Skip to main content

ராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991இல் கொடுத்த பேட்டி!

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-ஆம் ஆண்டு  நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிது. அன்று அவர் உயிரிழந்த கடைசி தருணம் வரை அவர் உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991-ல் அளித்த உருக்கமான பேட்டி அந்நாளில் நம் நக்கீரனில் பிரசுரமானது அது தற்போது மீண்டும் உங்களுக்காக...

 

ராஜீவ்காந்தியின் கடைசி மரண நிமிடங்கள் வரை உடனிருந்து அவராலேயே உயிர் தப்பிய ஜெயந்தி நடராஜன் கதறி அழுதபடி நேரில் கண்டதை பேட்டியாக அளித்தார்.

 

jeyanthi natarajan

ஜெயந்தி நடராஜன்



ஸ்ரீபெரும்புதூரை  நோக்கி நாங்கள் பயணமாவதற்கு முன்பு ராஜீவின் பத்திரிகை ஆலோசகர் சுமன் துபே, ’இரண்டு வெளிநாட்டு பெண் நிருபர்கள் ராஜீவை பேட்டி எடுக்க விரும்புகிறார்கள், இதை அவரிடம் தெரிவியுங்கள்’ என்று கூறினார். நானும் நந்தம்பாக்கத்தில் அவரிடம் விவரத்தை கூறினேன். அவர் ’பூந்தமல்லி நிகழ்ச்சி முடிந்த பின் காரில் ஏற்றிவிடுங்கள். காரிலேயே பேட்டி தருகிறேன்’ என்றார். அதன்படி அந்த நிருபர்கள் காரிலேயே பேட்டி எடுத்தனர்.


கார் ஸ்ரீபெரும்புதூரை அடைந்தது. முதலில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் காரில் ஏறி மேடைக்கு அருகில் இறங்கினார். நானும் காரிலிருந்து இறங்கி ராஜீவுடன் சேர்ந்து நடந்து சென்றேன். திடீரென ஞாபகம் வந்தவராகத் திரும்பிய ராஜீவ் ''அந்த பெண் நிருபர்கள் எங்கே? அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளாதவாறு நீங்கள் கவனித்து கொள்ள வேண்டும்” என்றார்.


நான் உடனடியாக நகரவில்லை. ''ஜெயந்தி... வெளிநாட்டு நிருபர்கள், அவர்களை நாமதான் பத்திரமா பாதுகாக்கணும் புறப்படுங்க...'' என்றார். வேறு வழியில்லாமல் திரும்பி மெதுவாக நடந்தேன். எட்டு அடிதூரம்தான் நடந்திருப்பேன் ''டமார்'' என்ற ஒரு பெரும் சத்தம் என் காதில் கேட்டது. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். ராஜீவ்காந்தி நின்றிருந்த இடத்தில் தீப்பிழம்பும் புகையுமாக இருந்தது.

 

 

rajiv gandhi's last minute

குண்டு வெடிப்பில் ராஜீவ் காந்தி உடல்



போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் அங்கும் இங்குமாக ஓடினர். ஒன்றும் புரியாமல் நான் ஸ்தம்பித்து நின்றேன். திடீரென ஒரு கதறல் ''ராஜீவ் காந்தி எங்கே...''

சடாரென அந்த இடத்திற்கு வந்தேன். போலீசார் தடுத்தும் கேட்காமல் ராஜீவ் இருந்த இடத்திற்கு ஓடினேன். நான் முதலில் பார்த்தது  மெய்க்காப்பாளர் குப்தாவைத்தான். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்தது. ராஜீவ் காந்தியை தேடினேன். ஒரு உடலின் தலை முடியை பார்த்தவுடன் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல புரட்டிப்பார்த்தேன். காலில் போடப்பட்டிருந்த ஷூவில் இருந்த 'லோட்டா' என்ற எழுத்தை பார்த்தவுடன் அதிர்ந்து போனேன்.

 

rajiv gandhi last press meet

கடைசி செய்தியாளர் சந்திப்பு



காரணம் ராஜீவை விமானநிலையத்தில் சந்தித்தபோது அவரின் ஷூவில் அந்த எழுத்துக்களைப் பார்த்தேன். ராஜீவின் உடல்தான் என்று அறிந்த நான் 'அய்யோ' என்று அலறினேன். மூப்பனார் பக்கத்தில் ஓடி வந்தார், அவரும் கதறி அழுதார்.”

கடைசியில், ”எங்கள் உயிர் மூச்சான உத்தமமானவர், இப்படி அரசு ஆஸ்பத்தரி சவக்கிடங்கில் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே'' என்று நம்மிடம் பேசும் போதே கதறி அழுதார் ஜெயந்தி நடராஜன்.

 

 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.