Skip to main content

8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்! 

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலை. தெலங்கானா மாநிலம், ஷம்ஷாபாத் அருகே சட்டன்பள்ளி மேம்பாலம். அதிகாலை 3.30 மணி என்பதால் பெரிய அளவில் போக்குவரத்தோ… ஆள் நடமாட்டமோ இல்லை. சில காவல்துறை ஜீப்புகளும், அதில் சில அதிகாரிகளும் வந்திறங்குகின்றனர். பின்னாலேயே நான்கு பேர் பீதியோடு, குழப்பமான முகங்களுடன் இறக்கப்படுகின்றனர். சில நிமிட இடைவெளிகளில்... இரவின் நிசப்தத்தைக் கிழிக்கின்றன தொடர் தோட்டா சப்தங்கள். தோட்டா கிளம்பிய துப்பாக்கியின் சூடு ஆறுவதற்குள், தெலங்கானாவை என்கவுன்ட்டர் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நவம்பர் 27-ஆம் தேதி வில்லனாகப் பார்க்கப்பட்ட தெலங்கானா காவல்துறை, டிசம்பர் 6-ஆம் தேதி நான்கைந்து தோட்டா செலவில் மக்கள் மனதில் பெரும் ஹீரோவாகி விட்டது.

 

incident



தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷம்ஷா பாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நவம்பர் 27-ஆம் தேதி தனது வேலை முடித்து திரும்பிய திஷாவின் இருசக்கர வாகனம் பழுதாகிப் போனது. அவரது இருசக்கர வாகனத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பஞ்சராக்கிய முகமது, ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன், சின்டகுன்டா சென்னகேசவலு நால்வரும், அவருக்கு உதவுவதாக முன்வந்தனர். இருந்தும் நம்பிக்கையின்றி தனது சகோதரிக்கு போன் செய்து விவரத்தைத் தெரிவித்தார் திஷா. இதற்கிடையில் திஷாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆக, பதற்றமடைந்து காவல்துறையைத் தொடர்புகொண்டது திஷாவின் குடும்பம். ஆனால், காவல் துறையோ உடனே தேடுதலைத் தொடங்காமல் திஷா யாருடனாவது ஓடியிருப்பாள் என்றும், அது தங்கள் எல்லைக்குள் வராதென்றும் தாமதப்படுத்தியபடியே இருந்தது. இரவு 10 மணியளவில் கொடுக்கப்பட்ட புகாருக்கு, அதிகாலை 3.30 மணியளவில்தான் வழக்குப் பதிவு செய்தது. மறுநாள் காலை திஷா போன் செய்த இடத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட தகவல்தான் திஷா குடும்பத்துக்குக் கிடைத்தது.
 

incident



தெலங்கானாவே கொந்தளித்துப் போனது. நாடெங்கும் "குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என குரல்கள் தன்னிச்சையாக எழுந்தன. விரைவாக குற்றவாளிகள் நால்வரும் கைதுசெய்யப்பட்டனர். அதேபோல, புகாரை தாமதமாகப் பதிவுசெய்த காவல்நிலையத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் ஜெயாபச்சன் உள்ளிட்ட உறுப்பினர்கள் திஷாவின் மரணத்தைக் குறிப்பிட்டுப் பேசும் அளவுக்கு விஷயம் போனது. திஷாவின் பெற்றோருக்கு தெலங்கானா முதல்வரின் மனைவியே நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
 

incident



டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் குற்றவாளிகள் நால்வரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு, குற்றத்தை எப்படி நிகழ்த்தினார்கள் என விசாரிக்க அழைத்துச்சென்றது, கமிஷனர் சஜ்ஜனார் தலைமையில் பத்து காவலர்கள் அடங்கிய குழு. குற்றவாளிகள் நால்வரும் காவல்துறையினர் இருவரின் துப்பாக்கிகளை பிடுங்கிக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி தப்ப முயன்றதாகவும், அதனால் தவிர்க்க இயலாமல் குற்றவாளிகள் நால்வரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்ல நேர்ந்தது எனவும் காவல்துறை கூறியது.
 

incident



சஜ்ஜனார் ஏற்கனவே வாராங்கல்லில் கல்லூரி மாணவிகள் மூவர் முகத்தில் ஆசிட் வீசிய குற்றவாளிகள் மூவரை என்கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி வெளியில் பரவ.. பரவ குற்றவாளிகள் கொல்லப்பட்டதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஹைதராபாத்தில் என்கவுன்ட்டரை மேற்கொண்ட போலீசாரை பொதுமக்கள் பூத்தூவி வரவேற்றதுடன் அவர்களுக்கு இனிப்புகளையும் ஊட்டினர். பட்டாசு வெடித்தும், மேளங்களை இசைத்தும் தங்கள் மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தினர். கமிஷனர் சஜ்ஜனார் படத்துக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களில் என்கவுன்ட்டருக்கு பெரும் ஆதரவு கிடைத்ததுடன், சர்வதேச கவனத்தையும் பெற்றது.
 

