Skip to main content

காவிகளுக்கு அஞ்சும் விளையாட்டு வீரர்கள்; பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறது - சுந்தரவள்ளி

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

Sundaravalli  Interview

 

சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி அவர்களை சந்தித்து மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டங்களைப் பற்றி பல கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

பாலியல் வன்கொடுமை அடிப்படையில் பாஜக எம்பியான பிரிஜ்பூஷன் சரண்சிங்கை கைது செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி, தான் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று கூறிய பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்களே?

இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள் வீதியில் இறங்கி பிரிஜ்பூஷண் சரண்சிங்கை கைது செய்யக் கோரி பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் பிரிஜ்பூஷண் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு சென்று போஸ் கொடுத்து வருகிறார். இது போன்ற செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது என்று உலக நாடுகள் பட்டியலிட்டு வருகிறது. இந்தியாவிற்கு செல்லும் படித்த பெண்கள் அல்லது சுற்றுலா செல்லும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் பயப்படும் வகையில் தற்பொழுது இந்தியா காவிகளுடைய ஆட்சியில் மிக மோசமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலையில் தான் இங்குள்ள பெண்கள் வாழ வேண்டிய நிலை உள்ளது.

 

புகார் கொடுத்தவர்கள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கொடுத்தவுடன் கைது செய்ய முடியாது என்று அண்ணாமலை கூறி வருகிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன?

காவல்துறை முதல் நீதிமன்றம் வரை அனைத்து இடத்திற்கும் சென்று புகார் அளித்து உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து அதற்கு நீதி கிடைக்காததனால் தான் மல்யுத்த வீராங்கனைகள் இத்தனை நாள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் பாஜகவில் இருக்கின்ற கே.டி.ராகவன் தொடங்கி எடியூரப்பா வரை அனைவரது பெயரிலும் பாலியல் வழக்கு உள்ளது. ஆனால் இந்த பாஜக இவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? பாஜகவில் நெடுநாட்களாக இருந்த காயத்ரி ரகுராம் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் அவரை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவரை தரக்குறைவாகப் பேசியவர் தான் இந்த அண்ணாமலை. புகார் அளித்தவர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீராங்கனை ஆவார். அவர் அளித்த புகாரின் பேரில் உடனடியாக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்வது தானே சட்டம். ஆகவே, இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக பல யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க விசயமாகப் பார்க்கப்படுகிறது.

 

உலக மல்யுத்த அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்து குறிப்பிட்ட நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளதே?

உலக மல்யுத்த அமைப்பு இந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆதரவு தந்திருப்பதை நாம் மிகவும் நல்ல விஷயமாகத் தான் பார்க்க வேண்டும். மேலும், விவசாயத் திட்டத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக பஞ்சாபில் போராடிய விவசாயிகள் இந்த மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீச முயன்றபோது அவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க மோடிக்கு 5 நாள் கெடு கொடுப்போம் என்று கூறி சமாதானம் செய்துள்ளனர். ஆதலால், மோடி அரசின் மீது மக்களுக்கு எப்போதோ நம்பிக்கை போய்விட்டது. இதுபோன்ற செயல்கள் மீண்டும் அதிகரிக்குமானால் அடுத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் மோடி தூக்கி எறியப்படுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 

மற்ற விளையாட்டுகளைப் போல தான் இந்த மல்யுத்த விளையாட்டும். ஆனால், மற்ற விளையாட்டு வீரர்கள் எங்களுக்கு குரல் ஏதும் கொடுக்கவில்லையே என்ற ஏக்கம் மல்யுத்த வீரர்களுக்கு இருக்கிறதே?

துப்பாக்கிச் சூட்டில் தங்கம் வென்றவர், வில்வித்தையில் தங்கம் வென்றவர், பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உட்பட சிலர் இந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே சமயத்தில் மக்களால் கொண்டாடப்படும் மற்ற வீரர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்காதது, நமக்கு அரசியல் வேண்டாம் எனவும், மீறி இதுபோன்ற செயலுக்கு ஆதரவு தெரிவித்தோமேயானால் தமக்கு வாய்ப்பு தர மறுக்கப்படுமோ என்ற அச்சத்தில் தான் இருப்பார்கள். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தான் பெண்கள் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பதக்கங்களை வென்று வருகின்றனர். மல்யுத்தம் என்ற விளையாட்டு மட்டுமல்ல. மற்ற விளையாட்டுகளில் கூட பெண்கள் கவனிக்கப்படுவதில்லை. மீறி சில பெண்கள் அவ்வப்போதும் இந்த மாதிரி விளையாட்டுகளில் கலந்துகொள்ள நினைத்தாலும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என நினைத்து மற்ற வீரர்களும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

 

 

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்