Skip to main content

எம்.ஜி.ஆரின் தீவிர விஸ்வாசிக்கு அதிமுக அவைத்தலைவர் பதவி! தமிழ்மகன் உசேன் அரசியலில் கடந்து வந்த பாதை! 

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

Tamilmagan Hussein's path in politics

 

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்ததையொட்டி நேற்று (01.12.2021) சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக உள்ள தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதோடு, கட்சியின் மற்ற நிர்வாகிகளும் அவரை வாழ்த்தினர்.

 

இந்நிலையில், நாகர்கோவில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனின் அரசியல் பயணம் குறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். அப்போது, ‘தமிழ்மகன் உசேன் பள்ளி, கல்லூரி படிக்கும்போதே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்துவந்தார். பின்னர் குமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராகவும் எம்.ஜி.ஆர் திமுகவில் இணைந்ததும் அதில் தன்னையும் இணைத்துக்கொண்டார் தமிழ்மகன் உசேன்.

 

பின்னர் திமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர். மூலம் அரசுப் பேருந்தில் ஓட்டுநர் வேலை கிடைத்தது. இந்நிலையில், தமிழ்மகன் உசேன் நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு 24 பயணிகளுடன் அரசுப் பேருந்தை ஓட்டிச்செல்லும் போது, ரோடுகளில் மக்கள் கூடி நிற்பதைப் பார்த்து, ஆட்டோ ஓட்டுநர்களிடம் என்ன விஷயம் எனக் கேட்டார். அப்போது எம்.ஜி.ஆரை திமுகவிலிருந்து நீக்கிவிட்டனர் என அவர்கள் கூறியதைக் கேட்ட தமிழ்மகன் உசேன், தான் ஓட்டிச் சென்ற அரசுப் பேருந்தை நடுரோட்டில் பயணிகளுடன் நிறுத்திவிட்டு, ஒரு வெள்ளை பேப்பரில் ‘சர்வாதிகார ஆட்சியில் அரசு பதவி வேண்டாம்’ என்று தனது ராஜினமா கடிதத்தை நடத்துனரிடம் எழுதிக் கொடுத்தார்.

 

பின்னர் அங்கிருந்து கார் மூலம் இரவு நாகர்கோவில் வந்த தமிழ்மகன் உசேன், குமரி மாவட்டத்திலுள்ள 101 எம்.ஜி.ஆர். கிளை நிர்வாகிகளை அழைத்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், திமுகவைக் கண்டித்து தமிழ்நாட்டிலே முதல் தீா்மானம் போட்டார். அதன் பிறகு இரவோடு இரவாக சென்னை சென்ற அவர், எம்.ஜி.ஆரை சந்தித்து அதிமுக தொடங்கும்வரை அவருடனே இருந்தார்.

 

எம்.ஜி.ஆர். கட்சி தொடங்குவதற்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியமான 11 பேரில் 4வது கையெழுத்தை தமிழ்மகன் உசேன் போட்டார். அதன்பிறகு அதிமுகவின் குமரி மாவட்ட முதல் மா.செ.வாக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், அப்போது காங்கிரஸ் கோட்டையாக இருந்த குமரி மாவட்டத்தில் பட்டித்தொட்டியெல்லாம் அதிமுகவைக் கொண்டு சென்று கிளைகள் அமைத்து எம்ஜிஆரிடம் பாராட்டையும் பெற்றார்.

 

பின்னர் எம்.ஜி.ஆர். மறைந்ததும் ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணியில் இணைந்தார். அதன் பிறகு ஜெயலலிதா அதிமுகவைக் கைப்பற்றியதும் ஜெயலலிதாவுடன் இணைந்து அதிமுகவில் தொடர்ந்தார். பின்னர் அதிமுகவில் ஜூனியர்கள் தலைதூக்க, சீனியர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டனர். குமரி மாவட்டத்தில் கோலோச்சிய தளவாய் சுந்தரத்தால் பெரிதும் ஓரங்கட்டப்பட்ட தமிழ்மகன் உசேன், ஒருகட்டத்தில் அரசியல் முகமே தெரியாத அளவுக்குத் தள்ளப்பட்டார்.

 

மேலும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்தும் தமிழ்மகன் உசேன் வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்டு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடன் கேட்பதும், வட்டிக்குப் பணம் வாங்கியதும், இதனால் அவர் வசித்த வீடு வங்கி ஏலத்திற்குப் போகும் நிலை வந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் கோலோச்சிய அவர், ஜெயலலிதா காலத்தில் கண்ணீா் வடித்ததைப் பத்திரிகை செய்திகளில் பார்த்த ஜெயலலிதா, தமிழ்மகன் உசேனுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பதவி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவி என கொடுத்து அவரை ஆறுதல்படுத்தியதோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒன்றையும் வழங்கினார்.

 

தன்னுடைய 68 வருட அரசியல் வாழ்க்கையில் இன்று அதிமுகவின் அவைத்தலைவராக, அதுவும் தற்காலிக தலைவராகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என தமிழ்மகன் உசேன் குறித்து நினைவுகூர்ந்தனர்.

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.