incident



சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு குற்றவாளிகளில் ஒருவரான சென்னகேசவலுவின் கர்ப்பிணி மனைவி ரேணுகா, "இதுபோன்ற பாலியல் குற்றவாளிகள் எத்தனையோ பேர் சிறையிலிருக்கிறார்கள். அவர்களையும் சுட்டுக்கொல்லும் வரை அவரது உடலை வாங்கமாட்டேன்'' என தன் ஆட்சேபத்தைத் தெரிவித்தார். மாறாக, திஷாவின் தந்தையோ, “என் மகளுக்கு 8 நாட்களுக்குள் நீதி கிடைத்துவிட்டது'' என தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்க, தாயார்... "இனி என் மகளின் ஆத்மா சாந்தி அடையும்'' என தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கு நடிக- நடிகையர்களிடமிருந்து என்கவுன்ட்டருக்கு வாழ்த்துச் செய்திகள் வந்தன. தமிழகத்திலும் நடிகை நயன்தாரா என்கவுன்ட்டரை வரவேற்றார். நடிகர் சித்தார்த் மட்டும், காவல்துறை சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். டெல்லியில் பாலியல் கொடூரத்திற்குள்ளாகி பலியான நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டும் இதுவரை அது நிறைவேற்றப்படாததால் விரக்தியில் இருந்த நிர்பயாவின் தாய், ஹைதராபாத் என்கவுன்ட்டரை வரவேற்றார்.

மெதுவாக பாராட்டுகள் அதிகரித்த அதேசமயம், குற்றவாளிகள் சட்டபூர்வமற்ற முறையில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பும் விமர்சனங்களும் கிளம்பத் தொடங்கின. அதில் ஒரு தரப்பு, "கொல்லப்பட்டவர்கள் நால்வரும் சமூக, அரசியல் பின்னணி இல்லாதவர்கள். அதனால் எளிதாக என்கவுன்ட்டர் செய்துவிட்டனர். சமூக, அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கும் இதே என்கவுன்ட்டர் தண்டனை வழங்கப்படுமா?' என கேள்வியெழுப்பியது. மற்றொரு தரப்போ, "பின்னணி இருக்கிறது அல்லது பின்னணி இல்லையென்பது பொருட்டில்லை. காவல்துறையே தண்டனையையும் வழங்குமெனில் நீதிமன்றம் எதற்கு இருக்கிறது' என கேள்வியெழுப்பியது.

டெல்லியையே சில்லிட வைத்த நிர்பயா கொலை வழக்கினை விசாரித்த முன்னாள் கமிஷரான நீரஜ்குமார், "அந்த சமயத்தில் எங்களுக்கு நிறைய அழுத்தம் இருந்தது. இருந்தும் நாங்கள் என்கவுன்ட்டரைத் தேர்ந்தெடுக்கவில்லை. சட்டத்தை மதித்து அதன்படி நடந்தோம்'' என்றிருக்கிறார்.

பாலியல் கொடூரத்தை எப்படி நிகழ்த்தினோம் என்பதை நடித்துக் காட்டுவதற்காகத்தான் அதிகாலையில் குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்றிருந்தால், அதனை வீடியோவாக பதிவு செய்திருப்பார்கள். என் கவுன்ட்டருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு மற்றும் சிறப்பு புலனாய்வு விசாரணையில் அந்த வீடியோ சமர்ப்பிக்கப் படும்போது மேலும் பல உண்மைகள் தெரியவரும் என்கிறார்கள். ஹைதராபாத் விவகாரம் சூடு கிளப்பிக் கொண்டிருந்த அதேசமயம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி ஒரு பெண் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே திடுக்கிடவைத்தது.


உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மிதாலி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) 2018 டிசம்பரில் ஐந்து நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மிரட்டலையும் மீறி நீதிமன்றப்படியேறினார் மிதாலி. வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மிதாலி வரும்போது, ஐவரும் வழிமறித்து கத்தியால் தாக்கியதோடு பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்திவிட்டு தப்பியோடினர்.

90 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மிதாலி, ஹைதராபாத் குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அதே தினத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மரணத்துக்கு முன், "குற்றவாளிகளை விடக்கூடாது. அவர்களைத் தூக்கில் போடவேண்டும். அதுதான் எனது கடைசி ஆசை' என கூறிவிட்டு இறந்தார். பலியான பெண்ணின் தந்தை "எனக்கு இழப்பீடு வேண்டாம். ஹைதராபாத் கொடூரர்களைப் போல இந்த ஐந்து பேரையும் ஓட விட்டுச் சுட்டுத் தள்ளுங்கள்' என கலங்கிய கண்களுடன் கொந்தளித்தது பலரையும் திகைக்க வைத்தது.


