Skip to main content

இவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

ஒரு ரெய்டு நடத்தினால் அதில் என்ன கிடைத்தது, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தீர்மானிக்க வருமானவரித்துறைக்கு 21 மாத கால அவகாசத்தை சட்டம் வழங்கியுள்ளது. 2017 நவம்பரில் சசிகலா குடும்பத்தினர் மீது நடத்திய ரெய்டுக்கு 2019 நவம்பரில் ஆக்ஷன் எடுத்துள்ளது வருமானவரித் துறை. சுனில் கேட்பாலியா என்கிற மார்வாடியை பினாமியாக வைத்து சென்னை பின்னி மில்லில் சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக் கட்டி வந்த கட்டிடங்கள், பாண்டிச்சேரியில் இயங்கிவரும் நகைக்கடை, பேப்பர் தயாரிக்கும் கம்பெனி என பத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகளை "சசிகலாவின் பினாமி கம்பெனிகள்' என வருமானவரித்துறை பினாமி சட்டத்தின் மூலம் முடக்கியுள்ளது. இந்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் 1600 கோடி ரூபாய் என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

 

admk



"சசிகலாவின் பினாமி சொத்துக்களை கைப்பற்றியது என ஊடகங்கள் வெளியிட்ட செய்தி பொய்யானது. எங்களுக்கு யாரும் பினாமி இல்லை'' என சசிகலாவுக்கு நெருக்கமான வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் வாயிலாக செய்திச் சேனலில் சசிகலா தனது தரப்பை பேச வைத்தார். இது குறித்து வருமான வரித்துறையினரிடம் கேட்டோம்... "பினாமி சட்டத்தில் முடக்கப்பட்ட கம்பெனிகள் எல்லாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 2016 நவம்பரில் வாங்கப்பட்ட கம்பெனிகள். 2017-ஆம் ஆண்டு நவம்பரில் ஜெ. வசித்து வந்த போயஸ் கார்டன் சசிகலாவின் ஆளுமையில் இருந்தது. சசியும் ஜெ.வும் வசித்துவந்த அறைகளை திறந்துகாட்டுங்கள் சோதனை செய்யவேண்டும் என நாங்கள் கேட்டபோது, சசிகலா மறுத்தார். ஒரு மாலை நேரத்தில் அந்த அறையின் பூட்டுகளை உடைத்து வருமானவரித்துறை உள்ளே நுழைந்தது. அந்த அறையில் இருந்த ஆவணங்களை எடுத்து வந்தது. அந்த ஆவணங்களில் இருந்த கம்பெனிகளைக் கூப்பிட்டு விசாரித்தது.
 

admk



"கம்பெனி எங்களுடையது. ஆனால் அதன் உண்மையான உரிமையாளர் சசிகலாவும் விவேக்கும் தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பணத்தை மாற்றுவது போல எங்களுக்கு பணம் கொடுத்துவிட்டு, கம்பெனி டாகுமெண்ட்டுகளை சசிகலா எடுத்து சென்றுவிட்டார். அதன்பிறகு எங்கள் கம்பெனிகளை அவருக்கு நெருக்கமானவர்களின் பெயருக்கு மாற்றிவிட்டார்' என ஒப்புதல் வாக்கு மூலம் தந்தனர்.
 

admk



இதுபற்றி எங்களிடம் விளக்கம் அளித்த சசிகலாவின் வழக்கறிஞர்கள், "1600 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தக் கம்பெனிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை' என்றார்கள். "இந்த சொத்துப் பத்திரங்கள் எப்படி வந்தது' என்கிற கேள்விக்கு சசி தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. இது அரசியல்வாதிகள் தொடர்பான விஷயம். இதில் ஜெ.வின் பெயர் அடிபடுவதால் என்ன செய்ய வேண்டுமென வருமானவரித்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் சொத்துக்களை முடக்கிவிட்டனர்'' என்கிறது வருமானவரித்துறை வட்டாரம்.

 

admk



பா.ஜ.க. அரசுடன் சசிகலா தரப்பு இணக்கமாகி வருகிறது என சொல்லப்பட்ட நிலையில், நடந்துள்ள இந்த சொத்து முடக்கம் பற்றி சசி தரப்பினரிடம் கேட்டோம்... "சசிகலாவிடம் இன்றளவும் பா.ஜ.க. பேச்சு வார்த்தை நடத்துகிறது. அதில் பல நிபந்தனைகளை பா.ஜ.க. விதிக்கிறது. சசிகலா அ.தி.மு.க.வில் எடப்பாடி அணிக்கு மட்டும் தலைவராக இருந்தார். எடப்பாடி அணியையும் பன்னீர் அணிûயும் பா.ஜ.க. இணைத்தது. டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. என்கிற கட்சியை துவக்கி நடத்திவருகிறார். இந்த மூன்று அணிகளையும் இணைக்கவேண்டும். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்ததும் அ.தி.மு.க.வில் இணையவேண்டும். எடப்பாடியை முதல்வராகவும், பன்னீரை துணை முதல்வராகவும் ஏற்கவேண்டும். தினகரனை ஓரம்கட்ட வேண்டும். இவையெல்லாம் பா.ஜ.க. விதிக்கும் நிபந்தனைகள்.


கர்நாடகாவிலும் மத்தியிலும் ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வை எதிர்த்து சசிகலாவால் பெங்களூரு சிறையை விட்டு விரைவில் வரமுடியாது. இந்நிலையில்... பா.ஜ.க. சசியிடமிருந்து ஒரு பெரும்தொகையை இந்த வருமானவரித்துறை சோதனை போன்ற விவகாரங்கள் மூலம் முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்க்கிறது. ரெய்டில் தொடங்கி பேரத்தில் தொடரும் இந்த விவகாரம், சரியான டீலில் முடியும்வரை இப்படித்தான் போகும். அதன் அடிப்படையில்தான் சசிகலா அவ்வளவு சீக்கிரம் வெளியே வரமாட்டார் என்கிற ஒரு அறிவிப்பு கர்நாடக டி.ஜி.பி.யிடமிருந்து முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து 1600 கோடி பணம், சொத்துக்கள் முடக்கம் என வருமானவரித் துறையை சசிகலா மேல் பாய்ச்சியுள்ளனர். இதில் பயந்துபோன சசி, "அந்த 1600 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என அறிவித்துள்ளார் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.


இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைவர்கள், "சசிகலா விவகாரத்தை பா.ஜ.க. விருப்பப்படி முடிவு செய்யத்தான் நவம்பர் மாதம் பொதுக்குழுவை அ.தி.மு.க. கூட்டியுள்ளது'' என்கிறார்கள். சசிகலாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 5 லட்சம் கோடியைத் தாண்டும் என வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கணக்கெடுத்துள்ளது. 2018 டிசம்பர் மாதம் சசிகலாவின் பினாமி நிறுவனம் என வருமான வரித்துறையால் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னி மில் எஸ்டேட்ஸ் என்ற நிறுவனம் ஆதி எண்டர்பிரைசஸ், எடிசன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளது. அதை வருமானவரித்துறை கண்டுபிடித்தது என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள். "வருமானவரித்துறை, சசிகலா கும்பலின் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்' என 2017 செப்டம்பரிலேயே நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Seshan


 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.