Skip to main content

கல்லிலே கலைவண்ணம் கண்ட பாண்டிய மன்னர்கள்... கட்டிடக்கலை குறித்த ஒரு மாணவியின் ஆராய்ச்சி...

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Found Pandiyas inscription near Ramanathapuram

 

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகிலுள்ள திருமாலுகந்தான் கோட்டை கோயில் பாண்டிய மன்னர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்குச் சான்றாக உள்ள பழம்பெரும் கோயில். இக்கோயில் பற்றி ஆய்வு செய்த கல்லூரி மாணவி அக்கோயிலின் கட்டிடக்கலை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அந்நிறுவனத்தின் மூலம் கல்வெட்டு, கோயில் கட்டிடக்கலை ஆகியவை குறித்த கற்பித்தலை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே செய்து வருகிறார். இதுதொடர்பாக மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் அவர் வழங்கி வருகிறார். இப்பயிற்சிகளைப் பெற்ற ராமநாதபுரம் அருகேயுள்ள பால்கரையைச் சேர்ந்த, சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவி வே.சிவரஞ்சனி, திருமாலுகந்தான் கோட்டை கோயில் பற்றி ஆய்வு செய்துள்ளார். 

 

Found Pandiyas inscription near Ramanathapuram

 

இதுபற்றி மாணவி வே.சிவரஞ்சனி கூறியதாவது; ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிதும் அறியப்படாத பழமை வாய்ந்த கோயில்களில், திருமாலுகந்தான் கோட்டை சிவன் கோயிலும் ஒன்று. இங்கு சிவன், அம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இதில் சிவன் சன்னதி, அடி முதல் முடி வரை கருங்கற்களால் அமைக்கப்பட்ட கற்றளியாக, பாண்டியர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்குச் சான்றாக உள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இது மட்டுமே முழு கற்றளி (கற்கோயில்கள்) என்பது இதன் சிறப்பு.

 

முற்காலப் பாண்டியர்களால் முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கழுகுமலை வெட்டுவான்கோயில், திருப்பத்தூர் சிவன் கோயில் ஆகியவற்றுக்கு இணையான சிறப்புடையதாக இக்கோயில் திகழ்கிறது. இவை மூன்றும் சதுர வடிவில் அமைந்த நாகர விமானம் கொண்டவை. திருப்பத்தூர் கோயில் மூன்று தளங்களுடனும், மற்றவை இரண்டு தளங்களுடனும் உள்ளன. மூன்று கோயில்களிலும் முதல் தளத்தில் உள்ள கர்ணக்கூடு தேர் போன்ற அமைப்பிலும், வண்டிக்கூடு போன்ற அமைப்பில் உள்ள சாலை சிறிய கோயில் போன்றும் உள்ளன. இதில் சிற்பங்கள் உள்ளன.

 

கழுகுமலையில் உள்ள யாளி வரிசைகள் சிம்ம யாளிகளாகவும், மற்றவற்றில் மகர யாளியாகவும் உள்ளன. பூதகணங்கள் ஆடிப்பாடி மகிழும் சிற்ப வரிசை, நாசிக்கூடுகள், கொடிக்கருக்குகள் ஆகியவை மூன்று கோயில்களிலும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

Found Pandiyas inscription near Ramanathapuram

 

திருப்பத்தூர் கோயில் முதல் தளத்தில் உருளை போன்ற அமைப்பில் உள்ள விருத்தஸ்புடிதம் என்ற அமைப்பு, இக்கோயில் அம்மன் சன்னதியின் வெளிப்புறச்சுவரில் நீளமான தூண் போன்ற அமைப்பில் உள்ளது. கர்ணக்கூடு, சாலைக்கூடு, தேவகோட்டம், பஞ்சரம், விருத்தஸ்புடிதம் ஆகியவை சிறு கோயில்கள் போன்ற அமைப்பில் இருப்பவை. இவற்றை கோயிலின் பின்பக்கச் சுவர், விமானத்தின் மேல் தளங்களில் அமைத்து அழகுபடுத்தியுள்ளார்கள்.

 

விமானத்தின் வெளிப்பகுதி சுவரில், சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. இதில் லிங்கத்தின் மீது கால் வைத்த கண்ணப்ப நாயனார், நந்தி மேல் உமாமகேஸ்வரர் எனப் பல சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.