Skip to main content

"எல்லா ரவுடிகளும் சேர்ந்து பேரணி நடத்துகிறோம் என்றால் அனுமதி வழங்குவார்களா..?" - வன்னி அரசு பொளேர்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

hjk


ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் நீண்ட வருடங்களாக பேரணி நடத்த முயன்று வந்த நிலையில், அதற்குத் தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோர் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாகப் பேரணி தொடர்பான அறிவிப்பு வெளியாகு கூடவே பேரணிக்கு தடை என்ற அறிவிப்பும் தமிழக அரசு சார்பில் வெளியாகும். நீதிமன்றத்திலும் தமிழக அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அமைப்புக்கு இதுவரை பேரணி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாகக் கடந்த மாதம் இறுதியில் தமிழகத்தில் குறிப்பிட்ட 50 இடங்களில் பேரணி நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

 

இதற்கிடையே தமிழகத்தில் தற்போதைக்கு பேரணி நடத்த அனுமதி வழங்க முடியாது என்று தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாட, பேரணியை அடுத்தமாதம் நடத்த உயர்நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வரும் 31ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த நிமிடமே பாயும் என்ற எச்சரிக்கையும் நீதிபதி இளந்திரையன் வழங்கியுள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணி தமிழ்நாட்டுக்கு தற்போது தேவையான ஒன்றா? இந்த பேரணியால் தமிழ்நாட்டுக்கு சங்பரிவார் அமைப்புக்கள் என்ன சொல்ல வருகின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு தனக்கே உரியப் பாணியில் பதிலளிக்கிறார் விசிக கட்சியின் வன்னி அரசு. நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள்  பின்வருமாறு,  

 


தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தற்போது அனுமதி வழங்க மறுத்துள்ளார்கள். ஆனால் அந்த அமைப்புக்கு எப்போதும் அனுமதி வழங்கக் கூடாது, அதனை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறீர்கள். அதற்கு என்ன அடிப்படையான காரணம் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

 

முதலில் ஒன்றை உங்களிடம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பு கிடையாது. இதனை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு இந்த அமைப்புகளுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. தேர்தல் அரசியலில் இந்த அமைப்பு பங்கேற்காது. தேர்தல் அரசியலில் அதற்கு நம்பிக்கை இருந்ததில்லை. பயங்கரவாத சிந்தனை மட்டும்தான் அதற்கு மேலோங்கி இருக்கும். பயங்கரவாத செயல்கள் என்ற அடிப்படையில் காந்தியார் படுகொலையில் அந்த அமைப்புக்குச் சம்பந்தம் இருப்பதாகக் கருதியே 1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்தியாவில் எமர்ஜென்ஸி கொண்டு வரப்பட்ட போது மீண்டும் தடை செய்யப்பட்டது. பிறகு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அந்த இயக்கம் மீண்டும் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் ஒரு இயக்கம் மூன்று முறை தடை செய்யப்பட்ட வரலாறு வேறு எதற்காவது இருக்கிறதா? முதல் முறையாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்ட போது படேல் என்ன கூறினார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். 

 

" இந்த அமைப்பு ஜனநாயகத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லாத ஒரு அமைப்பாக இருக்கிறது. இந்நாட்டு மக்களுக்கு எவ்வித பாதுகாப்பையும் அளிக்காது. இதைத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் தேச அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும்" என்றார். அவர் கூறிய காரணம் இன்றளவும் அந்த அமைப்புக்குப் பொருந்தும். அவர்களின் எண்ண ஓட்டம் தற்போதும் அதே எண்ணத்தில் தான் இருக்கிறது. எனவே அந்த அமைப்பு தற்போது செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு செய்தால் விபரீத விளைவுகள் ஏற்பட இந்த அனுமதி காரணமாக அமைந்துவிடும். இதற்கு சிறிய உதாரணம், சில நாட்களுக்கு முன்பு திரிபுராவில் இவர்கள் கொண்டாடிய விழா ஒன்றில், ஏராளமான மசூதிகள் உடைக்கப்பட்டன, தேவாலயங்கள் எரிக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டன. பிற மதத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த அமைப்பு தமிழ்நாட்டில் அதே செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் அதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்று சனாதன எதிர்ப்பு இயக்கங்கள் முயன்று வருகிறோம். 

 


மூன்று முறை தடை செய்யப்பட்டாலும் தற்போது நாங்கள் நல்ல முறையில் ஜனநாயகப்பூர்வமாக செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மக்களுக்கான அமைப்பாகவே தொடர்ந்து இருந்து வருகிறோம். சேவை மனப்பான்மையே எங்களுக்கு முக்கிய நோக்கம். எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்று அவர்கள் தரப்பு கூறுகிறார்களே? 

