Skip to main content

தாய் தந்த ‘க்ளுவால்’ சிக்கிய மகன்! கேரள நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Son trapped by mother Clue  Judgment of the Court of Kerala

 

மிக அரிதிலும் அரிதான குற்ற வழக்குகளில் குற்றம் நிரூபணமாகி தீர்ப்பு வெளியாகும்போது அது ஏகத்திற்கும் பரபரப்பாகிவிடும். அதுபோன்றுதான் அக். 13 அன்று கேரளாவின் கொல்லம் மாவட்ட கூடுதல் மற்றும் சிறப்பு செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தற்போது கேரளாவில் வைரலானதுடன் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.

 

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வரும் அஞ்சல் பகுதியின் ரப்பர் எஸ்டேட் ஓனரான விஜயசேனன், தன் ஒரே மகள் உத்ராவை (25), பத்தனம்திட்டாவின் அடூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் (27) என்பவருக்கு 2019இல் திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். திருமணத்தின்போது, கிலோ அளவு தங்க நகைகள், நிலம், பணம், கார் என்று வரதட்சணையாக வாரிக் கொட்டியிருக்கிறார்.

 

திருமணமான சில மாதங்களில் வாழ்க்கை கசக்க, சொத்தை அனுபவிக்கவும், வேறொரு திருமணம் செய்யவும், மனைவி உத்ராவை தன் வீட்டில் வைத்தே பாம்பை ஏவிவிட்டு கொல்ல சூரஜ் முயற்சி செய்து அது முடியாமல் போகியுள்ளது. இருந்தும் சூரஜ், இரண்டாம் முறையாக 2020 மே 07 அன்று கடும் விஷத் தன்மை கொண்ட பாம்புடன் உத்ராவின் வீட்டிற்கே போய், பாம்பை ஏவி மனைவியைக் கொலை செய்து மாட்டிக்கொண்டார். கட்டிய மனைவியைக் கணவனே பாம்பை ஏவி கொலை செய்த சம்பவம் கேரளாவை உலுக்கியெடுத்தது.

 

இதுவரையிலும் நடந்தவை நக்கீரனில் விரிவான கட்டுரையாக வெளிவந்திருந்தது.

 

இதன் பிறகுதான் இந்த வழக்கில் சூடும், க்ளைமேக்ஸும்.

 

கேரள போலீசின் கொடைக்கு அஞ்சியே நடந்தவற்றை வரி விடாமல் கேரள ரூரல் க்ரைம் பிரான்ஞ்சிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார் சூரஜ். கொல்லம் ரூரல் எஸ்.பி.யான ஹரிசங்கர் மற்றும் க்ரைம் பிரான்ச் டி.ஒய்.எஸ்.பி.யான அசோகன் குழுவினர் குற்றவாளிக்கு எதிரான 32 மெட்டீரியல் எவிடன்ஸ்களைக் கைப்பற்றியவர்கள், அன்றைய தினம் உத்ராவுடன் சூரஜ் மட்டுமே இருந்ததையும் சாட்சியுடன் உறுதி செய்தனர். ஆனால், பாம்பை ஏவியது சூரஜ்தான் என்பதற்கான ஆதாரமில்லாததால், அதனை உறுதிசெய்யும் வகையில் டி.ஒய்.எஸ்.பி. அசோகன் தலைமையிலான குழுவில் வனத்துறையினர், பாம்பு ஆராய்ச்சியாளரான மவீஷ்குமார் அடங்கிய குழுவினர், தனியாக ரூம் செட் செய்து, கட்டிலில் உத்ரா அளவிற்கு பொம்மை உருவாக்கப்பட்டு பொம்மையின் கையில் கோழி சதையைக் கட்டி விஷப் பாம்பை சாதாரண முறையில் இயல்பாகக் கடிக்க விட்டுள்ளனர்.

