Skip to main content

2000 வருடங்களுக்கு முந்தைய உருக்கு கழிவுகள்... விரிந்த பனை ஓலையில் கொட்டிய தடயங்கள் கண்டுபிடிப்பு!

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

Traces of 2000-year-old iron waste... were discovered on a sprawling palm leaf!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொற்பனைக்கோட்டை முதல் திருவரங்குளம் வரை தொடர்ச்சியாக உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான தடயங்களாக உருக்கு கழிவுகள், சுடுமண் குழாய்கள், செய்புரான்கல் உருக்கு உலைகள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உருக்கு கழிவுகளை பல ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு இதுவரை காணப்படாத அறிய வகையில் காணப்பட்டுள்ளது. இதுபற்றி புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவையின் நிறுவனர் புலவர். பு.சி.தமிழரசன், செயலாளரும், தொல்லியல் ஆர்வலருமான பெருங்களூர் மு.மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகியோர் இணைந்து பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் அமைந்துள்ள குறுக்கு வாரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

இப்பகுதியில் ஏராளமான இரும்பு தாதுக்கள் கிடைப்பதால் அவற்றை உருக்கி இரும்பு ஆயுதங்கள் தயாரித்துள்ளது தெரியவருகிறது. இப்படி தயாரிப்பதற்கு துளையிட்ட சுடுமண் குழாய்கள் மாவட்டத்தில் ஏராளமாகக் கிடைத்திருக்கிறது. தற்பொழுது குளிப்பதற்கு இப்பகுதியைப் பயன்படுத்தி வரும் மக்கள், முன்பு இப்பகுதியில் தண்ணீர் கிடைத்ததாலும், செம்புராங்கற்கள் நிறைந்த மேட்டுப்பகுதியாக இருந்ததாலும் சின்ன மோடு, பெரிய மோடு என மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் மக்கள் வசித்ததற்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது.

 

நாகரீகமடைந்த  மனித இனம் இரும்பின் பயன்பாட்டை அறிந்து போர் கருவிகளை செய்வதற்கு இப்பகுதியில் இரும்பு உருக்காலைகளை நிறுவியிருக்கலாம். இப்பகுதி பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு காலமாகவும் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். மேலும் இரும்பை பிரித்தெடுத்து கருவிகளாக உருவாக்கியவர்களுக்கு 'வல்லத்திராக்கோட்டை அரையர்கள்' வரிகள் வாங்கியதை திருவரங்குளம் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

 

இரும்பு தாதுக்களை உடைத்துப் பொடி செய்து அவற்றை ஊது உலையிலிட்டு, உருக்கி இரும்பை பிரித்து எடுத்திருக்கிறார்கள். இத்தாதுக்களை உருக்குவதற்கு அதிகளவு வெப்பம் தேவைப்படுவதால், தற்பொழுது கொல்லுப் பட்டறையில் காற்றை செலுத்தப் பயன்படுத்தப்படும் துருத்தி போன்ற அமைப்பால் ஊது உலையில் அதிக அழுத்தத்துடன் காற்றைச் செலுத்த சிறிய துளையிட்ட சுடுமண் குழாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கு வட்ட வடிவமாக தாழி போன்ற அமைப்புடன் உலைக்கலன்கள் புதைந்த நிலையில் கட்டுமானத்துடன் உள்ளது. இரும்பு உலையில் வாய்ப் பகுதியான விளிம்பின் மேல் பகுதியில் இரும்பு தாதுக்கள் வழிந்தோடும் வகையில் வெளிவட்டத்திலும், உள்வட்டத்திலும் பள்ளமான அமைப்புடன் உருக்கு உலைக்கலன்கள் காணப்படுகின்றன.

 

Traces of 2000-year-old iron waste... were discovered on a sprawling palm leaf!

 

இதுபோன்ற உருக்காலையின் தடயங்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஏற்கனவே பொற்பனையான்கோட்டையில் ஆய்வு செய்து அர்மேனியா போன்ற வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் தடயங்களுக்கு நிகராக இருந்ததை வெளிப்படுத்தியதை போலவே தற்போது இக்கண்டுபிடிப்பானது வழிந்தோடும் இரும்பு தாதுக்களை கீழ் தளத்தில் சேமித்ததற்கான உலையின் மேல் பகுதி மற்றும் மூக்கு பகுதி உடைந்த நிலையில் கிடைத்துள்ளது.

 

உருக்கிய இரும்பு தாதுக்களின் எஞ்சிய பகுதி ஆங்காங்கே செம்புராங் கல்லுடன் இறுகிய நிலையில் திரட்டுத்திட்டாகக் காணப்படுகிறது. மேலும் “தென்பனங்காட்டு நாட்டு பெருங்கோளியூர்” எனப் இப்பகுதி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் பனை மரங்கள் நிறைந்த இவ்விடங்களில் எஞ்சிய இரும்பு கழிவுகளை கொட்டும் போது பனைக்குருத்தின் மையப்பகுதியிலிருந்து ஓலை விரிந்த நிலையில் இரும்பு தாதுக்கள் அதன் மீது கொட்டப்பட்டு குருத்தோலை விரிந்த நிலையில் அச்சு வார்ப்பாக செம்புராங் கற்களின் மீது படிந்துள்ளது. 2000 வருடங்களுக்கு முற்பட்ட இவ்வமைப்பு தற்போதுள்ள நவீன கருவிகளின் அச்சு வார்ப்பு போன்று அழகாகவும்,  பழமையான தொல்லியல் சான்றாகவும்  உள்ளது.

 

இவ்விடத்திலிருந்து மேற்கே 1 கிலோமீட்டர் தொலைவில் பெருங்கற்கால ஈமத் திட்டைகள் 6 மீட்டர் விட்டத்தில் வெள்ளை நிற பளிங்கு கற்களால் உள்ளது. இவற்றின் காலம் (கிபி 200 - 150) என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசும், தொல்லியல் துறையும் இப்பகுதியைத் தொடர்ந்து ஆய்வு செய்தால் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும். ஆகவே இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று இப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றனர்.

 

 

 

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.