Skip to main content

அமலாக்கத்துறை காட்டிய ஆதாரம்! வெலவெலத்த டி.டி.வி. தினகரன்! 

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

 

Proof shown by the Enforcement Department!to T.T.V. Dinakaran!

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அந்தச் சூழலில் சசிகலா அணிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றவியல் போலீசாரிடம் புகார் கொடுத்தார் தேர்தல் அதிகாரி. இந்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரையும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி டி.டி.வி. தினகரனையும் கைது செய்தது டெல்லி போலீஸ், இரண்டு மாத சிறை வாசத்துக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானார் தினகரன்.


கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையிலெடுக்க, கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு தினகரன் ஆஜராக, மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’பெண் தொழிலதிபர் ஒருவரிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர் டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார். பொருளாதார குற்றம் என்பதால் அமலாக்கத்துறையும் கடந்த 4-ந்தேதி சுகேஷ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரிடம் டெல்லி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச விவகாரமும் விசாரிக்கப்பட்டிருக்கிறது.


அந்த விசாரணையில், சின்னத்தைப் பெற்றுத்தர 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு முன்பணமாக 25 கோடி ரூபாயை தினகரன் கொடுத்தார் என்றும், அதை வைத்தே தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க அணுகியதாக சொல்லியிருக்கிறார் சுகேஷ். இதனையடுத்தே, தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப, ஆஜரானார் தினகரன். அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் பிரசாந்த்குமார் ஐ.ஆர்.எஸ். மேற்பார்வையில் அவர் அமைத்த டீம் தினகரனிடம் விசாரணை நடத்தியிருக்கிறது.


விசாரணையில் அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார் தினகரன். குறிப்பாக, சுகேஷுக்கும் உங்களுக்கும் நட்பு எப்படி உருவானது என அதிகாரிகள் கேட்க, “அவரை நான் பார்த்தது கூட கிடையாது; நட்பு எப்படி உருவாகும்?” என தினகரன் கெத்தாக பதில் சொல்லியிருக்கிறார்.


அப்போது, “நீங்க சொல்ற பதில்கள் உங்களுக்கே எதிராகப்போகவும் வாய்ப்பிருக்கிறது. அதனால எல்லாத்துக்கும் தெரியாதுன்னு சொல்லாதீங்க. உண்மையைச் சொல்லுங்கள்” என்று அதிகாரிகள் சொன்னபோதும், சுகேஷை தெரியாது என்றே தினகரன் திரும்பத் திரும்பச் சொல்ல, கடுப்பான அதிகாரிகள், 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியபோது கொடுத்த வாக்குமூலத்தையும், சில புகைப்படங்களையும் தினகரனிடம் காட்டினார்கள். அதில், ஒரு ஹோட்டலில் சுகேஷும் தினகரனும் சந்தித்த சி.சி.டி.வி. காட்சிகள் இருந்தன.


அதைப் பார்த்த தினகரன் வெலவெலத்துப் போயிருக்கிறார். அதன்பிறகு வாய் திறந்த தினகரன், “அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்த போது என்னை சந்தித்த அவர், அரசியல் பிரபலங்களையும் அதிகாரிகளையும் தனக்கு தெரியுமென்றும், இரட்டை இலை சின்னத்தை உங்களுக்கு சாதகமாக பெற்றுத்தர என்னால் முடியுமென்றும், ஆனால் கொஞ்சம் செலவாகும் என்றும் சொன்னார். அதில் எனக்கு விருப்பமில்லையென்பதால் மறுத்து விட்டேன். அப்படியிருக்க அந்த நபர் ஏன் மாற்றி மாற்றி பொய் சொல்கிறார்னு தெரியலை. என்னை மாட்டிவிட அரசியல் சதி நடக்கிறது. நான் நிரபராதி” என கெஞ்சியிருக்கிறார்.