 

Son trapped by mother Clue  Judgment of the Court of Kerala
                                                                 சூரஜ்  

 

பின்னர் அந்த விஷப் பாம்பை புரோகேட் பண்ணி, சீண்டி, ஆங்காரப்பட வைத்து கடிக்க வைத்துள்ளனர். இரண்டு முறையின்போதும் பாம்பு கொத்திய பாகத்தின் வீரியம், பல்லின் ஆழம், கடியின் தன்மை ஆகியவற்றை ஆதாரங்களுடன் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தவர்கள், மூன்று நாட்கள் பாம்பைப் பட்டினி போட்டு அதற்கு வெறியேறிய பிறகே ஏவிக் கொலை செய்ததை அறிவியல்பூர்வமாக விசாரணையில் உறுதிசெய்ததையும் சமர்ப்பித்திருக்கின்றனர்.

 

கொல்லம் கூடுதல் செசன்ஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்திருக்கிறது. 13.10.2021 அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதியான மனோஜ், சூரஜ் மீதான குற்றங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் சூரஜ்ஜை குற்றவாளி என்று அறிவித்ததோடு தண்டனை விபரம் அடுத்த நாள் அறிவிக்கப்படும் என்றும் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.

 

கேரளாவின் மிக முக்கியமான முற்றிலும் மாறுபட்ட இந்தக் குற்ற வழக்கின் தீர்ப்பை மாநிலமே பரபரப்புடன் உற்று நோக்கியது. அக். 14 அன்று சிறப்பு நீதிமன்றத்தின் வெளியே பரபரப்பு பற்றியிருக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி, குற்றவாளி சூரஜ்ஜிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது வைரலாகியதுடன் அனைத்து மீடியாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் பிரேக்கிங் நியூஸ் ஆனது.

 

சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞரான மோகன்ராஜ், வரதட்சணை விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட விஸ்வமயாவின் வழக்கிற்காகவும் நியமிக்கப்பட்டவர்.

 

Son trapped by mother Clue  Judgment of the Court of Kerala
                                                           மோகன்ராஜ்

 

சூரஜ் வழக்கில் எதிர்பார்க்கப்பட்டது. மேக்சிமம் பனிஷ்மெண்ட்டான தூக்கு தண்டனை. அனைத்துப் பிரிவின் குற்றங்களும் சரியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்க தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டால், ஆறு மாதத்தில் குற்றவாளி சட்ட வழிகளின்படி கேரள உயர் நீதிமன்றத்திற்கு அப்பீல் போய்விடுவார். நீதிமன்றமும் வழக்கை எடுத்துக்கொள்ளும். அதற்கு சட்ட வழிகள் உள்ளன. அந்த வழியில் அவர் தப்பிவிடுவார். ஆனால், ஆயுள் தண்டனை கொடுத்ததால் 5 வருட சிறை வாசத்திற்குப் பின்புதான் அவரது அப்பீல் கேசை எடுக்க முடியும். அதாவது தீர்ப்பால் தனக்கு எந்த வழியில் பாதிப்பு என்று கேட்பதற்கு 5 வருடம் தண்டனை அனுபவித்த பிறகுதான் சான்ஸ். மேலும், சூரஜை தூக்கில் போடுவதற்கு அவருக்கு வயது குறைவு. இதற்கு முன் அவர் மீது புகாரோ, எந்த ஒரு வழக்கோ கிடையாது. அதைக் கருத்தில்கொண்டுதான் தூக்கு தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார். 307, 328, 302, 201 ஆகிய பிரிவின் குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் பிரிவிற்கு 10 வருடம் தண்டனை. அடுத்த பிரிவிற்கு ஏழு வருடம். ஆக முதலில் 17 வருடத் தண்டனையை அனுபவித்த பிறகுதான், இரட்டை ஆயுள் தண்டனை வருகிறது. அதில் 5 வருட தண்டனையை அனுபவித்த பிறகே அவர் அப்பீல் போக முடியும். ஆனால் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் காலத்தில், எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் வெளியே வரலாம். தவிர இதுபோன்று பாம்பை ஏவிக் கொலை செய்த அரிதிலும் அரிதான சம்பவம் தேசத்தில் மூன்றே மூன்று சம்பவங்கள்தான் நடந்துள்ளன. வட மாநிலங்களில் இரண்டும், மூன்றாவது இந்தக் வழக்கு கேராளவில். வடமாநிலத்தின் இரண்டு சம்பவங்களும் முடிவு தெரியாமல் அப்படியே போய்விட்டன. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தரப்பட்ட சம்பவம் இது ஓன்று மட்டுமே என்கிறார்கள்.

