Skip to main content

90ஸ் கிட்ஸ்க்கு மட்டுமல்ல; இனி வருபவர்களுக்கும் கனவுக்கன்னிதான்...

Published on 02/12/2020 | Edited on 02/12/2021
ddd

 

 

தமிழ் திரைப்பட நடிகைகளில் மறக்க முடியாவர்களில் ஒருவர் சில்க் ஸ்மிதா. இவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்றும் கொடி கட்டி பறக்கின்றன. தற்போதைய படங்களில் வரும் 'ஐட்டம் சாங்ஸ்' என்று சொல்லப்படும் வகையில் அந்த காலகட்டத்தில் எக்கச்சக்க பாடல்களில் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா இருந்தால்தான் ஒரு பொழுதுபோக்குப் படம் முழுமையடையும் என்று சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்தனர் இயக்குநர்கள். 

 

அவரது கண்களைப் பார்த்தாலே ரசிகர்கள் கிறங்கிப் போவார்கள், மேலும் அவரது கவர்ந்திழுக்கும் வனப்பும், மாடர்ன் டிரஸ்களும் கூடுதல் ப்ளஸ் பாயிண்டாகவே இருந்தது. இதுவே குறுகிய காலத்தில் அவர் உச்சத்திற்கு செல்ல காரணமாக இருந்தது. திரைப்படங்களை தாண்டி வெளியே நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் அவர் உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அப்போதே அவர் தேர்ந்தெடுக்கும் உடைகளின் வண்ணங்களும் ஸ்டைலும் அனைத்து வயது பெண்களையும் பேச வைக்கும். காலத்தை தாண்டி மாடர்னாக தோன்றினார் சில்க்.

 

SSS

 

அனைத்து வயதினரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கேரக்டரில் நடித்து வந்த அவர், ஓரிரு படங்களில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். 1981ல் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனுக்கு மனைவியாக நடித்திருப்பார் சில்க் ஸ்மிதா. குடும்பப் பெண்ணாகவும், படத்தில் தியாகராஜனின் தங்கையாக நடித்த ராதாவுக்கு அறிவுரை கூறும் கேரக்டரில் அவர் நடித்திருப்பதை பார்த்து இந்த கேரக்டரிலும் கலக்கியிருக்கிறாரே என ரசிகர்கள் வியந்தனர். படத்தின் இயக்குநர் பாரதிராஜாவே இதற்கு காரணம் என்று சொல்லுவார் சில்க் ஸ்மிதா. 

 

அவருடன் பழகியவர்கள் அனைவருமே அவருடைய நல்ல மனதை சிலாகித்து சொல்வர். அவருடைய நண்பரான பிரபல ஸ்டில் போட்டோகிராபர் 'ஸ்டில்ஸ்' ரவி ஒரு முறை சில்க் ஸ்மிதாவை வைத்து படமொன்றை தயாரிக்கலாம் என்று அணுகியுள்ளார். 'பட வாய்ப்பு வருகிறதே, பணம் பெற்றுக்கொண்டு நடிக்கலாம்' என்று எண்ணாமல், 'என்னை வைத்துப் படம் எடுத்தால் கவர்ச்சிப் படம்தான் எடுக்க முடியும். அவரது நல்ல பெயருக்கு பாதிப்பு வரும்' என்று எண்ணிய சில்க், ஸ்டில்ஸ் ரவியின் மனைவிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி மறுத்துள்ளார். இது ஒரு உதாரணம். சில்க்குடன் பழகிய பலரும் அவரைப் பற்றி நல்ல விதமாகக் கூறியுள்ளனர். அதே நேரம், தொழிலில் அவர் மிக சீரியசானவராம். படப்பிடிப்புத் தளத்தில் அவர் கண்டிப்பானவராகவே அறியப்பட்டுள்ளார்.    

 

ddd



வயதான தோற்றத்தில் அவர் திரையில் தோன்றியதில்லை. இளமையாகவே திரைப்படங்களில் நடித்து வந்தார். இளம் வயதிலேயே அவர் மறைந்தார். வயதானால் அவர் எப்படி இருப்பார் என்று யாரும் இதுவரை கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது நம் அனைவருக்கும் தெரிந்த அந்த ஆழமான, ஆயிரம் கதைகள் சொல்லும் கண்களுடனான அந்தத் தோற்றம் காலத்தோடு உறைந்திருக்கிறது. 70ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ்க்கு மட்டுமல்ல... இன்றும் இனி வருபவர்களுக்கும் கூட அவர் கனவுக்கன்னிதான்.

