Skip to main content

முத்தையா கொலை வழக்கு; பரபரப்பாகும் ஆவணப் படம்! 

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Thisayanvilai muthaiya case

 

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளைப் பகுதியை அடுத்த அப்புவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் காலணி தைக்கும் தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவருக்கு மூன்று பிள்ளைகள். இவரது மூன்றாவது மகன் முத்தையா (19), தனது பகுதியின் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அது காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி முத்தையா, தனது வீட்டின் அருகே இருக்கும் ஒரு ஓடக்கரையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். முத்தையாவின் தந்தை கன்னியப்பன் கொடுத்த புகாரின் படி முதலில் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் திசையன்விளை காவல்துறை இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. பிறகு இந்த வழக்கை விசாரித்த திசையன்விளை காவல்துறை, முத்தையாவை பட்டியலினத்தைச் சேர்ந்த சுரேஷ், மதியழகன் மற்றும் பிரகாஷ் ஆகிய மூவர் தான் கொலை செய்தனர். கொலைக்கு காரணம், சுரேஷின் தங்கையை முத்தையா கேலி கிண்டல் செய்ததன் காரணமாகவே கொலை நடந்துள்ளது எனத் தெரிவித்து எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரை கொலை வழக்காக மாற்றி வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்து ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

ஆனால், நடந்தது அப்பட்டமான ஆணவக் கொலை, இது மறைக்கப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொலையான முத்தையா குடும்பம், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுரேஷ், மதியழகன் மற்றும் பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளது. அந்த ஆவணப் படத்தில், இந்தக் கொலை வழக்கில் நியாயத்தை நிலை நிறுத்த போராடி வரும், திராவிட தமிழர் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மனிதம் அமைப்பு ஆகிய இயக்கங்கள் இந்த வழக்கின் ஆரம்பம் முதல் தற்போதைய நிலை வரை விரிவாக ஆராய்ந்து அதன் திசை மாற்றங்களை பகிர்ந்துள்ளனர்.

 

இந்த ஆவணப் படத்தில் பேசும் முத்தையாவின் தந்தை கன்னியப்பன், அவரது மகன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததை உறுதி செய்கிறார். அந்தப் பெண்ணின் உறவினர் பெருமாள் ஏற்கனவே முத்தையாவை தாக்கியதையும் அவர் தெரிவிக்கிறார். தொடர்ந்து அவர் ஜூலை 23ம் தேதி நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார். அதில், முத்தையாவின் நண்பர் கார்த்தி தான் இறுதியாய் அவரை அழைத்து சென்றதாகவும், ஆனால், மகனை தேடியபோது அவர் கொல்லப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஆறு நபர்கள் வந்ததாகவும் சொல்கிறார். மேலும், திசையன்விளை காவல் ஆய்வாளரும், ஊராட்சி மன்றத் தலைவரும் ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடு பேசியதாகவும் விவரிக்கிறார். 

 

இந்த வழக்கில் திசையன்விளை காவல் ஆய்வாளர், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததையும் அந்த ஆவணப் படத்தில் உறுதி செய்கிறார். 

 

இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மதியழகனின் தாய், “என் மகனை காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொன்னார்கள்” என்று சொல்லி உடைந்துபோய் அழுதார். பிரகாஷின் மனைவி பேசும்போது, “கொலை சம்பவம் நடந்த அன்று என் கணவர் என்னுடன் வீட்டில்தான் இருந்தார்” என்கிறார். மூவரையும் கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளச் சொல்லி காவல்துறை கடுமையாக தாக்கியதாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் சொல்கின்றனர்.

 

இந்தக் கொலையின் அடிப்படை காரணமாக காவல்துறைச் சொல்லும் சுரேஷின் தங்கை முத்தையாவை தனக்கு தெரியாது என்றும் காவல்துறையினர் தன்னை ஒப்புக்கொள்ள சொன்னர் என்றும் சொல்லியுள்ளார். 