 

Son trapped by mother Clue  Judgment of the Court of Kerala
                                                              விஜய சேனன்

 

“இந்த வழக்கில் கோர்ட்டும், போலீசாரும் நல்லா செயல்பட்டிருக்காங்க. ஆனா நாங்க எதிர்பார்த்த நீதி கிடைக்கல. தூக்கு தண்டனை தரப்படும்னு நெனைச்சோம். ஆயுள் தண்ணட கொடுக்கப்பட்டிருக்கு. அதுதான் மனசுக்கு கவலையாயிருக்கு. நாங்க அப்பீலுக்குப் போவோம்” என்கிறார் உத்ராவின் தந்தையான விஜய சேனன்.

 

சூரஜ்ஜின் தாயாரான ரேணுகாவோ, “எங்கவீட்டு மாடியில் பலா மரக்கிளைகள் படர்ந்திருக்கும். அது வழியா வந்த சாரைப் பாம்பு ஒன்னு உத்ரா ரூமுக்குள்ள போயிருக்கு. அதப் பாத்து உத்ரா சத்தம் போட்டப்ப சூரஜ் போயி அந்தப் பாம்ப கம்புல புடிச்சி வெளியே போட்டுட்டான். அதுக்குப் பின்னால், காலைல நா எங்க ஆடுகள வெளிய அனுப்புறப்ப விஷ பாம்பு வந்ததப் பாத்து நா ஒதுங்கிட்டேன்.

 

சூரஜை கூப்பிட்டு பாம்பு பிடிக்கிற வாவா சுரேஷை வரச் சொல்லி பாம்ப பிடிச்சிட்டுப் போகச் சொன்னேன். அவர் வராததால, சவரக்காடு சுரேஷை வரவச்சிருக்கான் சூரஜ். அவர் வந்து ரெண்டு பாம்பையும் பிடிச்சிட்டுப் போயிருக்கார். இந்தப் பக்கம் பாம்புக அதிகம். இதுதான் நடந்தது” என்கிறார்.

 

உத்ரா, அவரது தாய் வீட்டில் பாம்புக் கடியால் கொலையான பின்பு விசாரிக்க வந்த போலீசார், சூரஜின் தாய் ரேணுகாவிடமும் விசாரித்திருக்கிறார்கள். அது சமயம் அவர் பாம்பு பிடி சுரேஷ் பற்றிச் சொல்ல, அதன்பிறகே இந்தக் கேசில் துவண்டிருந்த போலீசார் அலர்ட் ஆகி சுதாரித்திருக்கிறார்கள். சூரஜின் தாய் ரேணுகா கொடுத்த க்ளுவே அந்தச் சம்பவத்தில் நடந்த அத்தனையும் வெளிவர அடிப்படைக் காரணமாகியிருக்கிறது என்கிறார்கள்.

 

செய்தி: பரமசிவன் & மணிகண்டன்


படங்கள் : இராம்குமார்

 

 

Next Story

மகன் தோற்க வேண்டும் தந்தை பேச்சு; நாய்கள் போன்றவர்கள் மகன் பதிலடி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
competition retaliated Father Congress, son BJP in kerala

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு உட்பட 22 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன்படி, மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவில்,  கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகனான அனில் ஆண்டனி, பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் ஆண்டனி, பா.ஜ.கவில் சேர்ந்து கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.ஆண்டனி, பா.ஜ.க வேட்பாளரான தனது மகன் இந்த தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் ஏ.கே.ஆண்டனி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மோடி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து போராடி வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகளை கேரள மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். முதல்வர் பினராயி விஜயனை கேரள மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகிறது. பா.ஜ.க கீழே செல்கிறது. நாங்கள் ஆட்சி அமைக்க இது ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறேன். பா.ஜ.க சார்பில் பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரான எனது மகன் அனில் ஆண்டனி தோற்க வேண்டும். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ ஆண்டனி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும். முக்கிய காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள் பா.ஜ.கவில் இணைந்தது தவறு. அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை குடும்பமும், அரசியலும் வேறு வேறு தான்.

