Skip to main content

நம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்! 

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசம் முழுவதும் முஸ்லிம்களின் போராட்டம் வலுத்து வருகிறது. முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் போராட்டம் வலிமையடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் ஒரு ஷாஹின்பாக்காக உருவாகியிருக்கிறது வண்ணாரப்பேட்டை.
 

admk



போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடி குறித்தும், தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் பிரச்சனைகளை எழுப்பும் என்பதை அறிந்து, உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி, உளவுத் துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் பலரையும் அழைத்து விவாதித்தார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். இதனைத் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் தயாரித்த நீண்ட நெடிய ஒரு அறிக்கை எடப்பாடியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
 

admk



எடப்பாடி எதிர்பார்த்தது போலவே வண்ணாரப் பேட்டை போராட்டம், தேசிய குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றவும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரியும் சட்ட மன்றத்தில் பிரச்சனையை எழுப்பினர். ஆனால், வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து பேச அனுமதி தந்த சபாநாயகர் தனபால், குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதிக்கவோ தீர்மானம் நிறைவேற்றவோ அனுமதிக்க மறுத்துவிட்டார். இந்தச் சூழலில், வண்ணாரப் பேட்டை போராட்டம் குறித்து எடப்பாடி விளக்கமளிக்க, அதில் திருப்தியில்லை என சொல்லி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் வெளியேறின. அதேபோல, எடப்பாடியின் விளக்கத்தை முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் ஏற்க மறுத்ததால் போராட்டங்கள் பல இடங்களிலும் வலிமையடைந்து வருகிறது.


14-ந் தேதி வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களையடுத்து கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை அழைத்து விவாதித்தார் எடப்பாடி. அப்போது போராட் டத்தில் நடந்தவற்றை விவரித்த கமிஷனரிடம், "போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள்' என உத்தரவிட்டார் எடப்பாடி.

இதனைத் தொடர்ந்து, ஜமாத் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ., பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு, ஐ.என்.டி.கே., ஜமாத் இஸ்லாமிக் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களையும் முக்கிய பிரதிநிதிகளையும் அழைத்து விவாதித்தார் கமிஷனர் விஸ்வநாதன்.

அந்த விவாதத்தில், "முஸ்லிம்களின் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதற்கு தடையின்றி அனுமதி தந்து வருகிறது போலீஸ். மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறீர்கள். உங்களுக்கு எந்த பிரச்சனையும் போலீஸாரால் வந்ததில்லை. ஆனால், வண்ணாரப் பேட்டை போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து பாட்டில்களும் கற்களும் வீசப்பட்ட நிலையிலும் போலீஸார் ஆவேசம் காட்டவில்லை. போலீஸார் ஏற்படுத்திய தடுப்புகளை உடைத்தெறிந்து போராட்டத்திலிருந்தவர்கள் முன்னேற நினைத்தபோதுதான் அவர்களை போலீஸார் தடுத்தனர். இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என இயல்பாக பேசினார் கமிஷனர்.


அப்போது, பேசிய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பல விசயங்களை வலியுறுத்தினர். அந்த ஆலோசனை குறித்து, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் நாம் விசாரித்தபோது, ‘மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை தேசிய குடியுரிமைதான். அதையும் பறிக்கிற விதத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டதில் இருக்கும் சந்தேகங்கள் பற்றி அழுத்தமான அச்சம் மக்களிடம் இருக்கிறது. அந்த அச்சம் நியாயமானது. காரணம், அசாமில் நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதை இந்தியா முழுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா அமல்படுத்த நினைக்கிறார். இப்படியான சூழலில் தான், போராட்டங்களுக்கு தன்னெழுச்சியாகத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் மக்கள்.

டெல்லி ஷாஹின்பாக்கில் 60 நாட்களாக போராட்டம் நடக்கிறது. இந்தியாவில் 303 இடங் களிலும், அதில் 147 இடங்களில் ஷாஹின்பாக் போல இடைவிடாமலும் போராட்டங்கள் நடக்கின்றன. அப்படியிருக்கும்போது சென்னையில் மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்?

ஒரு போராட்ட களத்தை தந்திருந்தால் வண்ணாரப்பேட்டை வன்முறை வந்திருக்காது. அதற்கு மாறாக, மக்கள் மீது மோசமாக தாக்கு தலை பிரயோகித்திருக்கிறார்கள். சென்னையை கலவர பூமியாக்கிவிட்டீர்கள். இதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என எல்லோரும் ஒருமித்த குரலில் கேட்டோம்.

அதற்கு, "உங்களின் உணர்வுகளையும் நியாயங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த போராட்டத்தை எப்போது முடித்துக்கொள்வதாக இருக்கிறீர்கள்?' என கமிஷனர் கேள்வி கேட்க, "போராட்டம் முடிவது அரசு கையில்தான் இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 10-ந்தேதி முதல்வரை சந்தித்து பிரச்சனையின் வீரியத்தை விரிவாக விவரித்திருக்கிறோம். அப்போதே இதில் சீரியஸ் காட்டியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. தமிழக அரசு மறுக்கிறது. குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றணும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நிறுத்தணும். இதெல்லாம் நடந்தால்தான் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும். இல்லையெனில் மக்களை அமைதிப்படுத்த யாராலும் முடியாது' என எல்லோருமே வலியுறுத்தினோம். இதனை உன்னிப்பாக கவனித்த கமிஷனர், "உங்களின் உணர்வுகளை முதல்வரிடம் தெரிவிக்கிறேன்' என்பதோடு முடித்துக்கொண்டார்'' என்கிறார் ஜவாஹிருல்லா.

இந்த நிலையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் எடப்பாடி நடத்திய ஆலோசனை குறித்து விசாரித்தபோது, "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை வாபஸ் பெற முடியாது என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து மேற்கொண்டு விவாதிக்கவே முடியாது. அந்த சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் நாம் வாக்களித்திருப்பதால் எதிர்க்கவும் முடியவில்லை'' என எடப்பாடி சொல்ல, "குடியுரிமைச் சட்டம் மட்டுமே அவர்களுக்கு பிரச்சனை இல்லை. அந்த சட்டத்தின் ஒரு பகுதியாக குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் செயல்படுத்த நாம் துவங்குவதால்தான் பிரச்சினை' என அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.

அப்போது, "இதுகுறித்து தெளிவான விளக்கம் கொடுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். அது வந்ததும் தெளிவுபடுத்தலாம். எது எப்படி இருப்பினும், சட்டம்- ஒழுங்குக்கு பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எப்போது, எதில் நான் சறுக்குவேன் என தி.மு.க. எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்' என அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய எடப்பாடி, "குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானமெல்லாம் நிறைவேற்ற முடியாது. என்ன செய்யலாம் என மீண்டும் விவாதிப்போம். வண்ணாரப்பேட்டையில் நடந்தது குறித்து முழுமையான ரிப்போர்ட் கொடுங்கள்' என கேட்டு வாங்கி, அந்த ரிப்போர்ட்டைத்தான் பேரவையில் வாசித்தார் எடப்பாடி'' என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.

மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தன்னை மாற்றிக்கொள்ள எடப்பாடி தயாராக இல்லாத நிலையில், முஸ்லிம்களின் போராட்டமும் வீரியமடைந்து வருகின்றது. அதேசமயம், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் சட்டம்- ஒழுங்கிற்கும் பிரச்சினை உருவானால் தயவுதாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வழிகளை ஆராயுங்கள் என டெல்லியிலிருந்து வந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகளுக்கு பாஸ் செய்திருக்கிறது எடப்பாடி அரசு.

 

 

The Newstuff



 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.