Skip to main content

இளையராஜா - மணிரத்னம் நிகழ்த்திய மாயாஜாலம்; மறக்க முடியா சில படைப்புகளின் தொகுப்பு

Published on 02/06/2022 | Edited on 03/06/2022

 

top 5 songs of ilayaraja manirathnam combo

 

தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகளில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மணிரத்னம் முக்கியமானவர்கள். இவர்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் காலத்தால் அழியாத காவியப்பாடல்களாய் இன்றும் நிலைத்து நிற்கின்றன. என்றும் நிலைத்து நிற்கும். 

 

உணர்வுகளால் நகரும் இந்த வாழ்க்கையில் எந்த உணர்வுகளின் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் எனக் கண்களுக்கு நெருக்கமாக மூளைக்கு மூர்க்கமாகக் காண்பிப்பது சினிமா. அந்த சினிமாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களில் தங்கள் தனித்திறமையால் மக்களை கட்டி போட்டுவைத்திருப்பார்கள்.

 

பல்வேறு வேலைகளினூடே பாடல்கள் கேட்பது என்பது இன்றைய தலைமுறைக்குப் பொழுதுபோக்காக இருக்கிறது. அப்படிப் பாடல்கள் கேட்கப்படும் போது பெரும்பாலும் ஓடவிடப்பட்ட பாடல்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தாலும் வேறு வேலைகளில் மூழ்கியிருப்பார்கள். ஆனால் இளையராஜா – மணிரத்னம் கூட்டணியிலான பாடல்கள் ஒளியாக ஓடுகையில் காட்சி அமைப்பைப் ரசிப்பதையும் ஒலியாக இசைக்கையில் பாடலை ரசிப்பதையும் யாராலுமே தவிர்க்கமுடியாது எனலாம். கேட்பவர் எந்த தலைமுறையாயினும் சரி. அதுவே இத்தனை ஆண்டுகாலமாய் இவர்களை இளந்தலைமுறையினருடன் போட்டிப்போட வைத்துக்கொண்டிருக்கும் மேஜிக். 

 

இளையராஜா – மணிரத்னம் இணைந்து பணியாற்றிய பாடல்களில்  காதல், நட்பு, உறவுப்பாசம், பெரும் வலியைச் சுமக்கின்ற தருணம் என பல்வேறு உணர்வுகளை அடக்கிய பாடல்கள் அடங்கியிருக்கின்றன. அதில் குறிப்பாக இப்போதும் நம்மை ரசிக்க வைக்கும், லயிக்க வைக்கும், தாளம்போட வைக்கும் ஐந்து பாடல்களைப் பார்ப்போம்...

 

top 5 songs of ilayaraja manirathnam combo

 

இதயத்தை திருடாதே – ஓ பாப்பா லாலி;

நோயுற்ற நாயகன் தன் காதலி நோயுற்றதாக இருப்பதாய் நினைத்துப் பாடும் பாடல். இது காதலிக்கு காதலன் பாடும் தாலாட்டு பாடல் என்பதை ‘தொடைகளில் தாங்கியே தாலாட்டிட காதலன் குழந்தை தான் காதலி’ என்னும் வரி நிரூபிக்கும். இருவர் மட்டுமே தனியாய் இருப்பதன் பின்னணியிலும் ஒரு குளிரான சூழலிலும் இந்த பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். திரையில் காட்டப்பட்டிருக்கும் அந்த இதமான குளிர் இப்பாடலைக் கேட்கையில் நமது புலன்களையும் வருடிவிட்டுத்தான் செல்கிறது. 

 

top 5 songs of ilayaraja manirathnam combo

 

மெளன ராகம் – மன்றம் வந்த தென்றலுக்கு;

நிச்சயித்த திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படாத போதான இந்த பாடல், வரிகள் தொடங்குவதற்கு முன்னால் வரும் ஹம்மிங் கேட்டாலே அது இந்த பாடல் என்று அனைவரும் சொல்லும்படியான ஒரு பாடல். அதிலும் தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன? நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன என்னும் வரி ஒட்டுமொத்த பிரச்சனைக்கான சூழலை வார்த்தைகளால் வர்ணித்துவிடும். அதை மாண்டேஜ் பாடலாக அருமையாகக் காட்சிப்படுத்தி உறவின் சிக்கல்களைத் திரையில் ஓடவிட்டிருப்பார் தேர்ந்த கதைசொல்லியான மணிரத்னம். 

