Skip to main content

இது டிரைலர்தான்... நகர்புற உள்ளாட்சி தேர்தல் தான் திமுகவுக்கு கிளைமேக்ஸ் வெற்றி!! - ராம. சுப்ரமணியன் பேட்டி

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

jkl

 

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகப்படியான இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. அடுத்து வர இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இதே மாதிரியான வெற்றியைத் திமுக பெற வாயப்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நாம் அரசியல் விமர்சகர் ராம. சுப்ரமணியனிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நீக்கும்வரை தங்களின் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யில் நடைபெற்ற விவசாயிகளின் கருப்புகொடி போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த நபர்களின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறார்கள்? 

 

இந்த விவகாரம் கடும் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். விவசாயிகள் மீது வாகனம் மோதியபோது அமைச்சர் மகன் அங்கே இருந்ததாக ஒரு கருத்து கூறப்படுகிறது. அப்படி அவர் அந்த வாகனத்தில் இருந்திருந்தால் அது மிகப்பெரிய தவறு. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைக் கூட காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், விவசாய சங்கங்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்தனர். இது எதுவுமே எனக்கு நல்லதாக படவில்லை. 

 

விவசாயிகள் மரணம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முயன்றபோது தடுக்கப்பட்டனர். குறிப்பாக பிரியங்கா காந்தி சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியனர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறும்போது பெரும்பாலும் அரசியல் கட்சியினரை அங்கே செல்ல அனுமதிப்பதில்லை. சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்ற நோக்கில் அவ்வாறு காவல்துறையினர் தடுப்பார்கள். மேலும், பிரச்சனைகளை உண்டாக்காமல் இருக்கவே அவர்கள் இவ்வாறு செய்திருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். இவர்கள் இந்தப் பிரச்சனையை மூடி மறைக்க நினைத்தார்கள், அதை ஒருவர் வீடியோ எடுத்து வெளியே தெரியும்படி காட்டிவிட்டார். வீடியோ எடுத்தவரும் தற்போது மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதைத்தான் பெரிய துயரமாக பார்க்க வேண்டியுள்ளது. இதைப்பற்றி நாம் பேசினால் எங்கள் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என்றால் அனைவரும் பேசுகிறார்கள், வேறு மாநிலத்தில் நடைபெறும் சம்பவம் என்றால் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று அம்மாநில பாஜகவினர் பேசுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 

 

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. குறிப்பாக அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஏற்கனவே இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள், இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

நான் ஏற்கனவே கூறியது போலவே திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 75 சதவீதம் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அனைத்து இடங்களிலும் தற்போது வெற்றிபெற்றுள்ளது. ஒரு நல்ல ஆட்சியை தமிழகத்திற்கு ஸ்டாலின் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு மக்கள் இந்த வெற்றியைக் கொடுத்துள்ளார்கள். அவர் வெளிப்படையான ஆட்சியைத் தமிழகத்திற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார். அடுத்து வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக இதைப் போன்றொரு பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது.

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.