடைய முகத்திலாவது சந்தோஷம் துளி அளவாவது இருந்ததா என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அனைவரும் பேய் அறைந்ததைப் போல் இருந்ததை நாம் எல்லாம் பார்த்தோம். 

 

இவர்கள் ஆளுநரிடம் என்ன புகாரை அளித்துள்ளார்கள். எடப்பாடியுடன் அங்கே சென்ற அவரது நண்பர்கள் பேசிக்கொண்டதை அருகிலிருந்தவர்கள் என்னிடம் கூறினார்கள். நாம் அவர்கள் கூட்டத்திலேயே ஸ்பை வைத்துள்ளோம். அதில் ஒருவர் அருகிலிருந்தவரிடம் அண்ணன் சொன்ன ஊழல் நடைபெற்றபோது யார் பதவியிலிருந்தார்கள் என்று கூடவா அவருக்குத் தெரியாது என்று கேட்டுள்ளார். அருகிலிருந்தவர் ஏதோ அண்ணன் ஞாபக மறதியில் எடுத்து வந்திருப்பார் என்று தங்களுக்குள்ளாகவே கிண்டலாகப் பேசிக் கொண்டுள்ளார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்களின் தரம் இருக்கிறது. இவர்களால் குற்றத்தைக் கண்டுபிடித்துச் சொல்லும் ஆற்றல் இருந்திருந்தால் இவர்களை ஏன் மக்கள் துரத்தப் போகிறார்கள். இவர்கள் திறமையற்றவர்கள், அதுதான் மக்கள் இவர்களைக் கண் காணாத இடத்தில் தூக்கி எறிந்துள்ளார்கள்.

 

இவர்கள் முதலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவர்கள் ஆட்சியிலிருந்த வரைக்கும் முறையாகத் தேர்தல் நடத்தினார்களா? ஆட்சி முடியப்போகின்ற நிலையில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தினார்கள். அதிலும் 50 சதவீத இடங்களை திமுக பெற்றது. இதுதொடர்பாக எடப்பாடி வீட்டில் நடைபெற்ற சந்திப்பில் அண்ணே என்ன இப்படி ஆயிடுச்சு அண்ணே... என்று நான் அவரிடம் நேரடியாகக் கேட்டேன். நானும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தேர்தல் நடத்தினால் சரியாக இருக்காது; அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார். நானும் வெற்றி பெறுவதற்காக அவ்வாறு அவர் கூறுகிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதிலும் இவர்களுக்குப் பெரிய நோக்கம் இருந்தது.

 

அவர்கள் ஆட்சியில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உள்ளாட்சி அமைப்புக்களுக்குத் தேர்தல் நடத்தவில்லை. அப்போது அதனை நிர்வகித்தது யார்? உள்ளாட்சித் துறை அமைச்சர், அவர் யார் கண்ட்ரோலில் இருப்பார். இந்த எடப்பாடியின் பின்புலத்திலிருந்துதான் செயல்படுவார். தேர்தலை நடத்தாமல் அதில் எவ்வளவு கோல்மால்களைச் செய்ய முடியும் என்ற நோக்கில் தேர்தலைக் கூட இவர்கள் தள்ளி வைத்திருந்தார்கள் என்பது இவர்களின் செயல்பாடுகளுக்குப் பின்பே புரிய வந்துள்ளது. ஆகவே இவர்கள் கொடுத்த புகார்களை விசாரித்தால் இவர்கள் மீதுதான் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.


 

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.