 

அவர்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வில்லை. மூன்று முறை தடை செய்யப்பட்டாலும் சில சக்திகளின் உதவியோடு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. காந்தி படுகொலை செய்யப்பட்ட போது கூட இந்த அமைப்புக்குத் தடை விதிக்க சில காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது வரலாறு. சனாதன சக்திகளுக்கு இந்த மாதிரியான சிலர் காலங்காலமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. குறிப்பாக சேவை என்று சொல்கிறீர்கள், இவர்கள் என்ன சேவை செய்கிறார்கள். நாட்டிற்குத் தேவையான எதையாவது செய்கிறார்களா? கெட்ட சேவை செய்ய வேண்டுமானால் இவர்கள் பயன்படலாம், அதைத் தவிர இவர்களால் எதையும் செய்ய முடியாது என்பதுதான் இத்தனையாண்டுகள் அவர்களின் வரலாறு. எனவே வீண் சவடால் அவர்களை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டும். 

 


எல்லா ரவுடிகளும் சேர்ந்து பேரணி நடத்துகிறோம் என்று அனுமதி கேட்டால் இவர்கள் அனுமதி கொடுத்து விடுவார்களா? இந்தியாவில் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலைப்பு சட்டத்தை அழித்து ஒழித்துவிட்டு முழுமையாகச் சனாதனத்தை, வருணா சிரமத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களின் அடிப்படை நோக்கம். அதற்காகவே இந்த அமைப்பு தற்போது பேரணி என்ற வடிவத்தில் உள்நுழையப் பார்க்கிறது. ஆனால் அவர்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டிருக்கிறது. கொள்கை ரீதியாகவும், இயக்க ரீதியாகவும் இந்த அமைப்பு ஒரு மோசமான இயக்கம். காந்தியாரை கொன்றார்கள், பெருந்தலைவர் காமராஜரை கொல்ல முனைந்தார்கள்.

 

காமராஜர் அவர்கள் இந்த மாதிரியான ஒரு மோசமான அமைப்பு இந்தியாவில் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கனவே கூறியிருக்கிறார். இவர்கள் ராம ராஜ்ஜியம் அமைப்போம் என்கிறார்கள் என்றால் இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது. மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் மன்னராட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறுகிறார் என்றால் இந்திய அரசியலமைப்பையே அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றுதான் நாம் நினைக்கவேண்டி இருக்கிறது. ஆகையால் இந்த அமைப்பு தடை செய்வதைத் தவிர வேறு எந்த வாய்ப்புக்களையும் நாம் அவர்களுக்கு வழங்கக் கூடாது.


 

Next Story

வேட்பாளர்கள் யார்?- விசிக அறிவிப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிதம்பரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து சென்று முதல்வரை சந்தித்து ஆசிபெற்று வரும் நிலையில் இன்று விசிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாகவே செய்தியாளர் சந்திப்புகளில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ''இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அடையாளப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு இன்று முக்கியமான தேவையாக இல்லை. பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்தத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் இன்று மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் ஒருபுறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஒருபுறம் நிற்கிறோம் பாரதிய ஜனதா தலைமையிலான சங்பரிவார் ஒருபுறம் இருக்கிறது. எனவே இங்கு யுத்தம் நடப்பது காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் அல்ல, அல்லது இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் அல்ல. மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையிலான யுத்தம் தான் இது''என்றார். 

Next Story

அனைத்து அரசியல் கட்சிகளும் களமாடிய சிதம்பரம் தொகுதி; ஒரு பார்வை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 view of Chidambaram Parliamentary Constituency

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து  சிதம்பரம். காட்டுமன்னார்கோவில்(தனி). புவனகிரி. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த கனகசபைப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த தொகுதியில் 6  முறை காங்கிரஸ் கட்சியும், 4  முறை திமுக,  2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதி காவிரி டெல்டா பகுதியின் கடைமடையாக உள்ளது. இதனால் இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலை நம்பியே பொதுமக்கள் அதிகளவில் உள்ளனர். முக்கிய பிரதான சின்னங்களாக சிதம்பர நடராஜர் கோயில், பிச்சவரம் சதுப்பு நிலக்காடுகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது, ராகவேந்திரர் மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் உள்ளது.  காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தமிழகத்தின்  மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம்  ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு இதன் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

 view of Chidambaram Parliamentary Constituency

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய  கங்கைகொண்ட சோழபுரம் கோயில், அரியலூர் தொகுதியில் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கரைவெட்டி பறைவைகள் சரணாலயம் உள்ளது. அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு படிவுகள்  உள்ளதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளன.  ஜெயங்கொண்டம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி கிடைப்பது இயற்கையாக உள்ளது.

இந்தப் பகுதியில் சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.  தீ களிமண், தரையோடுகள், சுடு மண் குழாய்கள், செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், முந்திரி, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.  கல் குவாரிகளும் அதிக அளவு செயல்பட்டு வருகிறது.  தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இந்த தொகுதியில் தான். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில் தான் உள்ளது.

இப்படிப்பட்ட சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் பெண் வாக்காளர்கள் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளனர். மாற்று பாலினத்தவரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2-வது முறையாக இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த தொகுதிக்கு 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் போட்டியிடுவதால், இது நட்சத்திரத் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் வரும் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் அவரே போட்டியிடுகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தொகுதியில் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.