Skip to main content

"சீமானுக்கு கார், சொத்துக்கள் எல்லாம் எத்தனை நாள் வேலை திட்டத்தில் வந்தது... சீமான் ஒரு ஆரிய காரிய கைக்கூலி.." - சூரியா சேவியர்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

vc

 

தமிழகத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தை நீக்க வேண்டும், அது அனைவரையும் சோம்பேறிகளாக மாற்றுகிறது என்று சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்திருந்தார். இதனைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வழிமொழிந்தார். இந்நிலையில் நூறுநாள் வேலை திட்டம் அவர்கள் சொல்வது போல நீக்க வேண்டிய ஒன்றா? என்பது குறித்து சமூக செயற்பாட்டாளர் சூரியா சேவியரிடம் நாம் கேள்வி எழுப்பினோம்.

 

நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு, "  சீமான் குருமூர்த்தியின் வேலைத் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருப்பவர். மிகப்பெரிய ஆரிய காரிய கைக்கூலி சீமான் என்றுதான் அவரை நான் எப்போதும் விமர்சனம் செய்வேன். 100 நாள் வேலைத் திட்டத்தை சொல்கிறார், மீதமுள்ள 265 நாளுக்கு இவர் வேலை கொடுப்பாரா? அவர் இதுபற்றி ஏதேனும் சொல்ல முடியுமா? இவரின் பேச்சு என்பது உழைக்கும் மக்களை இழிவுபடுத்துகிறது. இவர் நூறுநாள் திட்டத்தை வேண்டாம் என்கிறார், அவர் கூறி முடிந்ததும் அடுத்த நாளே பாஜக அண்ணாமலை அதனை ஆதரிக்கிறார்.

 

இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து கிளம்பி வருவார்கள், இவர்கள் அஜெண்டாவே அதுதான், இது சிலருக்குத் தெரியாது, அவர்களின் செயல்பாட்டை அறிந்தவர்களுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும். நூறுநாள் வேலைத் திட்டத்தில் காலையில்  ஒன்பது மணிக்கு வேலைக்குச் சென்று 12 மணி வரை வேலைபார்த்துவிட்டு அங்கேயே அசதியாக சோறு சாப்பிட்டுவிட்டு மக்கள் படுத்திருக்கும் புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு இங்கே பார்த்தீர்களா, நூறுநாள் வேலைத் திட்டத்தில் எப்படி வேலை செய்யாமல் தூங்குகிறார்கள் பாருங்கள், என்று பேசுவதெல்லாம் அறிவில்லாத் தனமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இந்த நூறு நாள் வேலைத்திட்டத்திலேயே முறைகேடு நடக்கிறது என்று பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துகிறார்கள். நிலைமை இப்படி இருக்க பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது. வேலை செய்யும் இடத்தில் அவர்கள் மீது வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தால் அந்த குறிப்பிட்ட நபர் சரிசெய்யப்பட வேண்டியவர்தான், அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நூறுநாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் தூங்குகிறார்கள், பேன் பார்க்கிறார்கள் என்று கூறினார் அதை எப்படி புரிந்துகொள்வது, ஆக மொத்தம் இவரைப் போன்ற ஆட்களை எல்லாம் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். 

 

இவர் விலை உயர்ந்த காரில் செல்கிறாரே, எங்கே உழைத்து சம்பாதித்தார், அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு நாய்களுடன் கொஞ்சுகிறாரே, அது எங்கே இருந்தது வந்தது. இவர் அணிகின்ற உடையிலிருந்து, தங்கி இருக்கின்ற வீடு உள்பட இவருக்கு எத்தனை நாள் திட்டத்தின் படி இந்த சொத்துக்கள் வந்தது என்று அவர் சொல்வாரா? 100 நாள் திட்டத்தில் வேலை செய்து தினம் 200 ரூபாய் சம்பாதிப்பவனிடம் இவ்வளவு கேள்வி எழுப்பினால், அவருக்கு வந்த சொத்துக்களுக்கு நாங்கள் கேள்வி எழுப்ப கூடாதா? அதற்கு அவர் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். திராவிடமே வேண்டாம் என்பார் ஆனால் திராவிட வீட்டில் பெண் எடுப்பார், பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சபாநாயகராக இருந்த காளிமுத்து வீட்டில் பெண் எடுக்கத் தெரிகிறது, அப்புறம் என்ன திராவிடம் வேண்டாம், கொம்பு வேண்டாம்.

 

சீமான் குறிப்பிட்ட சிலரின் அஜெண்டாவை தமிழகத்தில் செயல்படுத்தும் ஒரு நபராகவே இருந்து வருகிறார். அதைத் தாண்டி மக்கள் நலனுக்காக அவர் எப்போதுமே அவர் செயல்பட்டது இல்லை" என்றார். 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்