Skip to main content

கனவு மெய்ப்படும்.. இந்தி பள்ளி பாடபுத்தகத்தில் தமிழ் மாணவியின் சாதனை!  

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Puthukottai college student Jayalakashmi's Lesson

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஜெயலெட்சுமி. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணைய வழி போட்டித் தேர்வு மூலம் நாசாவுக்கு செல்ல தேர்வாகி இருந்தார். ஆனால், அமெரிக்கா செல்ல பணமில்லை. இதையறிந்து ஏழை மாணவிக்கு உதவ முன்வந்த பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள். அதே போல கிராமலாயா என்ற தொண்டு நிறுவனமும் மாணவிக்கு உதவிகள் செய்ய முன்வந்த போது தனக்கு போதிய உதவிகள் கிடைத்துவிட்டதாக ஜெயலெட்சுமி சொல்ல, அப்படியானால் உங்கள் வீட்டில் கழிவறை இருக்கா இல்லை என்றால் கிராமாலாயா கட்டித்தரும் என்றனர். 

 

இதைக் கேட்ட பள்ளி மாணவி ஜெயலெட்சுமி, “என் வீட்டில் மட்டுமல்ல எங்க ஊரிலேயே யார் வீட்டிலேயும் கழிவறை இல்லை. அதனால் என்னைப் போன்ற பெண் குழந்தைகள் ரொம்பவே அவதிப்படுகிறோம். 2 கி.மீ தள்ளி இருக்கிற குளத்துக்கு போறதுக்குள்ள டாஸ்மாக் கடைகளை கடந்து போகனும். இதுக்கு பயந்தே விடியறதுக்குள்ள போகனும் அப்பவும் அச்சமாக இருக்கும். விடிஞ்ச பிறகு 'வயசுப் பொண்ணுங்க வலியோட கஷ்டப்படுறாங்க' அதனால எங்க ஊருக்கு எல்லாருக்கும் கழிவறை கட்டித் தரமுடியுமா?” என்று கேட்டார்.

 

Puthukottai college student Jayalakashmi's Lesson

 

அசந்து போன கிராமாலயா நிர்வாகிகள் 'உன் ஒருவருக்கு கிடைப்பதை ஊருக்கே பகிர்ந்து கொடுக்கும் பறந்த மனதை பாராட்டுகிறோம்' என்று சொன்னதோடு ஊருக்கே கழிவறைகள் கட்ட ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று கழிவறைகளின் அவசியம் குறித்து மாணவியும் கிராமாலாயா நிர்வாகிகளும் எடுத்துக் கூறி 126 கழிவறைகளை கட்டியுள்ளனர். ஆனால், மாணவியின் கனவான நாசா போகும் திட்டம் கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுவிட்டது.

 

கிராமத்து மாணவியின் இந்த கழிவறைத் திட்டம் அறிந்து பலரும் பாராட்டி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த தற்போதைய முதல்வரும் அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். அதே போல சுற்றுப் பயணம் வந்த திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி., மாணவி ஜெயலெட்சுமியின் ஆதனக்கோட்டை கிராமத்தில் உள்ள வீட்டிற்குச் சென்று பழங்கள், புத்தகங்கள், சால்வை வழங்கி பாராட்டியதுடன் அவருக்கு எப்படி இந்த திட்டம் தோன்றியது என்றெல்லாம் கேட்டறிந்து பாராட்டியதுடன் மாணவியின் வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் உரையாற்றினார். தொடர்ந்து குடும்பத்தினருடன் இணைந்து மாணவி வீட்டு வாசலில் மரக்கன்று நட்டார். 

 

Puthukottai college student Jayalakashmi's Lesson

 

அப்போது  மாணவி ஜெயலெட்சுமி நம்மிடம், “கனிமொழி எம்.பி, திடீர்னு வீட்டுக்கு வந்தாங்க. 2 கலைஞர் புத்தகம், 2 அப்துல் கலாம் புத்தகங்கள் கொடுத்தாங்க. அப்பறம் கழிவறை கட்டும் யோசனை எப்படி வந்ததுன்னு கேட்டு பாராட்டினாங்க. அவங்க வந்தது நினைவாக மரக்கன்று நட்டோம். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

 

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவராலும் பாராட்டப்பட்டு வந்த மாணவி ஜெயலெட்சுமி, தற்போது இளங்கலை வரலாறு கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளார். இந்நிலையில், மாணவி ஜெயலெட்சுமிக்கு மேலும் ஓர் அங்கீகாரமாக மகாராஷ்ட்ரா மாநில தமிழ் புத்தகத்தில் அவரின் சாதனை இடம் பெற்றுள்ளது. 

 

Puthukottai college student Jayalakashmi's Lesson

 

மகாராஷ்ட்ரா மாநில பள்ளிகளில் ‘தமிழ் பாலபாரதி’ என தமிழ் விருப்ப பாடமாக உள்ளது. அதில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்தில் மாணவி ஜெயலெட்சுமியின் சாதனை ‘கனவு மெய்ப்படும்’ எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது. மாணவி ஜெயலெட்சுமி பற்றிய பாடத்தை ரெ.சிவா என்பவர் எழுதியுள்ளார். தமிழ் மாணவியின் சாதனையை வேற்று மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் படிப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்கள் ஏராளமானோர் பெருமையாக நினைக்கின்றனர்.  

 

இது குறித்து மாணவி ஜெயலெட்சுமி நம்மிடம், “என் கனவு மெய்ப்படத் தொடங்கியிருக்கிறது அண்ணா. நாசா போக நினைத்தேன் கரோனா தடை போட்டது. அதனால் மனமுடையவில்லை அந்த நேரம் தான் கிராமாலாயா என்னை தேடி வந்து உதவி செய்தது. கிராமாலாயாவின் உதவி எனக்கு மட்டுமின்றி என் கிராமத்தில் உள்ள 126 வீடுகளுக்கும் கிடைக்க செய்தேன். ஒரு பெண்ணின் வலியும் வேதனையும் எனக்கு தெரியும். அதனால் தான் கழிவறையை கேட்டு பெற்றேன். இன்று எங்கள் கிராம பெண்களிடம் அந்த வேதனை இல்லை என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. இதெல்லாம் ஒரு பாடமாக நம் குழந்தைகள் படிக்கிறார்கள் என்னும் போது பெருமையாக உள்ளது. இதற்காக உதவிய அனைவருக்கும் நன்றி. நம்மால் முடியும்; சாதிப்போம் என்ற எண்ணம் இருந்தால் போதும், எந்த தடைகளையும் உடைக்கலாம் அண்ணா” என்றார்.

 

 

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.