Skip to main content

கட்சி சின்னத்தில் கல்யாண தாலி! - அதிசய கிராமம்!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

dddd

 

தமிழர்கள் ஆதிகாலத்தில், பனை ஓலையைத் தாலியாகக் கட்டினார்கள் என்று சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. பின்னர், அது மஞ்சள் கயிறாக மாறியது. காலப்போக்கில் தங்கத்தாலி வழக்கத்துக்கு வர, அதில் தங்கள் குலதெய்வங்களின் படத்தைப் பொறித்தார்கள். அது இப்போது குலம், கோத்திரம் என்று பல்வேறு வடிவங்களில், பெண்களின் கழுத்தில், இதயத்துக்கு நெருக்கமாகத் தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில்தான், கட்சி சின்னத்தையே தாலியாக கட்டும் அதிசய கிராமம் பற்றி தகவல் வர... விருத்தாசலத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், உள்ள மு.பட்டி எனும் கிராமத்திற்குச் சென்றோம். அரசியல் விழிப்புணர்வும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட திராவிட கிராமமாகக் திகழும் மு.பட்டியில் உள்ள தி.மு.க.வினர், தங்கள் குடும்பத் திருமணங்களில், உதயசூரியன் சின்னத்தைத் தாலியில் பொறித்துக் கட்டுவதை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்து வருகிறார்களாம்.

 

dddd

 

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் திருமணம், விருத்தாசலத்தில் நடப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு, அங்கே சென்றோம். மு.பட்டி கருணாநிதி - கண்ணகி தம்பதியரின் மகன் வைகோவிற்கும், பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - செந்தமிழ்ச்செல்வி தம்பதிகளின் மகள் இந்துமதிக்கும் விருத்தாசலத்தில் உள்ள சபிதா திருமண மண்டபத்தில் சுயமரியாதைத் திருமணம் நடந்துகொண்டிருந்தது. தி.மு.க.வின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கணேசன் முன்னிலையில், திருச்சி சிவா எம்.பி. அந்த சீர்திருத்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். மணமகள் கழுத்தில் உதயசூரியன் தாலியை மணமகன் கட்டினார்.

 

தனது மகளின் புதுமனை புகுவிழாவில் தலைகாட்டிவிட்டு, இந்த சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்க வந்திருந்த திருச்சி சிவா வாழ்த்தும்போது, “பல ஆண்டுகளாக கொள்கைப் பிடிப்போடு உள்ள கிராமம் மு.பட்டி. மணமகனின் தாத்தா சுப்பிரமணியன் திராவிட முன்னேற்றக் கழகத்தை அங்கே வேர் ஊன்றச் செய்தவர். அவரது மகன்களும், அவரது பேரப் பிள்ளைகளும் அதே வழியில் சுயமரியாதைத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து திராவிட உணர்வோடு திகழ்ந்து வருகிறார்கள். இவர்கள் குடும்பம் மட்டுமல்ல, அங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பிடிப்புள்ள அனைத்து குடும்பத்திலும், இதே போன்ற சூரியத்தாலி திருமணங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது” என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

 

dddd

 

மணமகனின் தந்தை கருணாநிதியிடம் நாம் கேட்டபோது, “எனது அத்தை ராசாயாள் என்பவரைத் திட்டக்குடி அருகில் உள்ள தொ.செங்கமேடு கிராமத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது எனது தந்தை சுப்பிரமணின் அடிக்கடி தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுவருவார். அங்கேயே சில நாட்கள் தங்கி அங்குள்ள விவசாய வேலைகளைக் கவனிப்பார். 1952-ஆம் ஆண்டு அந்த ஊரைச் சேர்ந்த தொ.பிச்சமுத்து என்பவர், அந்த ஊரில் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியதோடு, பல்வேறு கிராமங்களிலும் கட்சியைத் துவக்கினார். அதன் காரணமாக அவர் விருத்தாசலம் வட்டச் செயலாளராக பதவி வகித்தார். அவர் கலைஞரையும், கவிஞர் கண்ணதாசனையும் அந்த ஊருக்கு அழைத்துவந்து கூட்டம் நடத்தினார். அப்போதெல்லாம் பஸ் வசதி இல்லாத காலம். திட்டக்குடியில் இருந்து கட்டைவண்டியில் கலைஞரை அழைத்து வந்ததாக என் தந்தை கூறியுள்ளார். கலைஞரின் தமிழ் அவருக்குள் உணர்வை ஊட்டியது. ஊருக்குத் திரும்பியதும், முதல் வேலையாக எங்கள் ஊரில் தி.மு.க. கொடியை ஏற்றி, திண்ணைப் பிரச்சாரம் செய்தார்.

