Skip to main content

"4ம் தேதி இறந்த ஜெயலலிதாவின் கண் 5ம் தேதி எப்படி அசையும்? குப்பைத்தொட்டியில் போடக் கூட தகுதியற்றது..." - லட்சுமணன் தடாலடி

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

றKL


நீண்ட வருடங்களாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வரிடம் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கியிருந்தார். கிட்டத்தட்ட சில நாட்களாகவே பரபரப்பைக் கிளப்பி வந்த அந்த அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை தரப்பட்டிருந்தால் அவர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர் இறப்புக்கு சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர ஆணையத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் அவர்களிடம்  நாம் சில கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. பலரும் இதுதொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்துள்ள நீங்கள் இந்த அறிக்கை குப்பையில் தூக்கிப்போட வேண்டிய ஒன்று என்று காட்டமாகக் கருத்து தெரிவித்திருந்தீர்கள். நீங்கள் இவ்வாறு கூற என்ன காரணம்?

 

நான் என்னுடைய மற்றொரு பேட்டியில் இந்த அறிக்கை குப்பையில் போடக் கூட தகுதியில்லாத அறிக்கை என்று சொல்லியிருப்பேன். இந்த நேரத்தில் அதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு அந்த ஆணையத்தின் மீதோ, தனிப்பட்ட அவர் மீதோ எந்த விருப்பு, வெறுப்பும் கிடையாது. பிரபல ஆங்கில நாளேடு கூட இந்த அறிக்கையை Dustbin-ல் (குப்பைத்தொட்டி) போட வேண்டிய ஒன்று என்று கருத்து தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையை சட்டம் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடமாக வைக்க வேண்டும். ஏனென்றால் ஒரு ஆணையம் எப்படிச் செயல்படக் கூடாது என்பதற்கு இந்த ஆணையம் மிகச் சிறந்த உதாரணம். 

 

ஜெயலலிதா வீட்டில் நினைவிழந்த நிலையிலிருந்து மருத்துவமனைக்கு 25 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டார் என்றும், அவர் மயங்கி விழ சசிகலா உள்ளிட்ட யாரும் காரணமில்லை என்றும், ஜெயலலிதாவுக்கு அதற்கு முன்பு இருந்த  உடல் நலப் பாதிப்பு காரணமாகவே அவர் மயங்கினார். அதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதை முதல் பாராவிலேயே அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா மருத்துவர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டார். ஆனால் இந்த ஆணையம் மருத்துவமனையில் ஜெயலலிதாவைக் கட்டுப்படுத்தியது போல் அவர் தெரிவித்துள்ளார். 

 

ஜெயலலிதா இறப்பு தேதியை மாற்றிக் கூறியிருக்கிறார். இதற்கு காரணமாக ஜெயலலிதா உறவினரான தீபக்கின் திதி சாட்சியத்தை எடுத்துக் காட்டியுள்ளார். ஜெயலலிதா இறந்தபோது தீபக் எங்கிருந்தார். மேலும் எக்மோ கருவி வைத்த பிறகு ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளுமே தங்களின் சதித்திட்டத்தை காலம் கடத்துவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு என்று கூறுகிறார். 24 மணி நேரம் காலம் தாழ்த்தி இவர் கூறுவதைப் போல் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்தார்கள் என்று வைத்துக்கொண்டாலுமே அதனால் என்ன மாற்றம் நடைபெற்றது. அதே நடைமுறைதானே நடந்திருக்கும், பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்று இருப்பார். 4ம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால் ஆறுமுகசாமி முதல்வராக ஆகியிருப்பாரா இல்லை வேறு யாராவது ஆகியிருக்கப் போகிறார்களா? 

 

4ம் தேதி திதி கொடுத்தார்கள் என்று சொல்லும் ஆறுமுகசாமி அதற்காக தீபக் திதி கொடுத்த புகைப்படத்தை ஆணைய அறிக்கையில் ஜெராக்ஸ் போட்டு வைத்துள்ளார். ஜெயலலிதா 2016ம் ஆண்டு இறந்தார், திதி எப்போது கொடுப்பார்கள் 2017ல். ஒரு ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஆதாரமாக இவர் கொடுத்துள்ளதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? மேலும் 5ம் தேதி காலை ஜெயலலிதா இறந்த அன்று, நரம்பியல் நிபுணர் தான் ஜெயலலிதா கண்ணை காலையில் சோதித்தேன். அசைவு இருந்தது என்று ஆணையத்திடமே தெரிவித்திருந்தார். இதை ஆறுமுகசாமி கவனத்தில் ஏன் கொள்ளவில்லை. 4ம் தேதி இறந்திருந்தால் கண் மட்டும் 5 தேதி அசையுமா? என்பதை ஆறுமுகசாமி ஆணையம்தான் விளக்க வேண்டும்.


 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.