Skip to main content

பெரியாரும் அண்ணாவும் சந்தித்துக்கொண்ட சாதிய மாநாடு - முனைவர் இரா. மஞ்சுளா

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

Periyar and Anna met at Tiruppur

 

ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்தது அரசியல். மக்களின் அன்றாடத் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆட்சி செய்யும் அரசை மக்கள் கொண்டாடுவர். மாறாக, அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் சூழலில், அவர்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கும் போராடும் நிலை ஏற்பட்டால் மக்கள் எழுச்சி ஏற்பட்டு புரட்சி வெடிக்கும். இப்படிப்பட்ட சூழல்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திச் சரியாக வழிநடத்தத் தெரிந்தவரை அந்தச் சமூகம் தலைவராக ஏற்றுக் கொள்ளும். அப்படி வாழ்வியலிலும், அரசியலிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். 

 

அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,


'தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்:
அவர்தாம் பெரியார்!’
-என்று, பெரியாரைத் தனது கவிதைத் தோள்களில் வைத்து உயரே தூக்கினார்.

 

இவருக்கு முன்னரும் சீர்திருத்தவாதிகள் இருந்தனர் என்றாலும், அவர்கள் ஆன்மிகத்திலிருந்து கொண்டு முற்போக்கு பேசினர். அதனால் அது தோற்றுப்போனது என்று பெரியார் முழுமையாக நம்பினார். சித்தர்களும், வள்ளலாரும் கூறிய சீர்திருத்த கருத்துக்கள் பக்தி என்ற போர்வைக்குள் அடங்கிப்போயின. முடைநாற்றம் வீசும் மூடப் பழக்க வழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ‘சுயமரியாதை’ என்ற போர்வாளைக் கொண்டுவந்து தருகிறார் பெரியார். பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பலரும் அவரின் நெருக்கமான தொண்டர்களாயினர். எனினும் பெரியார் கருத்துக்கு மாறாக, ஆட்சியில் அமர்ந்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற பேரறிஞர் அண்ணாவையும், ஐயாவின் கரம் பிடித்து நடந்த தொண்டர் என்றே தமிழகம் குறித்து வைத்திருக்கிறது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கையைக்களை எடுப்பது, பெண் விடுதலை போன்றவற்றை நடைமுறைப்படுத்த தீவிரமாகக் களப்பணி ஆற்றியவர்கள். அவர்கள் இருவரும் இதே செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதிக்கு எதிராக களமாடியவர்கள் என்ற போதும், சாதிய மாநாட்டில் இருவரும் சந்தித்துக் கொண்டது காலத்தின் விசித்திரம்.

 

Periyar and Anna met at Tiruppur
முனைவர் இரா. மஞ்சுளா

 

எந்தச் சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிராகக் குரல் கொடுத்தனரோ அதே சாதிய மாநாட்டில் கலந்து கொள்ளும் நிலையில் ஒருவரையொருவர் 1934-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி, திருப்பூரில் நடந்த செங்குந்தர் மகாஜன சங்க மாநாட்டுக் கூட்டத்தில் முதன்முறையாகச் சந்தித்துப் பேசிக்கொண்டனர். ஐயாவின் கருத்தால் அண்ணா ஈர்க்கப்பட்டார் என்றால் அண்ணாவின் பேச்சில் பெரியார் மயங்கினார் என்றே சொல்லவேண்டும். இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ஒரே பீடத்தில் தோழமையுடன் நிற்கும் பெரியார் அண்ணாவின் முழு உருவ வெண்கலச் சிலைகள், அவர்கள் அங்கே முதன் முதலில் சந்தித்துக் கொண்டதன் சாட்சியாக நிற்கின்றன. சாதி கூடாது என்று எதிர்த்தவர்கள் சாதிய மாநாட்டில் கலந்து கொண்டதை எப்படிப் பார்ப்பது என்ற கேள்வி எழும்.

 

அன்றைய சாதிய மாநாடுகள் குறிப்பிட்ட சாதிகளின் பெருமை பேசும் மாநாடுகளாக இல்லாமல் மக்களின் முன்னேற்றத்திற்கான வழிகளை ஆராயும் நோக்கத்தில் நடத்தப்பட்டன என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில் இந்தக் கேள்வி அர்த்தமற்றது என்பது விளங்கும். அதுபோல, கடவுள் கொள்கையை மறுக்கும் பெரியார்தான் அனைத்துச் சாதியினரும் கோயிலுக்குள் செல்லத் தடை விதிக்கக்கூடாது என்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்றும் போராடினார்.  இந்தப் போராட்டங்கள் சாதிய ஏற்றத் தாழ்வை மாற்றிச் சமத்துவ சமுதாயம் மலர வழிசெய்தன.  இதனால் தமிழக மக்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதி அடையாளங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டனர். மற்ற மாநிலத்தவர் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சாதிய அடையாளத்தைப் போட்டுத் தங்கள் மேட்டி மையைக் காட்டுவதைப் பார்க்கும்போது தமிழகத்தில் விதைக்கப்பட்ட பெரியாரிய சிந்தனையின் வீரியத்தை உணர்ந்து கொள்ளலாம்.

 

 - முனைவர் இரா. மஞ்சுளா

 

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.