“அரசியல் சதியை யார் செய்கிறார்கள்?” என அதிகாரிகள் கேட்க, பதில் சொல்லவில்லை தினகரன். அதேபோல, சென்னையை சேர்ந்த மோகன்ராஜ், கோபிநாத் (சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டவர்) குறித்த பல கேள்விகளுக்கும் தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார். கூப்பிடும்போது மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்கிற எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டார் தினகரன். ஆனால், இந்த வழக்கு தொடர்பாக தினகரனுக்கும் சுகேஷுக்குமான தொடர்புகள் அனைத்தையும் சேகரித்து வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. இதில் எந்த சூழலிலும் அவர் தப்பிக்க முடியாது” என்கின்றன டெல்லி தகவல்கள்.

 

Proof shown by the Enforcement Department!to T.T.V. Dinakaran!

 

தினகரனுக்கு எதிரான விவகாரங்கள் இப்படியிருக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கில் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவர் முடங்கிவிடுவார் என எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், “எனது ஆன்மிக பயணத்தை அரசியல் பயணமாக தொடரப் போகிறேன்; இனிதான் என் அரசியலை எடப்பாடி பார்க்கப்போகிறார்” என்று வெளிப்படையாக பேசத் துவங்கியுள்ளார் சசிகலா.


இந்த நிலையில், எடப்பாடியை பலவீனப்படுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 30 பேரை வளைக்கும் திட்டத்தை போட்டுள்ளார் சசிகலா. முதல்கட்டமாக பட்டியலின எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. இதனையறிந்துள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை, அ.தி.மு.க.வை உடைத்து அதே 30 எம்.எல்.ஏ.க்களை வளைத்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உட்கார திட்டமிட்டுள்ளது. இதனை உணர்ந்து பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க ரகசியமாக களத்தில் குதித்துள்ளது தி.மு.க.


ஆக... முக்கோண சிக்கலில் அ.தி.மு.க.வின் 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.

Next Story

“ஓ.பி.எஸ்-ஐயும், தினகரனையும் பாஜக மிரட்டி போட்டியிட வைத்துள்ளது” - முதல்வர் ஸ்டாலின்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
mk stalin BJP has threatened OPS and Dinakaran to contest

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்,  திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் இருவரையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் அன்றைக்குக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. அதுதான் உண்மை. இந்த இரண்டு துரோகத்தையும் மனதாரச் செய்த கட்சிகள்தான் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும். இந்தச் சட்டங்களை ஆதரித்து, ஓட்டுப் போட்ட பா.ம.க. இப்போது பா.ஜ.க.வுடன் அமைத்திருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி. மருத்துவர் அய்யா ராமதாசு நிலைமையைப் பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலைகுனிந்து நிற்கிறார்கள். இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அடுத்து, தேனி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன். இதே பா.ஜ.க.வைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? “பா.ஜ.க. கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?” என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி.

அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார். 'டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக, ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பா.ஜ.க.” என்று சொன்னவர்தான் இந்தத் தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா? நான் சென்ற கூட்டங்களில் சொன்னது போன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள்.

“மேட் இன் பி.ஜே.பி.” வாசிங் மெஷின் அது. மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கிலாந்து மெஷின் இது. அந்தக் கட்சியில் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 இலட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா? ஏன் இவர் பா.ஜ.க.வுக்குச் சென்றார் என்று.

mk stalin BJP has threatened OPS and Dinakaran to contest

அதுமட்டுமல்ல, அம்மையார் மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? அம்மையார் சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று அம்மையார் ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர். கடைசியாக, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும். தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள். இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். ஓ.பி.எஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த, அவரை மிரட்டி இராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள். இப்படி, பா.ஜ.க.வின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.க.வுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பா.ஜ.க.வுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. ‘B-டீம்’-ஆகப் பழனிசாமியின் அ.தி.மு.க.வைக் குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அ.தி.மு.க.வை ஆட்டுவிக்கிறது பா.ஜ.க.

இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டத்திற்கும் துரோகம் இழைக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சச்சிதானந்தம் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும். தமிழ்நாட்டைக் காக்கட்டும். நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்” என்று கூறினார்.