 

முத்தையா கொல்லப்பட்ட அன்று அவரை அழைத்துச் சென்ற கார்த்தி, போலீஸின் அடியின் காரணமாக பொய் சாட்சி சொன்னேன். உண்மையில் அன்று பெருமாளும், வேறு ஒருவரும் அங்கு வந்தனர். நான் அங்கிருந்து தப்பிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

 

மனிதம் அமைப்பைச் சேர்ந்த எஸ்.ஜி.ரமேஷ் பாபு என்பவர் ஒரு உண்மைக் கண்டறியும் குழுவை அமைத்து அறிக்கை தயார் செய்துள்ளார். அதிலும் இது ஒரு அப்பட்டமான ஆணவக் கொலை என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், எஃப்.ஐ.ஆர்.-ல் முழுமையான விசாரணை நடக்காமல் திருத்தங்கள் நடந்துள்ளன. போலீஸும், பேரூராட்சி தலைவரின் கணவரும் ஏன் நஷ்ட ஈடு குறித்து பேச வேண்டும் என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 

 

இந்த ஆணவக் கொலை குறித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், “இந்த ஆணவக் கொலை என முத்தையாவின் தந்தை சொல்லியுள்ளார். ஆனால் போலீஸ் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மூவரை கைது செய்துள்ளது. காவல்துறை கொலைச் செய்யப்பட்ட முத்தையா குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், கைது செய்யப்பட்ட ஆதி திராவிடர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து நீதி கேட்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.  

 

பலியான முத்தையாவின் தந்தை இது ஆணவக் கொலை என சொன்னபிறகும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை; இதில் அப்பாவி மூவர் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தமாக சொல்கிறது அந்த ஆவணப் படம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர்மழை ; நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Nellai, tenkasi district schools have holiday due to rain

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் சென்னையில் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதாலும், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாலும் சென்னையில் உள்ள பள்ளிகளுக்குத் தமிழக அரசு சார்பில் இன்றும் (09.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சி.பி.எஸ்.இ என அனைத்து பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு எதிரொலியாக 6வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகச் சென்னையில் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நெல்லை மற்றும் தென்காசியில் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளும் ரத்து எனவும் அறிவித்துள்ளனர். 

Next Story

பட்டப்பகலில் பயங்கரம்; தொழிலதிபர் ஓட ஓட விரட்டிப் படுகொலை!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023

 

businessman was chased to incident in Nellai

நெல்லையின் பாளையை அடுத்த மணப்படை வீடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுருளிராஜன். ரியல் எஸ்டேட் காண்ட்ராக்ட், மற்றும் கார்களை வாங்கி விற்கிற பல தொழில்களை செய்து வருகிறார். தவிர சுருளி மீது கொலை முயற்சி வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தனது பாதுகாப்பின் பொருட்டு வெளியே செல்கிற போதெல்லாம் தனது காரில் இரும்பு ராடு ஒன்றையும் வைத்திருப்பாராம்.

இந்நிலையில் நேற்று மாலை சுருளிராஜன் பாளையின் சட்டக்கல்லுரிப் பக்கம் காரில் வந்துகொண்டிருந்த போது அவரைத் தொடர்ந்து பின்னால் வந்த வாகனம் ஒன்று அவரது காரின் மீது மோதியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியான சுருளிராஜன் மோதியது எதுவென்று பார்ப்பதற்காக காரை விட்டு இறங்கியபோது, பைக்குகளில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை வெட்டியுள்ளது. இதனால் சுதாரித்த சுருளிராஜன் அந்தக் கும்பலிடமிருந்து தப்பியோடிய போது விடாமல் அவரைச் சாலையில் விரட்டிய கும்பல் அவரின் கழுத்து, தலை, தோள்பட்டைகளில் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடியது. ரத்தச்சகதியில் கதறியபடி சரிந்த சுருளிராஜனின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்திருக்கிறது.

தகவலின் பேரில், மாநகர துணை போலீஸ் கமிசனரான ஆதர்ஷ் பஷேரா உதவி போலீஸ் கமிசனர் பிரதீப், உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுருளியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இதற்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்டத்தில் தெரிய வந்திருக்கிறது. சுருளிராஜனுக்கும் அவரின் ஏரியாவைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்குமிடையே கோயில்கொடை விழா மற்றும் சுருளிராஜன் மகளை பெண் கேட்டல் தொடர்பாக பகையும் இருந்துள்ளது. 

தவிர அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அண்மையில் விபத்தில் இறந்திருக்கிறார். அது விபத்தல்ல. திட்டமிடப்பட்ட கொலை. பின்னணியில் சுருளிராஜன் தரப்பினர் இருக்கலாம் எனக் கருதியவர்கள் அவர் மீது போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர். குடும்பப் பிரச்சனையா என்று சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படையினர், ஒருவரைப்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.