Skip to main content

ஆட்டம் காணும் அ.தி.மு.க! திமுக, பாஜக போடும் அரசியல் கணக்கு! 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

political parties playing game between  ADMK politics issue

 

"தமிழக அரசியல் எனும் விளையாட்டு மைதானத்தில் அ.இ.அ.தி.மு.க. ஒரு கால்பந்தாக மாறியுள்ளது, அதை பா.ஜ.க., தி.மு.க. இரண்டும் உதைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்' அ.தி.மு.க.வின் ர.ர.க்கள்.

 

இந்த விளையாட்டில் முதலில் சிக்குவது கொடநாடு கொலை வழக்கு. இதில் திடீரென்று ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஆறுகுட்டி எம்.எல்.ஏ. விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஏற்கனவே 3 முறை விசாரிக்கப்பட்ட ஆறுகுட்டி, நான்காவது முறையாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரிவினைக்குப் பிறகு அழைக்கப்பட்டார்.

 

ஆறுகுட்டியும் விசாரணை அதிகாரிகளை ஏமாற்றவில்லை. "கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான சதித்திட்டம் எடப்பாடி வீட்டில்தான் உருவானது. அதற்காக ஒரு மீட்டிங் நடத்தப்பட்டது. அந்த மீட்டிங்கில் சேலம் இளங்கோவன், எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசு, சஜீவன், கனகராஜ், அனுபவ் ரவி, நான் ஆகியோர் கலந்துகொண்டோம். கொடநாடு கொள்ளையை நடத்தும் பொறுப்பை கனகராஜ், அனுபவ் ரவி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். சஜீவனை அவர்களுக்கு பக்கபலமாக இருக்குமாறு எடப்பாடி சொன்னார். கொள்ளையடிக்கும்போது மின்சாரம், சி.சி.டி.வி., போலீஸ் ஆகியவை அங்கு இருக்காதபடி எடப்பாடி பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். அதன்பிறகு கனகராஜும், சஜீவனும் கேரளாவிலிருந்து குற்றவாளிகளைத் திரட்டினார்கள். அவர்கள் அனைவரையும் சேலம் இளங்கோவன் சந்தித்தார். குற்றவாளிகளுக்கு கொள்ளையடிக்கும் தினத்தில் செலவுக்காக மட்டும் கனகராஜிடம் லட்சக்கணக்கில் இளங்கோவன் பணம் கொடுத்தார் என ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை ஆறுகுட்டி கொடுத்தார். 

 

political parties playing game between  ADMK politics issue

 

அப்படியே இந்தத் தகவல்களை ஓ.பி.எஸ்.ஸிடம் அவரது செய்தித்தொடர்பாளராக இருக்கும் கோவை செல்வராஜிடம் பாஸ் செய்தார். எனக்குத் தெரிந்த உண்மைகளை நான் போலீசாரிடம் சொல்லிவிட்டேன்'' என ஆறுகுட்டி சொன்னது ஓ.பி.எஸ். வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஓ.பி.எஸ். தரப்பு கொடநாடு வழக்கை விசாரிக்கும் டி.ஐ.ஜி. முத்துசாமியையும் மாநில உளவுப் பிரிவு தலைவர் டேவிட்சன் தேவஆசிர்வாதத்தையும் தொடர்புகொண்டு "ஆறுகுட்டியின் சாட்சியத்தை வைத்து சேலம் இளங்கோவனையும், எடப்பாடியையும் கொடநாடு வழக்கில் கைது செய்யுங்கள்' எனக் கேட்டுக்கொண்டது.

 

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு எதிராக வரும் அனைத்து சாட்சியங்களையும் காவல்துறை சேகரித்து வைத்துள்ளது. எடப்பாடி மீது கைது நடவடிக்கை அல்லது விசாரணை என எதுவாக இருந்தாலும் முதல்வரின் உத்தரவைப் பொறுத்தே அமையும் என்ற விவரம் போலீஸ் தரப்பிலிருந்து ஓ.பி.எஸ். முகாமுக்கு சென்றதும், எடப்பாடியின் மகன் மிதுன், தி.மு.க. தரப்போடு கொடநாடு விஷயத்தில் டீலிங் போட்டிருக்கிறார் என அவர்கள் பேச ஆரம்பித்தனர்.

 

இந்நிலையில்.. எடப்பாடி தனது வீட்டில் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தை நடத்தினார். அதில் தற்பொழுது பத்திரப்பதிவுத் துறையின் உயரதிகாரியாக இருக்கக்கூடிய சங்கர் மற்றும் தற்போது மதுரையில் அசிஸ்டெண்ட் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருக்கக் கூடிய இன்னொருவரும் கலந்துகொண்டனர். அந்த தற்காலிக அலுவலகத்தில் கொடநாட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட டாகுமெண்டுகள் நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகியோர் பெயருக்கு மாற்றப்பட்டது என பத்திரப்பதிவுத் துறையிலிருந்து கொடநாடு வழக்கை விசாரிக்கும் போலீசுக்கு தகவல்கள் எட்டியிருக்கிறது.

