Skip to main content

எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல்காந்தி; பிள்ளையார் சுழி போட்ட விஷ்ணு பிரஷாத்! 

Published on 07/06/2024 | Edited on 10/06/2024
Rahul Gandhi becomes the Leader of the Opposition

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 99 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புமாறு மாநில காங்கிரஸ் தலைமைக்கு நேற்று இரவு உத்தரவிட்டது காங்கிரசின் அகில இந்திய தலைமை. அதனடிப்படையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி உடனடியாக அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றித் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் பின்னணியில், தமிழகத்தின் கடலூர் காங்கிரஸ் எம்.பி.விஷ்ணு பிரசாத் இருக்கிறார் என்று காங்கிரஸில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

இது குறித்து விசாரித்த போது, ‘கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 55 இடங்கள் கிடைத்தது. அதனால் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி அந்தஸ்து  காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க குறைந்தபட்சம் 60 எம்.பி.க்கள் தேவை. அந்த எண்ணிக்கை இல்லாததால் எதிர்க்கட்சி தலைவர் வாய்ப்பினை கடந்த 5 ஆண்டுகளில் இழந்திருந்தது காங்கிரஸ். எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாததால் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுத்தார் ராகுல். இதனால் அந்தப் பதவியில் மல்லிக்கார்ஜுன கார்கே அமர வைக்கப்பட்டார்.

Rahul Gandhi becomes the Leader of the Opposition

தற்போது, காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்திருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கவிருக்கிறது. அதனால் இந்த முறை ராகுல்காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும், அதற்கேற்ப நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என டெல்லி சென்ற கடலூர் எம்.பி. விஷ்ணுபிரசாத், காங்கிரசின் மூத்த தலைவர்களிடமும், எம்.பி.க்களிடமும் பேசியிருக்கிறார். மேலும் அவர், அழுத்தமாக வாதிடவும் செய்திருக்கிறார்.

இது காங்கிரஸ் தலைமையில் நேற்று பரவலாக விவாதிக்கப்பட்டது. அதேசமயம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையைத் தொடர்புகொண்டு, ‘நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்’ என்று விஷ்ணு பிரசாத் யோசனைத் தெரிவித்தார். இது குறித்து செல்வப்பெருந்தகை ஆலோசித்துக் கொண்டிருந்தபோதே, தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்குமாறு செல்வப்பெருந்தகைக்கு டெல்லியிலிருந்து உத்தரவு வந்தது. அதன் பேரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தீர்மானத்தை அனுப்பி வைத்துள்ளது’ என்று பின்னணிகளைச் சுட்டிக்காட்டினார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்; ஆனால் ஆட்சி எங்களிடம் இருக்கிறது' - வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
' You have succeeded; But the government is with us' - Vanathi Srinivasan interview

நேற்று கோவையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுகவில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை பறைசாற்ற இந்த முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''இதற்கு முன்பு கூடதான் இதுபோன்ற கூட்டணியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இது முதல் தடவை அல்ல. நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் ஆனால் ஆட்சி எங்களிடம் இருக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம். நீங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் மத்தியில் மூன்றாவது முறையாக எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். உங்களோடு கூட்டணியில் உள்ளவர்கள் அடுத்த சட்டசபை தேர்தல் வரை எத்தனை நாள் கூட்டணியில் இருப்பார்கள் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்கிறோம்.

எங்களுடைய கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. 2004-இல் திமுக மத்தியில் கூட்டணி அரசின் ஆட்சி அமைக்கின்ற போது மந்திரிகளுடைய துறைகளுக்காக என்னென்னவெல்லாம் பஞ்சாயத்து நடந்தது; யார் யார் கிட்ட எல்லாம் பஞ்சாயத்து நடந்தது. பத்திரிகையாளர்கள்தான் எந்த மினிஸ்ட்ரி யாருக்கு வேண்டும் என முடிவு செய்துகொண்டு இருந்தார்கள். ஆனால் இப்பொழுது எவ்வளவு ஸ்மூத்தாக கூட்டணி அரசு எல்லா கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நடந்துள்ளது.

கடந்த ஏழாம் தேதி பார்லிமென்டில் நிதீஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் இவ்வளவு திறமையான பிரதமருடைய தலைமையில் பணியாற்றுவதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என இரண்டு தலைவர்களும் பேசுகிறார்கள். அதனால் எங்களுடைய கூட்டணியில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த முடியும் என்று நினைக்க முடியாது. அத்தனை கூட்டணிக் கட்சிகளும் பிரதமர் மோடி மீது பிரம்மாண்டமான நம்பிக்கை வைத்துள்ளார்கள்; எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். எங்களுடைய ஐந்து வருட காலம் எந்தவித சிக்கலும் இல்லாமல் நல்லபடியாக போகும். நாங்கள் எந்தப் பத்திரிகையாளரையும், இடைத் தரகரையும், புரோக்கரையும் வைத்துக்கொண்டு மந்திரி சபையை அமைக்கவில்லை'' என்றார்.

Next Story

'நீட் தேர்வின் தீமையை முன்னறிவிப்பு செய்தது திமுகதான்'- முதல்வர் மு.க.ஸ்டாலின்  

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
'It was DMK who predicted the evil of NEET'- Chief Minister M.K.Stalin

நீட் தேர்வின் தீமைகளை அனைவருக்கும் புரிய வைக்க ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது திமுகதான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றனர். ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 7-க்கும் மேற்பட்டோர் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளது சந்தேகத்தை எழுப்பிய நிலையில், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக வைத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் எழுப்பப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'நீட் தேர்வின் ஆபத்தை முதலில் முன்னறிவித்தது திமுக தான். ஆட்சிக்கு வந்த பிறகு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து நீட் அடிப்படையிலான சேர்க்கையின் தாக்கத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். முழுமையாக இதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுவரை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. சமீபத்திய பெரிய அளவிலான முரண்பாடுகள் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருவதை வெளிக் காட்டுவதாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் தேசிய அளவில் பரப்புரை மேற்கொள்வோம். நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குரல் எழுப்ப இருக்கிறார்கள்' என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

நீட் தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், பஞ்சாபி, பெங்காலி உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணைத்து எக்ஸ் பக்கத்தில் இந்த பதிவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.