Skip to main content

அமித்ஷாவிடம் போனில் பேசிய லதா ரஜினிகாந்த்!!! எடப்பாடியை அவசரம் அவசரமாக சந்தித்த முருகன்!

Published on 04/01/2021 | Edited on 09/01/2021

 

rajini


“இப்போதும் இல்லைன்னா எப்போதும் இல்லை'' என டிசம்பர் 3-ல் சொன்ன ரஜினி, "இப்போதும் இல்லை... எப்போதும் இல்லை'' என டிசம்பர் 29 அன்று அரசியல் என்ட்ரிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். கட்சியைத் தொடங்க முடியாததற்காக ரஜினி தெரிவித்திருக்கும் காரணங்கள் ஏற்புடையாதகவும் நியாயமானதாகவும் இருப்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். இருந்தாலும் அவரது அறிவிப்பில் ஒட்டுமொத்த ரசிகர்களும், ரஜினியை நம்பி அவரது கட்சிக்குத் தாவவிருந்த பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகளும் ஆடித்தான் போனார்கள். முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற குரல்களும் கேட்கின்றன.

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை வேளச்சேரி தொகுதியின் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ரஜினி பாஸ்கர், "தலைவரிடமிருந்து இந்த அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 1996ல் ஜெயலலிதாவிற்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததிலிருந்து ‘அரசியலுக்கு வா தலைவா' என அழைக்கிறோம். அவர் வரமாட்டார் என மனம் சோர்ந்திருந்த நிலையில்தான், 2017-ல் ‘சிஸ்டம் கெட்டுப் போச்சு' எனச்சொல்லி அரசியலுக்கு எங்களை அழைத்தார். ஒட்டுமொத்த ரசிகர்களும் சுறுசுறுப்பானோம். "சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் களமிறங்குவோம்'' என அடிக்கடி உறுதிப்படுத்தினார். ஆனால், அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

 

rajini

 

இந்த நிலையில்தான்... பத்திரிகையாளர்களைச் சந்தித்து, "மக்களிடம் எழுச்சி உருவாகட்டும்; அப்போது நான் வருகிறேன்; அப்படியே வந்தாலும் முதலமைச்சர் நான் இல்லை; கட்சித் தலைமைக்கு ஒருவர்; ஆட்சித் தலைமைக்கு வேறொருவர் என்று சொன்னார் ரஜினி. அப்போதே ரசிகர்மன்ற நிர்வாகிகள் அப்செட்டாகிவிட்டனர். நவம்பர் 30-ம் தேதி மன்றத்தின் மா.செ.க்களை அழைத்து ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்திய ரஜினி, தனது உடல்நிலையைச் சொல்லி உருக்கமாக பேசியபோது, அதனைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டோம். அடுத்த மூன்று நாட்களில் கட்சி தொடங்குவது உறுதி என்று அதிரடி காட்டினார். அதற்கேற்ப, மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும் தேர்தல் பணிகளைத் துவக்கவும் பொறுப்பாளர்களை நியமித்தார். பூத் கமிட்டிகள் உள்ளிட்ட பணிகளும் வேகமெடுத்தன. எல்லாம் நடந்தபிறகு. மீண்டும் உடல்நிலையைக் காரணம் காட்டி, அரசியலுக்கு வரவில்லை என சொல்வதைத்தான் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

‘கட்சி ஆரம்பித்தால் தேர்தல் பிரச்சாரத்தில் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டும்; நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் எனக்கு பிரச்சாரத்தின்போது பாதிப்பு ஏற்பட்டால் பலரும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்' என்று அவர் சொல்லும் நியாயமான காரணங்களை, ராகவேந்திரா மண்டபத்தின் ஆலோசனை கூட்டத்திலேயே சொல்லிவிட்டார். அதன்பின், மீண்டும் அரசியல் வருகை பற்றி அறிவிப்பு, மீண்டும் அதே காரணத்தால் கைவிடுதல் என்பது ரசிகர்களுக்கு அவர் செய்யும் நம்பிக்கைத் துரோகமாக நினைக்கிறோம். ‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு' என்று அவர் சொல்வது உண்மையெனில், தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று ஆவேசப்பட்டார். நாம் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் பலரும் ரஜினி பாஸ்கர் டோனிலேயே கருத்துக்களையே முன்வைத்தனர்.

ரஜினியின் நெருக்கமான தரப்பில் நாம் விசாரித்தபோது, "ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவர்களின் பயமுறுத்தல்கள் ரஜினியைவிட அவரது குடும்பத்தினரை மிகவும் பாதித்துவிட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்புகொண்டு, ரஜினியின் மனைவி லதாவே பேச, அமித்ஷா அதிர்ச்சியாயிட்டார். குடும்பத்தினரின் கவலையை ரஜினியாலும் புறம்தள்ள முடியவில்லை” என்றவர்கள், “மன்றத்து நிர்வாகிகளிடம் உருக்கமாக பேசிவிட்டு நவம்பர் 30-ம் தேதி கார்டனுக்குத் திரும்பிய ரஜினி, இப்போது தெரிவித்துள்ள அறிவிப்பை அன்றைக்கே சொல்வதற்குத்தான் தயாரானார். இதனை மோப்பம் பிடித்த பா.ஜ.க. தலைமை கொடுத்த அழுத்தம்தான் அரசியலுக்கு வருவதாக ரஜினியைச் சொல்ல வைத்தது. அவருக்கு உதவியாக அர்ஜுனமூர்த்தியை அனுப்பியும் வைத்தது.