 

'வண்டிச்சக்கரம்' திரைப்படத்தில் முதன்முறையாக நடித்த அவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி என்பது உடலில் மட்டுமல்ல என்று நிறுவிய சில்க் ஸ்மிதா அதற்கு ஒரு திறமை வேண்டும் என்பதையும் தனது நடிப்பால் காட்டிச் சென்றார். 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த சில்க் ஸ்மிதாவிற்கு இன்று 61வது பிறந்தநாள். அவர் மறைந்து 25 வருடங்கள் ஆனாலும் அவர் நடித்த படங்களும், பாடல்களும் நெஞ்சில் இருந்து நீங்காதவை...

 

 

Next Story

பான் இந்தியா படமாக உருவாகும் சில்க் ஸ்மிதா பயோ-பிக்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

silk smitha biopic starring chandrika ravi update

 

சினிமாவில் காலம் கடந்து நிற்பவர்கள் பட்டியலில் நடிகை சில்க் ஸ்மிதாவும் ஒருவர். இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதற்கு உதாரணமாக மார்க் ஆண்டனி படத்தில் அவர் பெயரில் வரும் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பு. அந்தளவிற்கு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், இளம் வயதிலேயே மறைந்தார். இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் 63வது பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய பதிவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், அவரது வாழ்க்கை கதையைத் தழுவி ஒரு படம் உருவாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

 

‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஜெயராம் என்பவர் இயக்க எஸ்.பி. விஜய் என்பவர் தயாரிக்கிறார்.  தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாழ்க்கையைத் தழுவி இந்தியில் ‘தி டர்டி பிக்சர்’ என்ற தலைப்பில், கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

'நான் செத்துட்டா இறுதிச் சடங்கிற்கு நீ வருவியா'; சில்க் ஸ்மிதா கேட்ட கேள்வி; இறுதிச் சடங்குக்கு வந்த அந்த ஒரே நடிகர்

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

 'Will you come to the  my funeral die?'; asked Silk Smitha; He was the only actor who came to the funeral

 

தமிழ்த் திரைப்பட நடிகைகளில் மறக்க முடியாதவர்களில் ஒருவர் சில்க் ஸ்மிதா. இவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்றும் கொடி கட்டிப் பறக்கின்றன. தற்போதைய படங்களில் வரும் 'ஐட்டம் சாங்ஸ்' என்று சொல்லப்படும் வகையில் அந்தக் காலகட்டத்தில் எக்கச்சக்க பாடல்களில் ஆடி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா இருந்தால்தான் ஒரு பொழுதுபோக்குப் படம் முழுமையடையும் என்று சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்தனர் இயக்குநர்கள்.

 

அவரது கண்களைப் பார்த்தாலே ரசிகர்கள் கிறங்கிப் போவார்கள். மேலும் அவரது கவர்ந்திழுக்கும் வனப்பும், மாடர்ன் டிரஸ்களும் கூடுதல் ப்ளஸ் பாயிண்ட்டாகவே இருந்தது. இதுவே குறுகிய காலத்தில் அவர் உச்சத்திற்குச் செல்லக் காரணமாக இருந்தது. எப்படி சினிமாவின் உச்சத்திற்குக் குறுகிய காலத்தில் சென்றாரோ, அதேபோல் குறுகிய காலத்திலேயே மண்ணுலகையும் விட்டு விடை பெற்றார் ஸ்மிதா. . 

 

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் தமிழ்த் திரை உலகமே இந்தச் சம்பவத்தால் சோகத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியது. அவருடைய தற்கொலை இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா என்பவர் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், ''அவரின் இறுதிச் சடங்கிற்கு திரையுலகைச் சேர்ந்த யாரும் வராத நிலையில் ஒரே ஒரு நடிகர் மட்டும்தான் வந்திருந்தார். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை சில்க் ஸ்மிதா நடிகர் அர்ஜுனிடம் 'நான் இறந்து போனால் என்னுடைய இறுதி நிகழ்விற்கு நீ வருவியா' எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்ட அர்ஜுன், ‘ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் என்ன பேச்சு' என சில்க் ஸ்மிதாவிடம் தெரிவித்துள்ளார். நாட்கள் செல்லச் செல்ல இந்த விஷயத்தை அர்ஜுன் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், சில நாட்கள் கழித்து சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அர்ஜுன் உடனடியாக அவருடைய இறுதிச்சடங்கிற்கு வந்ததோடு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்'' எனத் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா.