Skip to main content

"உக்ரைனோடு மட்டும் ரஷ்யா நின்றுவிடாது" - உலக நாடுகளை எச்சரிக்கும் ஓர் உக்ரைனியரின் கட்டுரை!

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

ukrainian president's aide writes about russia ukraine crisis

 

கடந்த எட்டு நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷ்யா, அந்நாட்டின் முக்கியமான இடங்களையும், கட்டுமானங்களையும் குறிவைத்துத் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்டவை ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உதவியாளர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக எழுதிய கட்டுரை ஒன்று தற்போது உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. 

 

ஜெலென்ஸ்கியின் உதவியாளரான ஆண்ட்ரி யெர்மக், ஜெலன்ஸ்கியுடன் பதுங்கு குழியில் இருந்தவாறு எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில், "உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் என்பது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஒட்டுமொத்த உலகளாவிய படுகொலைக்கான ஒரு முன்னுரையாக இருக்கலாம். எங்கள் நாட்டைப் பாதுகாக்க நாங்கள் எங்களின் கடைசி மூச்சு உள்ள வரை போராடுவோம். ஒரு வாரமாக, ரஷ்ய குண்டுகள் எங்களது தலைக்கு மேல் விழுந்து கொண்டிருக்கின்றன. எங்கள் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியிலும், படையெடுப்பாளர்களைத் தோற்கடிப்பதற்கான எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாகவும் ஒன்றுபட்டும் நிற்கிறோம். என்றைக்கு வேண்டுமானாலும் (மரணத்தின் மூலம்) நமது குரல்கள் அடக்கப்படலாம். ஆனால், அதுவரை நமது ஒவ்வொரு குரலும் சுதந்திர உக்ரைனுக்கான ஆதரவு குரலாகவே இருக்கட்டும். 

 

ukrainian president's aide writes about russia ukraine crisis

 

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அதிக இராணுவத் தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதோடு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தாக்குதலைத் தடுக்க உக்ரைனுக்கு உதவ ரஷ்யா மீது இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். நேரடியாகக் களத்தில் இறங்கி எங்களுக்காகப் போர் புரியுங்கள் என எங்கள் நட்பு நாடுகளை நாங்கள் கேட்கவில்லை. ஆனால் எங்கள் குடும்பங்களையும் எங்கள் நிலத்தையும் தொடர்ந்து பாதுகாக்க மேற்குலகம் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். ரஷ்யா தற்போது செய்துள்ள வலி மிகுந்த தவறுகளை உலகத்தின் முன்பு வெளிச்சம்போட்டுக் காட்ட நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு உதவுவதற்காக விரைவான முடிவுகளை எடுத்ததோடு, ரஷ்யப் பொருளாதாரத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்த எங்கள் நட்பு நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உட்பட உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். 

 

ஆனால், இது மட்டும் போதாது. எங்களுக்கு இன்னும் தேவை. இராணுவ உதவி வரும் என்று எங்களிடம் கூறுவதை நிறுத்துங்கள். இங்கு எங்களது சுதந்திரமும், அதைவிட அதிகமாக உங்களது சுதந்திரமும் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது. ரஷ்யா உக்ரைனோடு மட்டும் நின்றுவிடாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அது எப்படியும் இந்த மோதலுக்கு நேட்டோவை இழுத்துவிடும். மீண்டும் எந்த தவறையும் செய்துவிடாதீர்கள். உக்ரைனைக் கடந்தும் தனது சித்தாந்தத்தை எடுத்துச் செல்வதற்காக புதின் இந்த இரத்தக்களரியை நீட்டிப்பார். அவர் நிறுத்தப்பட வேண்டும். கிரெம்ளின் புதிய ரஷ்யப் பேரரசை உருவாக்க விரும்புகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மக்களின் எண்ணங்களையும், ரஷ்யாவின் நோக்கத்தையும் பற்றிப் பேசியுள்ள இந்த கட்டுரை தற்போது உலக அரங்கில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது. 


 

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.