Skip to main content

ஸ்டாலின் படம் பார்க்கக்கூடாதா...? அண்ணாமலை விமர்சனம் நியாயமா...? - எஸ்.பி. லட்சுமணன் பேட்டி

Published on 23/11/2022 | Edited on 24/11/2022

 

hg

 

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி வெளியீட்டில் வெளியான ‘லவ் டுடே’ படம் தொடர்பாகப் பேசினார். தமிழகத்தில் மழை பாதிப்பு தீராமல் இருக்கிறது. எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் முதல்வருக்கு மூன்று மணி நேரம் படம் பார்க்க நேரம் இருக்கிறதா என்ற தொனியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

" யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி அப்பா லவ் டுடே படத்தைப் பார்த்துவிட்டு நல்லா இருப்பதாகக் கூறினார்" என்று அவர் கூறிய அடுத்த நாளே முதல்வரையும் உதயநிதியையும் விமர்சனம் செய்தார் அண்ணாமலை. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, அண்ணாமலையின் விமர்சனம் சரியா என்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணனிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " திமுகவில் அடுத்த முகமாக உருவாகி வருபவர் உதயநிதி. அவர்தான் தந்தைக்குப் பிறகு கட்சியில் அனைத்தும் என்று சொல்லப்படுபவர். அடுத்த முதல்வர் பதவி வரைக்கும் தொண்டர்களால் கொண்டு செல்லப்படுபவர். 

 

அப்படி இருக்கையில் அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் எதிர்க்கட்சியினர் தீவிரமாகப் பார்ப்பார்கள். குறிப்பாக எப்படி திமுகவை எதிர்த்து அரசியல் செய்யலாம் என்று கொடாக்கண்டனாக இருக்கும் பாஜக அவரை தீவிரமாகக் கவனித்து வருகிறது. இந்த நேரத்தில் உதயநிதி அரசியலில் தீவிரம் காட்ட வேண்டும். அவரை தொழில் செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. அனைவரும் ஏதாவது ஒரு தொழில் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் அரசியலை அவர் இன்னும் தீவிரமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவு ஆழமாக அவர் சினிமாவுக்கு சென்றிருக்கக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 

 

கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே அவர் அமைச்சர் ஆகப் போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. படங்கள் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார் என்ற பேச்சுக்கள் வரை எழுந்தது. வெளிவருகின்ற படங்கள் எல்லாம் அவர் வெளியீட்டில் வருகின்றபோது ஏற்படுகின்ற விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறேன். தொழில் செய்யாதீங்க என்று சொல்லவில்லை. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்புள்ள நிலையில் இதைத் தவிர்க்க வேண்டும். 

 

இந்த விமர்சனங்களைத் தவிர்த்து விட்டு அவர் தமிழக பிரச்சனைகளில் இன்னும் தீவிர கவனம் காட்ட வேண்டும். கள்ளக்குறிச்சி பிரச்சனையில், கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் என்ன நடைபெற்றது; அதிகாரிகள் என்ன தகவலை அப்பாவிடம் தந்தார்கள்; அப்பா அதற்கு என்ன செய்தார்; என்ன செய்யத் தவறினார் என்பது குறித்து இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதில் அவர் கவனம் செலுத்தினால் மட்டுமே அவர் எளிதில் நிர்வாகம் எப்படி நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்" என்றார்.

 

 

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

''விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்''- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
"May his people succeed in their work" - Udayanidhi wishes

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அமைச்சர் உதயநிதியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்த அவர், 'இந்திய ஜனநாயகத்தில் யாரும் அரசியல் கட்சி இயக்கம் தொடங்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் அந்த முடிவை எடுத்திருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வோம். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்'' என்றார்.