அதே உன்னாவ் பகுதியில்தான் 2017-ல் எம்.எல்.ஏ. செங்கார் குல்தீப் மற்றும் அவரது சகோதரர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் கொடுத்தார் மற்றொரு பெண். இந்த வழக்கைப் பதிவுசெய்வதற்கே, பாதிக்கப்பட்ட பெண் உ.பி. முதல்வர் யோகி வீட்டின் முன் தீக்குளிப்பு நடவடிக்கையில் இறங்கவேண்டியிருந்தது. இதன்பிறகும், காவல்துறை விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையைத் துன்புறுத்த, அவர் மரணமடைந்தார்.

2019, ஜூலை மாதம் அவரும் அவரது உறவினர்களும் வந்த வாகனம் மற்றொரு கனரக வாகனம் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இருவர் இறந்துபோக, அந்தப் பெண் டெல்லி எய்ம்ஸில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். விபத்துக்கு சில தினங்கள் முன்தான், தனது உயிருக்கு ஆபத்திருக்கிறது என இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார் அந்தப் பெண்.

அதிகபட்ச பாலியல் வல்லுறவுகள், பாலியல்ரீதியாகத் தாக்கப்பட்ட வழக்குகள் பதிவாகி இந்தியாவின் பாலியல் வன்புணர்வுத் தலைநகராக உன்னாவ் பெயர்பெற்றிருக்கிறது. இவ்வருடம் நவம்பர் மாதம் வரைக்கும் மட்டும் 86 வல்லுறவு வழக்குகளும், 185 பாலியல் காரணங்களுக்காக தாக்கப்பட்ட வழக்குகளும் இம்மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

உன்னாவில் மிதாலி கொளுத்தப்பட்ட அதே இடத்தில், ஹிந்துபுர் கிராமத்தைச் சேர்ந்த மற் றொரு பெண்ணை டிசம்பர் 7 ஆம் தேதி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க முயற்சி நடந்திருக்கிறது. அவர் காவல்நிலையத்தில் புகார்கொடுக்க முயன்றபோது, "அதுதான் ரேப் நடக்கலையே… ரேப் நடந்தபிறகு வா. புகாரைப் பதிவு செய்கிறோம்' என திருப்பியனுப்பியிருக்கிறது காவல்துறை.

பொற்கால ஆட்சிக்கு உதாரணமாக ராம ராஜ்யத்தைக் குறிப்பிடும் பா.ஜ.க.வின் முன்னுதா ரண முதல்வர் ஆதித்யநாத் ஆட்சிசெய்யும் உ.பி. ராமராஜ்யமாய் இல்லாமல் காமராஜ்யமாய் இருப்பதுதான் முரண்! உ.பி. அமைச்சர் ரன்வேந்திர பிரதாப்போ, "ராமரே வந்தாலும் சமூகத்தில் குற்றங்கள் நடப்பதைத் தடுக்க முடியாது'' என சப்பைக் கட்டு கட்டுகிறார்.

"தமிழகத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்டவர் கள் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வீடியோவும் எடுத்தனர். இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது' என பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் கொந்தளிக்கின்றனர். காளியப்பன்கவுண்டன்புதூரைச் சேர்ந்த முதுகலை வரலாறு படிக்கும் கீதாவும், சைகாலஜி படிக்கும் சிந்துவும், "ஒரு பெண்ணைச் சீரழிச்சுக் கொன்னதுக்கே, என்கவுன்ட்டர் பண்ண தெலங்கானா போலீஸைப் பார்த்துப் பிரமிச்சுப் போயிட்டோம். 300-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாழாக்கினவங்க பல மாசமா சிறைக்குள்ள நிம்மதியா இருக்காங்க'' என கொதிக்கிறார்கள்.

தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில், ஜி.எஸ். மணி, பிரதீப்குமார் எனும் இரு வழக்கறி ஞர்களும், எம்.எல்.ஷர்மா எனும் வழக்கறிஞரும் இரு தனித்தனி பொதுநல வழக்கொன்றை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். அதேசமயம் தெலங்கானா உயர்நீதிமன்றமும் கொல்லப்பட்ட நால்வரின் போஸ்ட்மார்ட்டத்தை வீடியோ எடுத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. நிகழ்ச்சியின் தீவிரம் கருதி தேசிய மனித உரிமைகள் ஆணையமும் என்கவுன்ட்டர் நடந்த இடத்துக்கே வந்து ஆய்வுசெய்துள்ளது. அதேபோல உன்னாவ் மிதாலி வழக்கில் அலட்சியமாக இருந்த 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இந்தியா முழுமையும் பெண்கள் பாலியல் வல்லுறவு, கொலை தொடர்பான வழக்குகள் நடைபெறுவது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியா செல்லும் தம் நாட்டுப் பெண்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. பாரத மாதாவோ, சர்வதேச பார்வைகளின் அழுத்தம் தாங்காது தலைகுனிந்து நிற்கிறாள்.


-க.சுப்பிரமணியன்.

 

 

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.