Skip to main content

திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தினகரனுடன் கைக்கோர்க்கும் எடப்பாடி!

Published on 22/07/2021 | Edited on 23/07/2021
ddd

சிறையிலிருந்து சசி வெளியே வரும்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. கிட்டத்தட்ட 70 எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்திப்பார்கள் என அப்போது சசிகலா வட்டாரங்கள் சொன்னது. எல்லோரையும் நரேந்திர மோடியை காண்பித்து எடப்பாடி அமைதியாக்கிவிட்டார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு சசிகலா அமைதியாக இருக்கவில்லை. அதன் விளைவு தான், சமீபத்தில் நடந்த அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்.

 

சசிகலா வெறுமனே அ.தி.மு.க., ர.ர.க்களிடம் செல்போனில் பேசவில்லை. ஒரு பெரிய லிஸ்டே எடுத்துவைத்து வேலைசெய்துவருகிறார். அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய மா.செ.க்கள், முன்னாள் மா.செ.க்கள், நகரம், ஒன்றியம் என அனைவரையும் சசிகலா சார்பில் அவரது நலன் விரும்பிகள் தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள். அவர்களது தேவைகளுக்கேற்றாற்போல் கரன்சி விநியோகமும் நடை பெறுகிறது. நடராஜனின் சகோதரர்களான பழனிவேலுவும் ராமச்சந்திரனும் இதனை கவனிப்பதுதான் அ.தி.மு.க.வில் ஹாட் டாபிக்கான பேச்சாக இருக்கிறது.

 

தேர்தல் நேரத்தில், ஓட்டிங் மெஷினில் தில்லுமுல்லு செய்தாவது நம்மை பா.ஜ.க ஜெயிக்க வைத்துவிடும் என்று எடப்பாடி சொன்னதை அ.தி.மு.க நிர்வாகிகள் நம்பினார்கள். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் பண மழையில் நனைவார்கள் என்கிற எடப்பாடியின் வார்த்தைகளைக் கேட்டு சாதாரண ஒன்றிய நிர்வாகிகள்கூட சசிகலாவைப் பார்க்கச் செல்லவில்லை. சசிகலாவுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் அப்படியே ஆப்லைனுக்கு சென்றுவிட்டார்கள்.

 

தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டும் பணம் ஆறாக ஓடியது. மற்ற இடங்களில் மந்திரிகள் செலவு செய்யவில்லை. தங்கள் தொகுதிகளைவிட மற்ற தொகுதிகளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. தேர்தலில் சீட் எதிர்பார்த்த தோப்பு வெங்கடாச்சலம் போன்ற பலரை எடப்பாடி நம்பவைத்துக் கழுத்தறுத்துவிட்டார்.

 

இதெல்லாம் நடந்துமுடிந்தபிறகு எடப்பாடியால் பழைய மாதிரி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை சசிகலா சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், எதிர்காலம் என்னவாகுமென கவலைப்படும் அ.தி.மு.க.வினருக்கு நிம்மதியையும் பணத்தையும் செலவுசெய்து வியூகம் அமைத்துவரும் சசிகலாவுக்கு ஆரம்பகட்ட வெற்றிகள் கிடைத்துள்ளன.

 

சசிகலாவை எதிர்த்து மாநில அளவில் நிர்வாகிகளைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடியால் முடியவில்லை. அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றினால் ஓ.பி.எஸ். சம்மதிக்கமாட்டார் என்கிற அச்சம் எடப்பாடிக்கு இருக்கிறது. எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் புறநகர் மாவட்டத்துக்கு எடப்பாடிதான் மாவட்டச் செயலாளர். அவர் தலைமையில் நடந்த மாவட்ட கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் பொழுது மூன்று முக்கிய நிர்வாகிகள் வெளிநடப்பு செய்து அந்த தீர்மானத்தை எதிர்த்து பேட்டியளித்து எடப்பாடிக்கு அதிர்ச்சியை கொடுத்தார்கள்.

 

தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க.வின் 52 மாவட்டக் கழகங்களில் வெறும் பத்து மாவட்டம் மட்டுமே சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள். மற்ற மாவட்டங்கள் சிம்பிளாக நோ சொல்லிவிட்டார்கள். ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் போன்றவர்களின் மாவட்டங்களே சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுத்துவிட்டார்கள். மாஜி அமைச்சர் காமராஜ், சசிகலாவின் அண்ணன் திவாகரனால் பாதிக்கப்பட்டிருந்ததால் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள் என, சசிகலாவின் அசைவுகள் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தும் பாதிப்புகளை பட்டியலிடுகிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

 

முன்பு, கட்சி நிர்வாகிகளுடன் நடந்த பல ஆலோசனைக் கூட்டங்களில், "சசிகலா ஒரு பேய் நாம் மீண்டும் சசியிடமும், தினகரன், வெங்கடேஷ் போன்றவர்களிடம் அடிமையாக வேண்டுமா' என்கிற எடப்பாடி, சமீபத்தில் சென்னையில் சசிகலாவுக்கு எதிராகத் தலைமைக் கழகத்தில் கூட்டிய அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் அப்படி எதுவும் பேசவில்லை. சசிகலாவுக்கு எதிராக ஒரு நிர்வாகிகூட அந்தக் கூட்டத்தில் வாய்திறக்கவில்லை. ஆனால் எடப்பாடி கடந்த சட்ட மன்றத் தேர்தலில் மேற்கொண்ட வியூகத்தை கடுமையாக விமர்சித்தார்கள்.

