Skip to main content

எழுத்தாளர் டூ வேட்பாளர்... என்னென்ன செய்திருக்கிறார் இவர்???

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரான சு. வெங்கடேசனை வரும் மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியுள்ளது, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
 

su venkatesan

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரான சு. வெங்கடேசனை வரும் மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியுள்ளது, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், மதுரை புறநகர் மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். எழுத்தாளர் சு.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர். மதுரையிலுள்ள ஹார்விபட்டியில் பிறந்தார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தனது 18 வயதிலேயே ஓட்டை இல்லாத புல்லாங்குழல் என்ற கவிதை நூலை எழுதினார்.
 

அதன்பின் 2011ல் வெளிவந்த ‘காவல் கோட்டம்’ புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இந்த புத்தகத்திற்காக அவர் 10 ஆண்டுகள் உழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது காவல் கோட்டம் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ‘நாவல் எழுதத் துவங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம்’.
 

மதுரை குறித்த பார்வை அவருக்கு என்றும் உண்டு. கீழடி அகழாய்வு நடைபெறாமலிருந்தபோது அதை எதிர்த்து போராடியவர்களில் இவரும் ஒருவர், கீழடியை உலகளவில் கொண்டுசென்றதற்கு  இவரும் ஒரு காரணம். ஜல்லிக்கட்டு உட்பட தமிழ், தமிழர் சார்ந்தவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். தனது நாவல்களில் அதிகமான வரலாற்று பதிவுகளைக் கையாள்வது இவரது சிறப்பாகும். மற்றொரு நாவலான சந்திரஹாசம் பாண்டியர்கள் குறித்தது. தொடராக வெளியாகி, அண்மையில் புத்தகமாக வெளிவந்த வேள்பாரி மிகுந்த வரவேற்பை பெற்றது. 
 

இப்படியாக மதுரை சார்ந்த வாழ்வியலிலும், வரலாற்றிலும் அதிக அக்கறை கொண்டவராக இருக்கும் வெங்கடேசன்தான் தற்போது மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். 2011 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.