காங்கிரஸ் எனது மதம். மத்தியில் ஆளும் கட்சி இந்தியா என்ற கருத்தையே அழிக்க முயல்கிறது. தயவு செய்து இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 3வது இடத்திலேயே பா.ஜ.க வேட்பாளர்கள் இருப்பார்கள். சபரிமலை பெண்கள் நுழைவு சர்ச்சையால் 2019 பொதுத் தேர்தலின் போது பா.ஜ.கவின் பொற்காலம் இருந்தது. மேலும் அவர்கள் சில கூடுதல் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால், இந்த ஆண்டு, பாஜகவுக்கு சாதகமாக எந்த காரணியும் இல்லை. மேலும் அவர்கள் குறைந்த வாக்குகளைப் பெறப் போகிறார்கள். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் சாசனம் நாசமாகி, ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும். அந்த ஆபத்தை நாம் போக்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனியின் இந்த கருத்துக்கு அவரது மகனும், பா.ஜ.க வேட்பாளருமான அனில் ஆண்டனி பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஏ.கே.ஆண்டனி மீது பரிதாபப்படுகிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவருக்கு வயது 84. அவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோதும், தேச விரோத காந்தி குடும்பத்துக்காக பணியாற்றி, ஆயுதப்படைகளை அவதூறு செய்த எம்.பி.க்காக பேசி வருகிறார். காலாவதியான எண்ணங்களைக் கொண்ட சில காலாவதியான தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக உழைக்கின்றனர். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்காக வேலை செய்பவர்கள் நிலவை பார்த்து குரைக்கும் நாய்கள் போன்றவர்கள்” என்று பேசினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் கருத்துக்கு அவரது மகனான பா.ஜ.க வேட்பாளர் பதிலடி கொடுத்தது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'13 ஆம் எண்... சாத்தானிய வழிபாடு'- கேட்டாலே திகில் பற்றும் மர்மம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'Number 13...Satanic Worship'-Mystery in Kerala

மாந்திரீகம், நரபலி என மர்மங்களுக்கு பெயர் போனது கேரளா. அண்மையாகவே கேரளாவில் நரபலி கொடுக்கும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் மர்மமான நிகழ்வு ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் 'சாத்தான் மதம்' என்ற ஒரு மதம் வளருவதாகவும், பெரும் பணக்கார புள்ளிகள்கூட அந்த மதத்தில் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது மனைவி, மகள், உறவினர் ஆகிய நான்கு பேர் சடலமாக கிடந்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலையை நிகழ்த்தியது யார் என்ற தொடர் விசாரணையில் இந்த தம்பதியின் மகனான கேடல் என்பவர்தான் அந்த கொலைகளை செய்தது தெரியவந்தது. கோடாரியை பயன்படுத்தி தங்களது குடும்ப உறுப்பினர்களை கேடல் கொலை செய்துள்ளார். இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாத்தானிய வழிபாடு தான் இதற்கெல்லாம் காரணம் என்பது கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த நவீன் தாமஸ், தேவி என்ற ஆயுர்வேத மருத்துவர்கள், ஆர்யா நாயர் என்ற ஆசிரியை ஆகிய மூவரும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

உயிர்த்தெழுந்த பிறகு வேறு ஒரு கிரகத்தில் வாழ வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் நம்பியதாகவும், சாத்தான் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்ததும் தெரியவந்தது. எதிரிகளை பழிவாங்க, பணம் சொத்துக்களை பெற கேரளாவில் சாத்தானிய வழிபாடுகள் பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடு நகரங்களில் அதிகமானோர் சாத்தானிய வழிபாடுகளை பின்பற்றுவது தெரியவந்துள்ளது. மக்கள் அதிகம் நடமாடாத பகுதிகளில் இருக்கும் தனி வீடுகளில் கூடி தங்களது மதத்தை வளர்த்து வருவதாகவும், இந்த சாத்தான் வழிபாடு செய்பவருக்கு 13 ஆம் எண் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.