 

top 5 songs of ilayaraja manirathnam combo

 

நாயகன் – தென்பாண்டி சீமையிலே;

சாதாரண ஒரு மனிதன் பெரும் ஆளுமையாகப் பெருமையுடன் கொண்டாடப்படும் சூழலிலும், அவரின் வளர்ச்சியின் போதும், இறப்பின் போதும் என நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் ஒலிக்கும் இந்த பாடல், அது தோன்றும் ஒவ்வொரு தருணத்திலும் நம்மை இசையில் லயித்துப்போக வைத்திருக்கும். இந்தப் பாடலை கமல்ஹாசன், பாலசுப்பிரமணியம், இளையராஜா என மூவர் பாடியிருப்பார்கள். ஒவ்வொரு தருணத்திலும் இந்த பாடல் ஏற்படுத்தும் உணர்வுகள் வித்தியாசமானதாக இருக்கும்.

 

கஷ்டமான சமயத்தில் தட்டிக்கொடுப்பதாகவும், அழுபவரை ஆற்றுப்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கும். பாடல் தொடங்கும் முன்னரே இளையராஜாவின் ஹம்மிங், பாடலைக் கேட்பதற்காக நம் மனதை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதைப் போலவே அமைந்திருக்கும்.

 

top 5 songs of ilayaraja manirathnam combo

 

அக்னி நட்சத்திரம் – ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா;

இந்தப்பாடல் அன்றும் சரி, இன்றும் சரி ராஜாவிற்காகவே எழுதப்பட்ட பாடலைப் போலவே இருக்கும். ஆனால் இயக்குநர் மணிரத்னம் அந்தப் படத்தில் இந்தப் பாடலில் நாயகன் நடனமாடுவதைப் போலக் காட்சி அமைத்திருப்பார்.

 

ஒரு படம் முடிவதற்குள்ளேயே இயக்குநரும் இசையமைப்பாளரும் முரண்பட்டுச் சண்டையிட்டுக் கொள்வதையெல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்படியான ஒரு பாடலை படத்திற்காக ராஜா பாடியதும் அதை மணிரத்னம் படத்தில் பயன்படுத்தியதும் அவர்களின் நட்பின் நெருக்கத்தை இன்றைக்கும் பிரதிபலிக்கிறது 

 

top 5 songs of ilayaraja manirathnam combo

 

தளபதி – ராக்கம்மா கையத்தட்டு;

கொண்டாட்டமான ஒரு திருவிழா பாடலாய் இளைஞர் கூட்டம் ஆடி கலைத்து மகிழும் பாடல். இப்பாடலுக்கான இசையில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாம். வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும், ஆர்ப்பரிக்கும் கொண்டாட்ட உணர்வை நமக்குள் உண்டாக்கிவிடுகிற சக்தி இந்த பாடலுக்குள் உண்டு. துள்ளல் பாடல் என்றால் எப்படி இருக்க வேண்டுமென அக்காலத்தில் எடுத்துக்காட்டாய் விளங்கிய பாடல் இது. 

 

 

Next Story

ஆசிய திரைப்பட விருது; 4 பிரிவுகளில் 'பாரடைஸ்'!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
 Asian Film Award; 'Paradise' in 4 sections!

நியூட்டன் சினிமா தயாரிப்பில் வெளியான பாரடைஸ் படம் ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டர் ஆகிய 4 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

