Skip to main content

பாஜக தனியாக நின்றால் ஜெயிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, ஊர் உலகத்துக்கே தெரியும்!! - மனம் திறந்த ராம சுப்பிரமணியன்!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

gjh

 

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில், கூட்டணி பஞ்சாயத்து நடைபெற்றுவருகிறது. ஒருபுறம் பாமக கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டுள்ள நிலையில், பாஜக அதிக சீட் கோரி அழுத்தம் கொடுத்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தல், பாஜக கூட்டணி, அண்ணாமலையின் அரசியல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் பதில்கள் வருமாறு, 


தமிழ்நாட்டில் அடுத்த பரபரப்பு என்றால் விரைவில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல்தான். அனைத்து கட்சியினரும் அதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்றும், ஆனால் தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

பாமக தனியாக நின்று தன்னுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் நடைபெறும் அந்த 9 மாவட்டங்களில் தென்காசி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பாமக சற்று வலுவாகவே இருக்கிறது. எனவே தங்களின் பலத்தை தனியாக காட்ட வேண்டும் என்று அவர்கள் விருப்பப்படுகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கூட்டணி தர்மம் என்ற ஒன்று உள்ளது. அதனை அவர்கள் மதிக்க வேண்டும். தேர்தலுக்குத் தேர்தல் ஒரு நிலைப்பாடு என்ற நிலைப்பாட்டை மக்கள் ஏர்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிகப்படியான இடங்களைக் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

பாஜகவிற்கு நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், இது பாஜகவுக்கு அதிமுக பெருந்தன்மையாக வாரிக்கொடுத்ததால் நடந்தது. பாஜக தனியாக நின்றால் ஒரு இடம் கூட ஜெயிக்காது என்பது அவர்களுக்கும் தெரியும், ஊர் உலகத்துக்கும் தெரியும். இந்த நான்கு பேரும் எப்படி ஜெயித்தார்கள். இதில் இருவர் திமுக, அதிமுகவில் இருந்து வந்தவர்கள். அதிமுகவின் கடுமையான உழைப்பினால் இது சாத்தியப்பட்டுள்ளது. தற்போது பாமக கூட்டணியைவிட்டு போனதால் தங்களுக்கு அதிக சீட், 25 சதவீத இடம் என்பதெல்லாம் சாத்தியமா? பாஜக கேட்டால் அதிமுக கொடுக்க முடியுமா? அவர்களுக்குள்ளாகவே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. ரெய்டு, கட்சி பிரச்சனை என போய்க்கொண்டிருக்கிறது. எனவே இடியாப்ப சிக்கலில் இருக்கும் அதிமுக, தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பார்ப்பார்கள். இந்த நேரத்தில் பாஜக அதிக சீட் கேட்பது அபத்தமாக இருக்கிறது. அவர்களும் தர மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

 

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறியுள்ளாரே? 

 

அண்ணாமலை பேசுவதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர் அரசியலுக்குப் புதியவர். கள நிலவரம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தடா புடா என்று பேசி கட்சியை வளர்க்க முடியாது. உண்மையின் தன்மை தெரிய வேண்டும். இதைவிட பெரிய கூத்து, அடுத்த தேர்தலில் 150 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று கூறுகிறார். இது சாத்தியமா? கேவலமாக இருக்கிறது. உண்மை நிலவரம் தெரியாமல் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. இப்படி ஏடாகூடமாக பேசினால் அவர் மீது பொதுமக்களிடம் நல்ல பெயர் எப்போதும் வராமல் போய்விடும்.

 

 

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.