Skip to main content

“ஜெயலலிதா, மோடி எல்லாம் இந்து விரோதிகள் இல்லையா?” - ராமசுப்பிரமணியன் கேள்வி

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

ramasubramaniyan talks about tr baalu viral speech explanation 

 

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அண்மையில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அதில் அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூன்று கோயில்களை இடிக்க நேர்ந்ததையும், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட அந்தக் கோயில்களுக்குப் பதிலாக இடிக்கப்பட்டதைவிடப் பெரிய அளவில் மூன்று கோயில்களை மீண்டும் கட்டிக்கொடுத்ததையும் சுட்டிக்காட்டிப் பேசினார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு பேசியதை காணொலியாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.  இந்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில்  டி.ஆர்.பாலு பேசியதில் இருந்து அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் இருந்து சிலவற்றை வெட்டி விட்டு வீடியோ பகிரப்பட்டதாக   திமுக தரப்பில் கூறப்பட்டது.

 

இது குறித்து கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியன் நக்கீரன் யூடூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "டி.ஆர். பாலுவின் அந்த வீடியோவை பார்த்தேன். அண்ணாமலை அவருடைய ட்விட்டரில் வீடியோவை பதிவிட்டு உள்ளார். அதை  எச். ராஜா மற்றும் பாஜகவினர் எல்லோரும் பதிவிட்டு, திமுக தான் இந்து விரோத சக்தி என்ற ரீதியில் பரப்பி வருகிறார்கள்.  நிறைய பேர் எனக்கும் இந்த வீடியோவை அனுப்பி இருந்தார்கள். ‘நீங்கள் திமுகவிற்கு ஆதரவாக இருக்கிறீர்கள். இது எல்லாம் அக்கிரமம். இது எப்படி  நியாயம்’ என்று கேட்டார்கள். நூறு வருட கோவில்களை எல்லாம் இடித்து விட்டேன். இதற்காக எனக்கு ஓட்டு வராது என்றும் தெரியும். ஆனாலும் ஓட்டை எப்படி வரவழைக்க வேண்டும் என்றும் எனக்கு தெரியும் என்று எல்லாம் பேசி இருந்தார். இதை கேட்டவுடன் நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன்.

 

அதற்கு அப்புறம் இன்னொரு வீடியோ வந்தது. இது தான் உண்மையான வீடியோ என்று. அதை பார்த்தபோது, அதில், ‘லட்சுமி, சரஸ்வதி மற்றும் பார்வதி கோவில்களை நான் இடித்தேன். இடிக்கும் போது எனக்கு ஓட்டு வராது என்பது தெரியும். ஜீஎஸ்டி சாலைகளை அகலப்படுத்தும் போது கோவில்களை  இடித்தாலும் கூட வேறு இடத்தில் கோவில்களை கட்டி விட்டேன்’ என்கிறார். அப்போது தான் என் மனசு நிம்மதி அடைந்தது. பாலு மிக சிறந்த பாராளுமன்றவாதி மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். கேபினட் அமைச்சராக உயர்ந்தவர்.

 

என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். தாம்பரம் சானடோரியம் இடையே இன்று உள்ள  சிவா விஷ்ணு கோவில் முதலில், ஜிஎஸ்டி சாலையில் இருந்தது. அதனை ஜெயலலிதா ஆட்சியில்  இடிக்க உத்தரவு கொடுத்துவிட்டார்கள்.  எனக்கு நிறைய வருத்தம் இருந்தது. நிறைய பேர் திரண்டு வந்து விட்டோம். கோவிலை இடிப்பதற்கு பொக்லைன் வாகனங்களை எல்லாம் அங்கு வந்து விட்டது. இந்து விரோதம், கோவிலை இடிக்காதே என்று எல்லாம் சொன்னோம். அப்போது அந்த சாலையை நாங்கள் முற்றுகை விட்டோம்.  கடைசியில் அங்கு வந்தவர்கள், ‘நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம். கோவிலுக்கு இடம் தருகிறேன், கோவில் கட்டுவதற்கு பணம் தருகிறேன்’ என்று சொன்னார்கள். அதன் பிறகு நாங்கள் கலைந்து வந்து விட்டோம். சொல்லிய படியே இடத்தை கொடுத்தார்கள். இன்னும் அழகாக  பிரமாதமாக சானடோரியத்தில் முன்பு இருந்ததை விட கோவிலை கட்டினார்கள். தற்போது இந்த கோவில்  மிகவும் அற்புதமாக நிர்வகிக்கபடுகிறது. அதற்காக ஜெயலலிதாவை இந்து விரோதி என்று சொல்ல முடியுமா?.

 

அதைத் தானே டி.ஆர். பாலு சொல்கிறார். கோவிலை இடித்துவிட்டு  வேறு இடத்தில் கோவிலை கட்டினோம் என்று. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு  சாலை ஓரம்  உள்ள  700 கோவில்களை  இடித்து தள்ளினார்கள். அதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக  தலைவர் அசோக் சிங்கள், ‘மோடி தான் நவீனகால அவுரங்கசிப்’ என்று சொன்னார். இது எல்லாம் பாஜக காரர்களுக்கு தெரியாதா என்ன?. எந்த பிரச்சனையும் இல்லாத ஒன்றை ஒட்டியும் வெட்டியும் பொய்யான தகவலை பரப்பி ஒரு மதக் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இதை செய்து இருக்கிறார்கள். இது ரொம்ப ரொம்ப ஆபத்தானது. அண்ணாமலை இது மாதிரி செய்துள்ளதை தவறு என இந்து பத்திரிகை கூட குறிப்பிட்டுள்ளது" என்று கூறினார். 

 

 

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்

Next Story

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Tamil Nadu BJP executives meeting with Prime Minister Modi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.  மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வுக்கு பிரதமரை அழைத்து வர நேரம் கேட்டுள்ளோம். இது குறித்து அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் இறுதி செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் பாத யாத்திரையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே பிப்ரவரி 2 வது வாரம் நிறைவடையும் பாதயாத்திரை நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் பங்கேற்பதற்காக மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.