dddd

                                                                         கருணாநிதி

 

அவரது சமகால நண்பர்களோடு பல்வேறு கிராமங்களுக்கும் சென்று கட்சிக் கொடியேற்றி, கிளைக் கழகங்களை உருவாக்கினார். அந்த திராவிட உணர்வு எங்கள் ரத்தத்திலும், நாடி நரம்புகளிலும் கலந்துள்ளது. எனது அண்ணன்கள் செங்குட்டுவன், அறிவழகன், மூன்றாவது பிள்ளை கருணாநிதியாகிய நான், நான்காவதாக தம்பி ராஜேந்திரன் என எங்களின் பெயர்களைக் கூட, அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடிகளின் பெயராகவே சூட்டினார். 2016-ல் அவர் மரணமடையும் வரை தி.மு.க.தான் உயிர்மூச்சு'' என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார்.
 

dddd

                                                                       சுப்பிரமணியன்

 

அவரே தொடர்ந்து, “நான்காவது தலைமுறையாக சூரியத் தாலி திருமணத்தை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். அந்தத் தாலியில் திருமணத் தேதியும் இருக்கும். எங்கள் கிராமத்தில் எல்லோரும் வைதீகத் திருமணத்துக்கு இடம் கொடுக்காமல் சீர்திருத்தத் திருமணத்தையே கடைப்பிடிக்கிறோம். குழந்தைகளுக்கும் திராவிடத் தலைவர்களின் பெயர்களையே சூட்டுகிறோம். அந்த வகையில் இது முன்னோடி திராவிடக் கிராமம்’’ என்றார் உற்சாகமாக.

 

ஒரு தொண்டன், தான் சார்ந்துள்ள கட்சியின் கொள்கைப் பிடிப்பில் எந்த அளவிற்கு உள்ளான் என்பதற்கு உதாரணமாக, திருமணத்திற்கு வருகை தந்த மு.பட்டியைச் சேர்ந்த சிலர், ஒரு சம்பவத்தைக் கூறினார்கள். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது விருத்தாசலம் தொகுதியில் நிறுத்தப்பட்ட திமுக வேட்பாளர், விருத்தாசலம் நகரில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார். 

 

அப்போது மாவட்ட இலக்கிய அணி பொறுப்பில் இருந்தவர் வேட்பாளருக்கு சால்வை அணிவித்ததோடு, அவரோடு தேர்தல் பிரச்சாரத்திற்குப் புறப்பட்டார். அதைப் பார்த்தப் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவரது தந்தை இறந்துபோய் சடலமாக வீட்டில் படுத்திருக்க, தான் சார்ந்துள்ள கட்சியின் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு வந்துள்ளாரே, தந்தையின் உடலை அடக்கம் செய்யாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரலாமா? என்று கட்சியினர் அவரிடம் கேட்டுள்ளனர். 

 

அப்போது அவர் கண்கள் கலங்கியபடி கூறினார், “என் தந்தை 64 வருடமாக கலைஞரே என் உயிர்; கழகமே என் உடல் என்று வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன்பு ‘கட்சிதான் முதலில், அதன் பிறகுதான் குடும்ப நிகழ்வுகள்’ என்று சொன்னவர். அவரது கொள்கையைக் கடைபிடிக்கும் நோக்கத்தில்தான் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வந்தேன். இனி ஊருக்குச் சென்று தந்தையின் இறுதி கடமைகளை செய்வேன். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய நிம்மதி இனி எனக்கு ஏற்படும்” என்றார். அவர்தான் மறைந்த சுப்பிரமணியனின் மகன், இங்கே மணமகனாக உள்ள வைகோவின் தந்தை கருணாநிதி என்றனர்.

 

திருமண அரங்கிலிருந்து கிளம்பும்போது “அழைக்கின்றார் அண்ணா...” என்ற நாகூர் ஹனீபாவின் பாடல் எங்கிருந்தோ காற்றில் மிதந்துவந்து மனதைத் தாலாட்டியது.

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்