Skip to main content

“பாஜக விரும்பும் அனைத்தையும் நானே செய்து கொடுக்கிறேன் என்ற இபிஎஸ்; வேகம் காட்டும் ஓபிஎஸ்” - ரகசியம் பகிரும் மூத்த பத்திரிகையாளர் பாண்டியன்

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

 The secret file of EPS caught in the hands of OPS - - Senior Journalist Pandian shares the secret

 

'ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும்' என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமியின் தரப்பை உற்சாகமாக்கியிருக்கிறது. இனி தன்னுடைய அரசியல் பாதையில் எந்தத் தடையும் இல்லை என்று நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்தத் தீர்ப்பில் எங்களுக்கும் சில சாதகமான அம்சங்கள் இருக்கின்றன என்று வாதாடுகிறது ஓபிஎஸ் தரப்பு. இதுகுறித்த பல்வேறு கருத்துக்களை நம்மோடு மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் பகிர்ந்து கொள்கிறார்.

 

எடப்பாடியின் ஒற்றைத் தலைமை அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தி டெல்லிதான். சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் என அனைவரும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்கள். அதனால்தான் அவர்களை சேர்த்துக்கொள்ளுமாறு டெல்லி வலியுறுத்தியது. ஆனால் நானே உங்களுக்கு அடிமையாக இருக்கிறேன்... அவர்கள் எதற்கென்று எடப்பாடி அவர்களை இணைக்க மறுத்துவிட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராகத் தயாரானார். அவரைப் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அனுப்பி வைத்தனர். ஓபிஎஸ்ஸை முதல்வராக்க குருமூர்த்தி லாபி தர்மயுத்தம் மூலம் அதன்பின் முயன்றது. 

 

இப்படி அதிமுகவின் அனைத்து நடவடிக்கைகளிலும் பாஜகவின் பங்கு இருக்கிறது. ஒருகாலத்தில் அனைத்து தலைவர்களும் ஜெயலலிதாவின் அப்பாயிண்ட்மெண்ட்டுக்காக போயஸ் கார்டனில் காத்திருப்பார்கள். சசிகலாவை சந்தித்த பிறகுதான் ஜெயலலிதாவை சந்திக்க முடியும். அப்படிப்பட்ட சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்றார் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகு சசிகலாவிடமிருந்து தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று டெல்லி சொன்னது. அதற்கும் சம்மதித்தார் எடப்பாடி பழனிசாமி.

 

முதல்வராக இருந்தபோது ஆளுநர் மாளிகையிலிருந்து வரும் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி வந்தார் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது அந்தப் பகுதி முழுவதும் அனில் அகர்வால் மற்றும் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 13 அப்பாவி உயிர்கள் துப்பாக்கிச் சூட்டில் பறிபோயின. ஆனால் அந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தான் நான் தெரிந்துகொண்டேன் என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி. இப்படி முழுக்க முழுக்க டெல்லிக்கு அடிமையாக இருப்பவர்தான் அவர். 

 

சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரிடம் வாக்கு வங்கி இல்லை. எனவே ஓபிஎஸ்ஸை வைத்துக்கொண்டு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் நீங்கள் விரும்பும் அனைத்தையும் நானே செய்து கொடுக்கிறேன் என்று எடப்பாடி சொல்லிவிட்டார். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக வெற்றிபெற முடியாது என்பதால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லாமல் தேர்தலை சந்தித்துவிட்டு அதன் பிறகு பாஜகவுக்கு ஆதரவளிக்கும் முடிவில் எடப்பாடி இருக்கிறார். பல்வேறு வழக்குகள் அவர் மேல் இருப்பதால் பயப்படுகிறார்.

 

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கட்சி எடப்பாடியின் கைக்கு வந்துவிட்டது. ஆனால் பாஜகவுடன் இணைந்து செல்வதா அல்லது ஜெயலலிதா பாணியில் அவர்களை எதிர்த்து நிற்பதா என்கிற பெரிய குழப்பம் எடப்பாடிக்கு இருக்கிறது. ஓபிஎஸ் தற்போது தைரியமாகப் பேசும் வார்த்தைகள் அனைத்தும் பாஜகவின் வார்த்தைகள் தான். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையுமே பாஜக கட்டுப்படுத்துகிறது. எடப்பாடியின் கை முழுமையாக ஓங்கிவிடக்கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒருவேளை பாஜகவை எடப்பாடி கழற்றிவிட்டால், ஓபிஎஸ் மூலம் பாஜக பிரச்சனை கொடுக்கும்.

 

ஓபிஎஸ் இப்போது காட்டும் வேகத்தை முன்பே காட்டியிருந்தால் தொண்டர்கள் அவர் பக்கம் வந்திருப்பார்கள். தாமதமாக அவர் செய்யும் வேலைகள் அவருக்குப் பலன் தராது. கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படைத் தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது எம்ஜிஆர் வகுத்த விதி. அதைச் செய்துவிட்டால் எடப்பாடி தப்பிப்பார். தேர்தல் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதன்பிறகு எந்த சட்ட சிக்கலும் வராது. அதைத்தான் அவர் செய்யப்போகிறார். எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியவற்றை அதிமுகவின் சட்டமன்ற கொறடாவின் கீழ் இயங்கும் மக்கள் பிரதிநிதிகள் தான் முடிவு செய்ய முடியும். அதில் சபாநாயகர் தலையிடக்கூடாது.

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.