Skip to main content

“3 மணிக்கு படுத்துட்டான்... 2 மணிக்கே தண்ணியடிச்சிட்டான்... பட்டைய உரிச்சிடுவன்...” - துரைமுருகன் அதிரடி 

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

ddd

 

"எனக்கு நீ ஓட்டுப் போடல, அதுக்காக நான் கோச்சிக்கல. எனக்குத் தெரியும், நீங்க எனக்கு ஓட்டுப் போட்டிங்க, போட்டுருப்பீங்க, போட வேணாம்னு சொன்னவன் பலர் எங்கக்கிட்டயே இருக்கான். தேர்தலன்னைக்கு 3 மணிக்குப் போய் படுத்துட்டான். 2 மணிக்கே தண்ணியடிச்சிட்டான். எதிர்கட்சிக்காரன்கிட்ட காசு வாங்கிட்டான். அது யார் யாருன்னு போலீஸை வச்சி கண்டுபிடிச்சிட்டேன். பட்டைய உரிச்சிடுவன் மகனுங்களா உங்கள. பஞ்சாயத்து தேர்தல் வருது, அப்போ தெரியும் யார் யாரை உரிக்கப் போறேன்னு. அதுவரைக்கும் விட்டுவைக்கறேன். தபால் வாக்குகள் இல்லையென்றால் வெற்றி பெற்றிருக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு சீட் தரணும் அப்படிங்கறதில் தலையிடுவேன். வேலை செய்தால்தான் பதவி''

 

கடந்த வாரத்தில் வேலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், காட்பாடி மேற்கு ஒன்றிய, வாலாஜா மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டங்கள், பொன்னையில் நியாயவிலைக் கடை திறப்பு என அடுத்தடுத்து நடந்தது. அந்தக் கூட்டங்களில்தான் மேற்கண்டவாறு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசினார்.

 

இதுபற்றி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "மிகமிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வாக்கு எண்ணிக்கையின்போது கண்ணீர்விட்டவர், ‘தொகுதிக்கு எவ்வளவோ செய்தேனே' என புலம்பினார்.

 

தொகுதியில் பலமாக வன்னியர்கள் இருந்தாலும் அதே அளவுக்கு ஈக்வலாக உள்ள மற்ற சாதியினரின் கூட்டணி பெரியதாக எடுபட்டது. வேலூர் மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.வை ஓரம்கட்டுகிறார்கள் என நாயுடு சமுதாய மக்களும், வேலூர் மாநகரச் செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ.வை ஓரம்கட்டுகிறார் என முதலியார்களும் எதிராக நின்றார்கள். அதேநேரத்தில் வன்னியர்களில் பெரும்பாலானவர்கள் 10.5 சதவித இடஒதுக்கீட்டால் அதிமுக ஆதரவு எடுத்தது தெரியவந்தது. எல்லாவற்றையும்தான் மனக்குமுறலாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனாலும், சீனியரான அவருக்கு இன்னும் சில விஷயம் புரியவில்லை.

 

2019 நாடாளுமன்ற தேர்தலின்போது காட்பாடி தொகுதியில் மட்டும் அதிமுகவை விட 55 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார் எம்.பி ஜெகத்ரட்சகன். அதே தொகுதியில் திமுகவின் பெருந்தலையான துரைமுருகன் தோல்வியின் விளிம்புக்குச் சென்றார் என்றால் அணுகுமுறைதான் காரணம். மாநில அரசியலில் கவனம் செலுத்தினாலும், உள்ளூர் தொண்டர்களை அணுசரிக்கணும். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றணும். 10 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியா இருந்ததால அவரால பெருசா செய்ய முடியலை. அதிமுக ராமு, வாக்கு கேட்கும்போது எளிய மக்களிடம் நெருக்கமாக வாக்கு கேட்டது, மரியாதை தந்தது மக்களைக் கவர்ந்தது.

 

வேலூர் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அவைத்தலைவர் முகமது சகி, "10 வருடமா திமுக தொண்டர்கள் வருமானமின்றி கட்சிக்கு செலவு செய்வதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அமைச்சர் பதிலே சொல்லலை. அவங்களுக்காக செலவும் செய்யலை. அவரது மகன் கதிர்ஆனந்த் எம்.பியாக இருக்கிறார். அவரும் செய்வதில்லை. அவரை மா.செ.வாக்கிடணும்னு மந்திரி விரும்புறாரு. கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாமல், காட்பாடியைவிட்டு வெளியே வராமல் இருந்தவருக்கு, வேலூர் எம்.பி. சீட் வாங்கித் தந்தார். வெற்றிபெற்றதும் தொகுதி வேலைகளைச் செய்வதை விட்டுவிட்டு கட்சி நிர்வாகத்தில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகிறார். கதிர் டார்ச்சர் தாங்க முடியாமல் துரைமுருகனால் பதவிக்கு வந்த திருப்பத்தூர் மா.செ. தேவராஜ் எம்.எல்.ஏ., அமைச்சர் வேலுவின் ஆதரவாளராகிவிட்டார். துரை முருகனின் தம்பி துரை. சிங்காரம், துரைமுருகனின் தீவிர ஆதரவாளரான வன்னிராஜா, மாநகர மண்டல தலைவராக இருந்த சுனில்குமார் போன்றவர்களால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள், இப்போது நேரடியாக கதிர் ஆனந்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

 

போதாக் குறைக்கு கதிர்ஆனந்தின் பி.ஏ. எனச் சொல்லிக்கொள்பவர்கள், கட்சி நிர்வாகிகளை மிக மோசமாகப் பேசுகிறார்கள். இதுயெல்லாம் சேர்ந்துதான் அமைச்சருக்கு எதிராக தேர்தலில் வேலை செய்தது'' என்றார்கள்.

 

துரைமுருகன் ஆதரவாளர் ஒருவரிடம் பேசியபோது, "தேர்தல் களத்தில் நிறைய செலவு செய்தார். 10 நாளைக்கு முன்னாடியே ஓட்டுக்கு, பூத் செலவுக்கு தர வேண்டியதைத் தந்துட்டார். அதில் 60 சதவீதம் கூட மக்களுக்குப் போய் சேரல. சிங்கத்தை சுண்டெலி ஜெயிச்சிடுமான்னு எகத்தாளமா தேர்தல் வேலையே செய்யல. உண்மை எங்கே வெளியில வந்துடுமோன்னு பயந்துக்கிட்டு, அமைச்சருக்கு எதிரா நெகட்டிவ் இமேஜ் மக்கள் மத்தியில் இருக்குன்னு காட்ட முயற்சி செய்யறாங்க. கட்சியில் உழைப்பவர்களை அமைச்சர் ஓரம்கட்டுவதில்லை. கதிர்ஆனந்தை அமைச்சர் அடக்கித்தான் வச்சிருக்கார். அமைச்சரை வீழ்த்த நடக்கும் அரசியலும் அவருக்குத் தெரியும்'' என்றார்.

 

தன் தொகுதியில் கட்சியைப் பலப்படுத்துகிறேன் என காட்பாடி தொகுதிக்குள் வரும் காட்பாடி ஒன்றியம், வாலாஜா ஒன்றியம், சோளிங்கர் மேற்கு ஒன்றியத்தில் 10 ஊராட்சிக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் என ஒன்றியத்தைப் பிரித்து ஒன்றியப் பொறுப்பாளர்களை நியமிக்க வைத்தார் பொதுச் செயலாளர் துரைமுருகன். கே.வி. குப்பம், குடியாத்தம் தொகுதியிலும் மாற்றங்கள் செய்ய, இதுவும் இப்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.