Skip to main content

“சாதி மதம் பெண்களை அடிமைப்படுத்தவே... ஆண்களுக்கு விழிப்புணர்வு தேவை” - வனிதா ஐபிஎஸ்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

 Vanitha IPS  Interview

 

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. புரட்சியாளர்கள் மூலம் எவ்வளவோ விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆனாலும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், ஆண்களுக்கு ஏற்பட வேண்டிய விழிப்புணர்வு குறித்து நம்மோடு கூடுதல் காவல்துறை இயக்குநர் வனிதா ஐபிஎஸ் உரையாடுகிறார்.

 

என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம். வளர்ந்த ஊர் மதுரை. இரண்டும் வீரத்திற்குப் பெயர்போன ஊர்கள் தான். ஆனால், வீரம் என்றாலே அது ஆண்களோடுதான் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. மனதில் அதீத தைரியத்தோடு செயல்படும் பெண்கள் ஒரு காலத்தில் ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் இருந்தார்கள். இப்போது அவர்களே வெளியே வந்து சாதிக்கிறார்கள். மகாகவி பாரதியாரும், தந்தை பெரியாரும் தான் எனக்கு பெரிய ரோல்மாடல்கள். திருமணம் பல நேரங்களில் பெண்கள் சாதிப்பதற்கு இடையூறாக இருக்கிறது. திருமணம் குறித்த என்னுடைய புரிதலை முற்றிலும் மாற்றியது தந்தை பெரியார் தான்.

 

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் இயங்குகின்றனர். திருமணமான பிறகு ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை வரும்போது குடும்பத்தை நிர்வகிப்பதற்காக பெண்கள் தான் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. குடும்பத்தையும் வேலையையும் ஒன்றாக நிர்வகிக்க முடியும் என்கிற நம்பிக்கை பலருக்கு இல்லை. பெண்களுக்கான சிறை மனதில் தான் இருக்கிறது. சதி, குழந்தைத் திருமணம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்குப் பெரிய போராட்டங்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் அவர்களுக்கு 'விடுதலை' தேவைப்பட்டது.

 

ஒரு பெண் ஏன் தன்னுடைய சுதந்திரத்தை ஆணிடமிருந்து வாங்க வேண்டும்? ஆண்கள் செய்யும் தவறுகளை நாங்களும் செய்ய வேண்டும் என்பதுதான் தற்போது பெண் சுதந்திரமாகக் கருதப்படுகிறது. மேலைநாட்டு உடைகள் அணிவதிலும் பெண் சுதந்திரம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஒரு காலத்தில் இன்ஜினியரிங் ஆண்களுக்கான துறையாகத் தான் இருந்தது. மருத்துவப் படிப்பும் அப்படித்தான் இருந்தது. இப்போது நிலைமை மாறி வருகிறது. தங்களுடைய பலத்தை மேலும் அதிகரித்து அதன் மூலம் பெண்கள் வளர வேண்டும்.

 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு வீதம், கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது என அனைத்தும் அதிகம். நம்முடைய அரசாங்கங்கள் தொடர்ந்து சமூகநீதியைத் தூக்கிப் பிடிப்பவையாக உள்ளன. அனைத்து இடங்களிலும் தற்போது பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் மனத்தடை நீங்கியுள்ளது. பெரியார் சொன்ன பல கருத்துக்கள் அப்போது ஏற்கப்படவில்லை. அதனுடைய மகத்துவம் இப்போது புரிகிறது. தமிழ்நாட்டில் இருந்தது போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் வேறு எங்குமே இல்லை.

 

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். யாருக்கும் நான் அடிமை இல்லை என்கிற எண்ணம் எனக்கு வந்தது பெரியாரால் தான். பெரியார் எதையும் யார் மீதும் திணித்ததில்லை. திருமணம் என்பதே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான இலக்கு அல்ல என்று உணர்த்தியவர் பெரியார். கற்பு என்கிற விஷயத்தை வைத்து தான் பெண்களை அடிமைப்படுத்தினர். கலப்புத் திருமணத்தை ஆதரித்தவர் பெரியார். அவர் கூறிய பல விஷயங்கள் ஆண்களை விட, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அதிகம் புரியும்.

 

அவரைப் போலவே அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரும் பல்வேறு காலங்களில் பெண்களுக்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றனர். ஆண்கள் செய்யும் அனைத்தையும் இந்த சமூகம் எளிதாகக் கடந்து செல்லும். ஆண்கள் போலவே ஒரு பெண்ணும் சகஜமாக அனைவரோடும் பேசினால் அவளை ரவுடி என்று சொல்வார்கள். பெண்களை மீண்டும் மீண்டும் அடிமைப்படுத்தவே இந்த சமூகம் விரும்புகிறது. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் தொடர்ந்து ஒடுக்கப்படுவது பெண்கள்தான். நீயும் நானும் சமம் என்று சொன்னதால் தான் தந்தை பெரியார் ஆதிக்கவாதிகளால் அதிகமாக விமர்சிக்கப்படுகிறார்.

 

ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று பிரிப்பது தான் தவறு. மனிதரை மனிதராக மதிக்க அனைவருக்கும் கற்றுத் தர வேண்டும். ஆண், பெண் இருவரையும் சமமாக மதித்து வளர்க்க வேண்டும். சமையற்காரராக வேலை செய்பவர்கள் கூட வீட்டில் பெண்களைத் தான் சமைக்கச் சொல்வார்கள். ஆணாதிக்கத்தின் குறியீடு இது. உடல் மீதான உரிமை தங்களுக்கு இருக்கிறது என்று தெரியாமலேயே பல பெண்கள் வாழ்கின்றனர். எதையுமே அடுத்தவருக்காகத் தான் நாம் செய்கிறோம். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.

 


 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.