Skip to main content

தொடங்கியது மொய் விருந்து.. மொய் எழுத கணினி பதிவுகள்

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
computer moy

  
முதல் முறையாக மொய் பதிவுகள் கணினி மூலம் பதிவு செய்வது தொடங்கியுள்ளது. எழுதுவதை எளிமையாக்க ஆன்லைன் மூலம் மொய் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதியிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை தொகுதியிலும் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் முடியும் வரை ஒவ்வொரு நாளும் மொய் விருந்துகளால் கலைகட்டி இருக்கும் கிராமங்கள். தினசரி மனமனக்கும் கறி விருந்து ஒவ்வொரு நாளும் கோடிகளில் புரளும் பணம். இது தான் மொய் விருந்து. 1980 காலக்கட்டத்தில் ரூ. 50, 100 என்று தொடங்கிய மொய் விருந்தில் இன்று லட்ச ரூபாய்கள் வரை மொய் வைக்கப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகபட்சமாக ஒருவர் ரூ. 2 லட்சம் வாங்குவது பெரிய அளவில் பேசப்படும். ஆனால் தற்போது ஒருவர் மட்டுமே ரூ. 5 கோடிகள் வரை மொய் வாங்கிக் கொண்டு செல்கிறார். அவ்வளவு வேகமாக மொய் விருந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
 

 

 

    மொய் வாங்குதற்காக ஆட்டுக்கறி உணவு கொடுக்க வேண்டும். அதற்காக டன் கணக்கில் கறி சமைக்க வேண்டும். ஊரெங்கும் பதாகை விளம்பரங்கள், வண்ணமயமான பத்திக்கைகள் அச்சடித்து கொடுத்து மொய் வாங்க வேண்டும் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனி நபராக மொய் விருந்து வைத்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக 10, முதல் 20 நபர்கள் வரை ஒரே விருந்து வைத்து மொய் வாங்கிச் செல்கின்றனர். அதே போல பேராவூரணி பகுதியில் 30 பேர்கள் வரை ஒரே விருந்து வைத்து மொய் வாங்கிச் செல்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குடி தொகுதியில் வடகாடு, கீழாத்தூர் வரை மட்டுமே மொய் விருந்து நடத்தினார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆலங்குடி வரை மொய்விருந்து பரவியுள்ளது. 

 

computer moy


 

    மொய் வசூல் நாளில் உறவினர்களும், நண்பர்களும் செய்யும் மொய் பணத்தை நோட்டுகளில் எழுதிக் கொள்ள அதற்காக உள்ள எழுத்தர்கள் மூலம் மொய் நோட்டுகளில் எழுதிக் கொண்டு பணத்தை வசூல் செய்வது வழக்கம். இப்போதும் அப்படித் தான் நடந்து வருகிறது. மொய் எழுத்தருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 900 வரை கொடுக்க வேண்டும்.
 

    ஆனால் இந்த ஆண்டு கீரமங்கலம் பகுதியில் முதல் முறையாக கணினியில் மொய் பதிவு செய்யும் தொழில்நுட்பம் நுழைந்துள்ளது. கீரமங்கலம் அருகில் உள்ள பெரியா@ர் இணைப்புச் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மொய் விருந்தில் 3 மடிகணினினளுடன் பெண்களும், இளைஞர்களும் காத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட நபருக்கு மொய் செய்ய வந்தவர்கள் மடிகணினியும் காத்திருந்தவர்களிடம் தங்கள் ஊர், பெயர், மொய் தொகை, புதிய மொய் அனைத்தையும் சொல்ல விரைவாக கணினியில் பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொண்டு யாருக்கு எவ்வளவு மொய் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ரசீது உடனடியாக வழங்கப்பட்டது. அதே மண்டபத்தில் வழக்கமான முறையில் மொய் நோட்டுகுளில் எழுதிக் கொண்டிருந்தனர் பலர். இந்த புதிய முறையை மொய் செய்ய வந்த உறவினர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். இந்த மாதத்தில் இன்னும் பல மொய் விருந்துகளில் கணினியில் மொய் பதிவு செய்ய முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

computer moy


    கணினியில் மொய் பதிவு செய்வது குறித்து அந்த நிறுவனத்தின் பிரபு கூறும் போது.. மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கணினி மூலம் மொய் பதிவு செய்வதை அறிமுகப்படுத்தினோம் முதலில் தயக்கம் காட்டிய விழா குடும்பத்தினர் பிறகு அதன் சிறப்புகளை அறிந்து மொய் பதிவு செய்ய வாய்ப்புகள் கொடுத்தனர். அதன் பிறகு தான் கீரமங்கலம், பேராவூரணி பகுதிகளில் மொய் விருந்துகள் நடப்பதை அறிந்து புளிச்சங்காடு கைகாட்டியில் அலுவலகம் திறந்து முதல் முறையாக பெரியா@ர் இணைப்புச் சாலை மண்டபத்தில் மொய் பதிவு செய்து கொடுத்திருக்கிறோம். இன்னும் பல பேர் கேட்டுள்ளனர்.
 

    நோட்டுகளில் மொய் எழுதுவது போல கணினியில் பதிவு செய்து உடனடியாக ரசீதும் கொடுப்பதுடன் விழா நடத்தும் நபருக்கு எஸ்.எம்.எஸ். செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மொய் பதிவுகள் முடிந்த பிறகு உடனடியாக அனைத்து பக்கங்களையும் ஊர் வாரியாக, அகர வரிசைப்படி பிரிண்ட் எடுத்து புத்தகமாக கொடுப்பதுடன் விழா நடத்தும் நபரின் செல்போனில் அதற்கான ஆப் ஏற்றப்பட்டு அனைத்து விபரங்களையும் அதில் அறிந்து கொள்ள வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறோம். எங்கே இருந்தாலும் மொய் நோட்டை புரட்டிப் பார்க்காமல் செல்போனிலேயே மொய் விபரங்களை உடனடியாக தெரிந்து கொள்ளலாம். எந்த தவறும் நடக்காமல் இது உதவி செய்கிறது. இந்த ஆண்டு மொய் விருந்து நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் முன் பதிவு செய்துள்ளனர் என்றார்.
 

 

 

    கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம். செரியலூர், பனங்குளம், குளமங்கலம், பெரியா@ர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு, அணவயல், புள்ளாண்விடுதி, நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 1500 பேர் மொய் விருந்து நடத்துகின்றனர். அதில் சுமார் ரூ. 600 கோடிகள் வரை வசூலாகிறது. பேரிய அளவு மொய் வாங்கும் நபர்கள் உடனடியாக பணத்தை எண்ணுவதற்கு சிரமப்படுவதை அறிந்த பல வங்கி அதிகாரிகளே கடந்த ஆண்டுகள் வரை சென்று வசூல் செய்து எண்ணி கொடுத்தனர். ஆனால் வடகாடு பகுதியில் இந்த ஆண்டு பணம் எண்ணும் இயந்திரம் வாடகைக்கு விடப்படுவதாக கூறப்படுகிறது. இன்னும் 2 மாதங்கள் கீரமங்கலம் பகுதியில் தினசரி கறிவிருந்துக்கு பஞ்சமில்லை..
            

 

 

 

 

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.