Skip to main content

அமைச்சருக்காக நடக்கும் வசூல்?

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Tasmac Bar owners audio leak

 

தனியார் வசமிருந்த மதுபானக் கடைகளை ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடையாக மாற்றினார். தற்போது சுமார் 4000 டாஸ்மாக் மதுபானக் கடையுடன் கூடிய பார் செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டாஸ்மாக் பார் ஏலம் விடப்பட்டு வந்தது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வந்தது. 

 

இந்நிலையில், கடந்த 2021 முதல் டாஸ்மாக் பார் ஏலம் விடப்படவில்லை. இத்துறையின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கரூர் குரூப் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து பார்களையும் தன்வசம் கொண்டுவர முயற்சி செய்தார். இதற்கு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் டாஸ்மாக் பார்களில் கரூர் டீம் மெகா வசூலை நடத்தியது. பணம் கொடுத்தால் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்ற நிலைக்கு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர். மாமூலை வழங்காத பார் உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர்.

 

Tasmac Bar owners audio leak

 

இதை எதிர்த்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பார் உரிமையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தபோதும், அப்போதைய இத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, சுப்ரீம் கோர்ட் வரை வழக்கை கொண்டுசென்றார். இச்சூழலில், போலீஸ், கலால் துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளை சரிக்கட்டி, சுமார் 4 ஆயிரம் பார்கள் கள்ளத் தனமாக செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் பார் இல்லையென்றால் மது பிரியர்கள் பொது இடங்களிலேயே மது அருந்தும் நிலை வந்துவிடக் கூடாதென்பதற்காக, இந்த கள்ள விற்பனையை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டும் காணாமலிருக்கிறார்கள். 

 

தற்போது, செந்தில்பாலாஜி சிறைக்கு சென்றதால் இத்துறையின் பொறுப்பு அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது. இவர் வந்தபிறகு, பார் உரிமையாளர்களிடமிருந்து எந்த பணமும் பெறக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். எனவே பார் உரிமையாளர்கள் நிம்மதியடைந்தனர். 

 

Tasmac Bar owners audio leak

 

இப்படியான நிலையில், மது விற்பனை அதிகமாக நடக்கும் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், தீபாவளி பரிசாக அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பணம் தர வேண்டும் என்று, டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த வாய்ஸ் மெசேஜில் பேசும் டாஸ்மாக் பார் சங்க நிர்வாகி ஒருவர், “நமது பார் உரிமையாளர்களுக்கு காலை வணக்கம். குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் பகுதிகளுக்கு முருகனும், சரவணனும் சேர்ந்து வருவார்கள். அவர்களிடம் நாம் கூறியபடி கொடுத்துவிட வேண்டுகிறோம். இன்று இரவுக்குள் நாம் செலுத்திவிட வேண்டியுள்ளது. இன்று இரவு கொடுத்தால்தான் அவர்கள் செலுத்த வேண்டிய இடத்திற்கு நாளை செலுத்த முடியும். ஆகவே காலதாமதப் படுத்தாமலும், வருபவரை காக்க வைக்காமலும் உடனடியாகக் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது நமது நன்மைக்கே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

 

Tasmac Bar owners audio leak

 

இந்த வாய்ஸ் மெசேஜ் டாஸ்மாக் பார் உரிமையாளர்களை கலங்கடித்துள்ளது. நன்கு விற்பனையாகும் டாஸ்மாக் பார்களில் ஒரு லட்சம் வீதமும், மற்ற டாஸ்மாக் பார்களில் 50 ஆயிரம் ரூபாய் வீதமும் செலுத்தும்படி வாய்மொழி உத்தரவாகத் தெரிவித்துள்ளதாக பார் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். செந்தில் பாலாஜியிடமிருந்து தப்பித்தோம் என்று நினைத்த நிலையில், மீண்டும் இதுபோன்ற மெகா வசூலால் பார் தொழில் நடத்துவதே மிகுந்த சிரமமாக உள்ளதாக, நம்மிடம் பெயர் கூறமுடியாத ஒரு உரிமையாளர் தெரிவித்தார்.

 

தீபாவளிக்கு முந்தைய நாள் இந்த வாய்ஸ் மெசேஜ் அனைத்து பார் உரிமையாளர்களுக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் இந்த மெகா வசூல் பற்றி ஒரு பதிவும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் சுமார் 4200 டாஸ்மாக் பார்களில், ரூ.50,000 வீதம் 21 கோடி ரூபாய் வசூல் செய்து அமைச்சருக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக டாஸ்மாக் தலைமை நிர்வாகியான ராமதுரை முருகனிடம் பேசினோம் அவரோ, அப்படியெல்லாம் எந்த வசூலும் நடக்கவில்லை என்று தொடர்பைத் துண்டித்தார். 

 

இதுதொடர்பாக டாஸ்மாக் இயக்குநரை தொடர்பு கொண்டபோது தொடர்பை எடுக்கவில்லை. அமைச்சர் முத்துசாமியை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் தொடர்பை எடுக்கவில்லை. இம்முறை டாஸ்மாக் விற்பனைக்கு எந்த டார்கெட்டும் நிர்ணயிக்கவில்லையென்று அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு முழுவதும் அனுமதியில்லாமல் டாஸ்மாக் பார்கள் நடைபெற்று வரும் சூழலில், முறையாக ஏலம் விடப்பட வேண்டுமென்று பார் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.