 

அன்வர் ராஜா இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்தார். பா.ஜ.க.வுடன் கூட்டணி தவறான முடிவு என ஆரம்பித்த அவரது பேச்சைத் தொடர்ந்து பெரும்பாலான மா.செ.க்கள், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தது, விஜயகாந்தோடு கூட்டணி வைக்க மறுத்தது, டாக்டர் கிருஷ்ணசாமியோடு கூட்டணி வைக்காதது, சரத்குமாரை மதிக்காதது என எடப்பாடியின் சர்வ அசைவு களும் கேள்விக்குள்ளானது.

 

டாக்டர் ராமதாஸை ப்ளாக்மெயில் அரசியல் வாதியென வர்ணிக்கவும் அவர்கள் தயங்கவில்லை. அனைவரும், சி.வி.சண்முகம் பா.ஜ.க.வை விமர்சித்து அ.தி.மு.க. தோல்விக்கு பா.ஜ.க.தான் காரணம் என்றதை கோரஸாகவே வழிமொழிந்தார்கள். செஞ்சி ஏழுமலை மட்டும், சி.வி.சண்முகமெல்லாம் ஒரு ஆளா… நான் 1972-லிருந்து அரசியல் செய்துவருகிறேன். எடப்பாடி, சி.வி.சண்முகத்தையும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனையும் வளர்த்துவிட்டார். சண்முகம் வன்னியர், நானும் வன்னியர் தான் என சண்முகத்திற்கு சவால்விட்டார்.

 

சி.வி.சண்முகம் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. ஆனால், சண்முகத்தை பேசவைப்பது எடப்பாடிதான் என்று நிர்வாகிகள் பேசிக்கொண்டனர். கொஞ்சநாள் ராஜேந்திரபாலாஜி, கொஞ்சநாள் செல்லூர் ராஜு, எப்போதும் ஜெயக்குமார், இப்போது சண்முகம் என டயலாக் பேசவைத்து ஓ.பி.எஸ். மகனை வஞ்சித்து விட்டார்கள். அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் கிடைக்கவேண்டிய மத்திய மந்திரி பதவியை கெடுத்துவிட்டார் எடப்பாடியென நேரடியாகவே குற்றம்சாட்ட, ஒட்டுமொத்தக் கூட்டமும் அமைதியாக வேடிக்கை பார்த்தது.

 

அமித்ஷா, மோடிக்காக ஆங்கிலத்தில் அறிக்கைவிட்ட ஓ.பி.எஸ்.ஸின் செயலை சிலர் கிண்டலாகவே பேசினார்கள். அந்த ஆங்கில அறிக்கைக்கு அடுத்தபடியாக பா.ஜ.க.வுடன் கூட்டு நிரந்தரம் என ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்ஸும் இணைந்துவிட்ட அறிக்கையில் குள்ள ரி வேலைசெய்கிறார் என சசிகலாவை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்ததை மா.செ.க்கள் ஏற்கவில்லையென்பதை பா.ஜ.க. கூட்டு தவறான முடிவு என மா.செ.க்கள் கூட்டத்தில் எழுந்த விமர்சனங்கள் தெளிவாக உணர்த்தியது.

 

சசிகலா, தன்னை நீக்கி, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டியது தவறு என போட்ட சிவில் வழக்கில் மிகவும் சீரியஸாக இருக்கிறார். தான் அரசியலைவிட்டு துறவறம் பூண்டதற்கு பா.ஜ.க.தான் காரணம் என்கிற கருத்தையும் சொல்லிவருகிறார். அதேநேரத்தில் தினகரனையும் டாக்டர் வெங்கடேஷையும் ஒதுக்கிவிட்டார். பா.ஜ.க. என்னை எதிர்க்கவில்லை என்கிற இமேஜையும் பரப்பிவருகிறார். ஓ.பி.எஸ். தனது மகனுக்குக் கிடைக்கவேண்டிய மந்திரி பதவியை எடப்பாடி கெடுத்துவிட்டார் என்கிற கோபத்தில் இருப்பதால், சசிகலா என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்.

 

இந்நிலையில் தினகரன் வீட்டுத் திருமணம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. அந்த திருமணம் முடிந்தபிறகு தினகரன் ஆக்டிவாக அரசியலுக்கு வந்துவிடுவார். அதற்காக செந்தமிழன், சி.ஆர். சரஸ்வதி மூலம் பத்திரிகையாளர்களை சந்திக்கவைத்து அ.ம.மு.க. ஆக்டிவாக இருப்பதாக காண்பித்துவருகிறார். சசிகலா அரசியலுக்கு வந்தால் அவர்மீது பா.ஜ.க. வழக்குகள் போடுமென தினகரன் ஆதரவாளர்கள் பேசிவருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஓபி.எஸ். சசிகலாவை வெளிப்படையாக ஆதரிப்பார் என்று சசிகலா வட்டாரங்கள் கூறுகின்றன. எடப்பாடிக்கு ஆதரவாக உள்ள வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் போன்றோர் மீது தி.மு.க. ஊழல் வழக்குகளை பாய்ச்சும். அப்போது எடப்பாடி முகாம் கலகலத்துப் போகும் என சசிகலா திட்டம்போட்டு காய் நகர்த்தி வருகிறார். அதே நேரத்தில் எடப்பாடி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள டி.டி.வி. தினகரனுடன் கைகோர்ப்பார். அதற்கான ஆலோசனைகள் தொடங்கிவிட்டன என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.