பா.ஜ.க.வை நம்பி கட்சி ஆரம்பிக்கவிருந்த ரஜினிக்கு, அவரது அரசியல் வருகையைச் சொல்லியும் அவரது பெயரைப் பயன்படுத்தியும் தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் சிலர் பேரங்கள் நடத்தியது தெரியவந்துள்ளது. ஏற்கனவே பா.ஜ.க.வின் அழுத்தத்தால் மன உளைச்சலில் இருந்த ரஜினிக்கு, இத்தகைய புகார்களெல்லாம் அதிர்ச்சியைத் தந்தது. அதற்கேற்ப ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவ ரிசல்ட்டைப் பயன்படுத்தி கட்சி ஆரம்பிக்காமலே அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டார் ரஜினி'' என்று ரகசியங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ரஜினியை முன்னிறுத்தி அ.தி.மு.க.வை மிரட்டிக்கொண்டிருந்த பா.ஜ.க. தலைமைக்கு ரஜினியின் அறிவிப்பு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார துவக்க நாள் (டிச-27) கூட்டத்தில் பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பா.ஜ.க. பெயரைச் சொல்லாமல் அக்கட்சியின் நடவடிக்கைகளைக் கடுமையாக வறுத்தெடுத்தார். முனுசாமியின் முழு பேச்சினையும் மொழிமாற்றம் செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது மத்திய உளவுத்துறை. கே.பி.முனுசாமியின் பேச்சு பா.ஜ.க. தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து எடப்பாடியை எச்சரிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் 27-ம் தேதி இரவு அமித்ஷாவிடம் ரஜினியின் அரசியலையும் உடல்நிலையையும் பற்றி அவரது குடும்பத்தினர் கவலையோடு ஆதங்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க அவசரம் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டார் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன்.
 
இந்த சந்திப்பு குறித்து தமிழக பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "அ.தி.மு.க. சீனியர் கே.பி.முனுசாமியின் பேச்சு எங்கள் தலைமையைக் கோபப்படுத்தியிருந்த சூழலில்தான், 27-ம் தேதி இரவு ரஜினி வீட்டிலிருந்து அமித்ஷாவைத் தொடர்புகொண்டு பேசினார்கள். கட்சி ஆரம்பிக்கவில்லை என ரஜினி அறிக்கை கொடுக்கவிருக்கிறார் என்பதையும் சொல்லிவிட்டனர். அதேபோல, அரசியலில் இல்லாத ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் பலரையும் வெளி உலக தகவல்களைச் சேகரித்துச் சொல்ல கட்டமைத்து வைத்திருக்கிறது பா.ஜ.க. அவர்களில் ஒருவர், இந்த முடிவை ரஜினி எடுக்கிறார் என்பதை 28-ம் தேதி காலையில் தெரிவித்திருக்கிறார். இதெல்லாம் அமித்ஷாவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. உடனே தமிழக பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியைத் தொடர்புகொண்டு பேசினார் அமித்ஷா. அவர் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்படி எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து விவாதிக்குமாறு முருகனுக்கு உத்தரவிட்டார் ரவி. அதன்படி சந்திப்பு நடந்தது.

ddd

 

அந்தச் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம், கே.பி.முனுசாமியின் பேச்சை மோடியும் அமித்ஷாவும் ரசிக்கவில்லை. அவரது பேச்சு எல்லைமீறிய பேச்சாக இருக்கிறது. முதல்வராக இருந்துகொண்டு உங்களால் பேச முடியாததை அவரை வைத்து பேசவைத்திருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பா.ஜ.க.வினர் எந்த வகையில் கருங்காலிகள்? அவர் பேச்சில் உங்களுக்கு உடன்பாடில்லையெனில் அங்கேயே அவரை கண்டித்திருக்க வேண்டும். கூட்டத்தில் நீங்கள் பேசும்போதுகூட, "நாடாளுமன்றத்துக்கு ஒரு வகையிலும் சட்டமன்றத்துக்கு ஒரு வகையிலும் சிந்தித்துதான் மக்கள் வாக்களிப்பார்கள்' என்றீர்கள். அதாவது, "இது சட்டமன்ற தேர்தல்; எனக்காகத்தான் மக்கள் ஓட்டுப் போடுவார்களே தவிர, மோடிக்காக அல்ல என சொல்லாமல் சொல்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்' என கோபத்தை காட்டிய முருகன், கே.பி.முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க எங்கள் தலைமை விரும்புகிறது'' என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இதனை மறுத்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, "திராவிட அரசியலில் ஊறிப்போனவர் முனுசாமி. அவரது பேச்சுக்கு மேடையில் நாங்கள் மறுப்பு சொல்ல முடியாது. அதேசமயம், கட்சியில் அவர் சீனியர். நடவடிக்கை எடுத்தால் கட்சிக்குள் குழப்பம் வரும். அதனால், இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்'' என்றார். மேலும், “அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது” என சொல்லிவிட்டு வந்துள்ளார் முருகன். ரஜினியை வைத்து அ.தி.மு.க.வை வளைத்து வைத்திருந்த பா.ஜ.க.வின் பிடி சற்று தளர்ந்துள்ளது. "ஓரிரு நாட்களில் ஜே.பி.நட்டா சென்னைக்கு வருகிறார். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருக்கின்றன'' என்று விவரிக்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள்.

முருகனின் சந்திப்பைத் தொடர்ந்து கே.பி.முனுசாமியிடம் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. உடனே பத்திரிகையாளர்களிடம் பேசிய முனுசாமி, "தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் வைத்த விமர்சனம் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை அல்ல'' என்று விளக்கமளித்துள்ளார்.

‘ராமன் ஆண்டாலும்... ராவணன் ஆண்டாலும்...’ என அவரது திரைப்பட பாடலைப் போலவே அரசியலுக்குக் கும்பிடு போட்டுவிட்டார் ரஜினி. 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.