 

political parties playing game between  ADMK politics issue

 

அதேசமயம், கொரோனா பாதிப்பு என எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ்.ஸை ‘அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்’ என குறிப்பிட்டு, விரைவில் நலம்பெற வேண்டும் என டுவிட்டரில் பதிவு செய்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

அதேபோல் அ.தி.மு.க. தலைமைக் கழகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அளித்த விளக்கத்தில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரு தரப்பினரும் வன்முறையில் இறங்கினார்கள். இ.பி.எஸ். தலைமைக் கழகத்தைச் சுற்றி தனது மாவட்டச் செயலாளர்களை நிறுத்திவைத்தார். ஓ.பி.எஸ். கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வருவதை எங்களால் தடுக்க முடியாது என தெரிவித்திருக்கிறது. இந்த அலுவலகம் தொடர்பாக எந்த உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்கு இல்லை. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதும் நாங்கள் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உட்படுத்தி சீல் வைத்தோம், என நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார்கள்.

 

political parties playing game between  ADMK politics issue

 

அதேநேரம், தேர்தல் கமிஷனில் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் மாறி, மாறி கொடுத்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஓ.பி.எஸ். பக்கம் ஆட்களே இல்லை எனச் சொன்ன எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலரை கட்சியை விட்டு நீக்கிக்கொண்டிருக்கிறார்.

 

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் சொன்னதன் அடிப்படையில் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் தனது ஐடி விங்க் நிர்வாகி சதீஷ் மற்றும் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ரமணா ஆகியோர் சொன்னதன் அடிப்படையில் பலரையும் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார் எடப்பாடி. ஜே.சி.டி. பிரபாகரனின் மகளும், மகனும் மாநில நிர்வாகிகளாக இருந்தார்கள், அவர்களையும் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார் இ.பி.எஸ்.

 

அதேபோல் ஓ.பி.எஸ்., எடப்பாடி அணியில் இருக்கக்கூடிய 42 மாவட்டச் செயலாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கியிருக்கிறார். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் இ.பி.எஸ். அணிக்கு எதிராக மா.செ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என ஒரு பெரிய நிர்வாகிகள் பட்டியலை ஓ.பி.எஸ். தரப்பு தயார் செய்துவருகிறது. இனி ஒவ்வொரு ஏரியாவிலும் ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ். அணி என அ.தி.மு.க. இரண்டாக செயல்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

இதற்கிடையே "இ.பி.எஸ். அணியைச் சார்ந்த ஆர்.பி.உதயகுமார், சினிமா ஃபைனான்சியர் ஒருவரின் பினாமி, அவர் பல கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருக்கிறார்' என ஓ.பி.எஸ். தரப்பு குற்றம்சாட்ட, "நான் ஓ.பி.எஸ். தரப்பின் வண்டவாளங்களை எல்லாம் வெளியில் சொல்வேன்' என ஆர்.பி.உதயகுமார் மிரட்டியுள்ளார்.

 

இதுபற்றி நம்மிடம் பேசிய சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் "சசிகலா, ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக முதலில் அணுகிய நபர் ஆர்.பி.உதயகுமார்தான். அவர் செட்டாகவில்லை என்பதால் தான் வைத்திலிங்கத்தை அணுகினோம்' என ஓ.பி.எஸ். அணி உருவானதன் ரகசியத்தைச் சொன்னார்கள்.


இந்நிலையில், பா.ஜ.க. ஒரு தெளிவான கட்டளையை இ.பி.எஸ்.ஸுக்கும், ஓ.பி.எஸ்.ஸுக்கும் பிறப்பித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தென்சென்னை, சிவகங்கை, திருப்பூர், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், திருச்சி ஆகிய தொகுதிகளில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

 

political parties playing game between  ADMK politics issue

 

ஈரோட்டில் மத்திய அமைச்சர் முருகன், தென்சென்னை அல்லது கோவையில் அண்ணாமலை, ராமநாதபுரத்தில் இப்ராகிம், திருப்பூரில் கனகசபாபதி என வேட்பாளர்களையும் பா.ஜ.க. தயார் செய்துவருகிறது.


"நாங்கள் 40 தொகுதிகளில் வேலை செய்யமாட்டோம். இந்த 8 தொகுதிகளில் பூத் கமிட்டிகள் அமைத்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மத்திய அமைச்சருக்கு பொறுப்பு கொடுத்து வேலை செய்யப்போகிறோம். அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணிகளும் எங்களை ஆதரிக்க வேண்டும். இதில் எந்தக் குழப்பமும் வரக்கூடாது' என உத்தரவிட்டுள்ளது.


"இதில் ஏதாவது பிரச்சினை வருமென்றால் இரட்டை இலை முடக்கப்படும், வருமான வரித்துறை உட்பட அனைத்து ரெய்டுகளும் அ.தி.மு.க. மேல் பாயும்' என எச்சரிக்கையும் அளித்துள்ளது.


இப்படி "தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் அலை பாயும் அ.தி.மு.க.வில் அடுத்தகட்டமாக ஓ.பி.எஸ். பொதுக்குழு நடத்த திட்டமிட்டிருக்கிறார். இந்தச் சண்டை பாராளுமன்றத் தேர்தல்வரை நீடிக்கும்' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 

 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.