நியூட்டன் சினிமாவின் பாரடைஸ் படம் மிகவும் மதிப்புமிக்க 17வது ஆசிய திரைப்பட விருதுகளில் நான்கு பிரிவுகளில் பரிந்துரைகளுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் பிரசன்ன விதானகே, சிறந்த திரைக்கதை பிரசன்னா விதானகே மற்றும் அனுஷ்கா சேனநாயக்க மற்றும் சிறந்த எடிட்டிங் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  சினிமா சாதனைகள், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் திறமைகளை சிறப்பித்துக் காட்டும் வகையில் புகழ்பெற்ற ஆசிய திரைப்பட விருதுகள் அகாடமியால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆசிய திரைப்பட விருதுக்கு ஒரு படம் பரிந்துரைக்கப்படுவது ஒரு படத்தின் வெற்றி மற்றும் தரத்தின் முக்கிய குறிகாட்டியாக கருதப்படுகிறது. முக்கிய பிரிவுகளில் பாரடைஸ் படம் பல விருதுகளுக்கு ஆசிய திரைப்பட விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டது படத்தின் தரம் மற்றும் தகுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நான்கு பரிந்துரைகளும் பாரடைஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை, இது சர்வதேசத் திரைப்பட சமூகத்தில் படத்தின் தாக்கத்தையும் அதிர்வலையையும் நிரூபிக்கிறது. பாரடைஸ் படம் அக்டோபர் 2023ல் பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் (கிம் ஜிசோக்) விருதை வென்றது. நியூட்டன் சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான பரிந்துரை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நியமனம், உலகளாவிய பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் சினிமாவை ஆதரிப்பதற்கும் தயாரிப்பதற்கும் நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் பிரசன்ன விதானகே தனது அதீத திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஐந்து NETPAC விருதுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். இது அவரது அசாத்திய திறமைக்கு மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும்.

பிரசன்ன விதானகே மற்றும் அனுஷ்கா சேனாநாயக்க ஆகியோருக்கான சிறந்த திரைக்கதைக்கான பரிந்துரையானது, பாரடைஸ் திரைப்படத்தின் திரைக்கதைக்கு ஒரு சான்றாகும். இது படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.  பொன்னியின் செல்வன் மற்றும் RRR போன்ற குறிப்பிடத்தக்க படங்கள் உட்பட 600 படங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எடிட்டரான A. ஸ்ரீகர் பிரசாத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவரது பங்களிப்பு அதன் கதை மற்றும் காட்சி கதைச்சொல்லலை வடிவமைப்பு முக்கியமானது.

மணிரத்னம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும், பாரடைஸ் படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் பெர்னாண்டோ மற்றும் மகேந்திர பெரேரா ஆகியோரின் சிறந்த நடிப்பைக் கொண்டுள்ளது. ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு, கே இன் இசை, தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு ஆகியவற்றால் படத்தின் கலை ஆழம் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.   நியூட்டன் சினிமாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆன்டோ சிட்டிலப்பில்லி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்: "இந்த பரிந்துரைகள் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம். இது எங்கள் படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, எங்கள் குழுவின் கூட்டு மனப்பான்மை மற்றும் கடின உழைப்பின் கொண்டாட்டம்" என்று கூறினார். நியூட்டன் சினிமா, அதன் விநியோக பங்குதாரரான செஞ்சுரி ஃபிலிம்ஸுடன் இணைந்து, தயாரித்த இரண்டு படங்களை உலகளவில் திரையரங்குகளில் கொண்டு வருகிறது. பாரடைஸ் மார்ச் 2024ல் வெளியிடப்படும் மற்றும் பேமிலி பிப்ரவரி 2024ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

Next Story

பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் கமல் படம்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

kamal nayagan re release update

 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் படம், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கபட்டு வருகிறது. மேலும் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. இதில் கமலுக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்க இளையராஜா இசையமைத்திருந்தார். முக்தா ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் 3 தேசிய விருதுகளை வாங்கியது. மேலும் 60வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்திய சார்பில் அனுப்பப்பட்டது. 

 

இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகளை கடக்கிறது. இதையொட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி இப்படம் மீண்டும் திரையரங்கில் ரீ ரிலீசாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 120 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் கணிசமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான புதிய ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே கன்னடத்தில் மட்டும் டப் செய்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

சமீபத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படம் ரீ ரிலீசானது. கிட்டத்தட்ட 3 வாரங்கள் ஓடியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளியாகவுள்ள நாயகன் படத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் கமலின் 234வது படத்திற்கு கூட்டணி அமைத்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.