Skip to main content

உங்க வாரிசுகள் ரொம்ப மோசம்... கடும் அதிருப்தியில் மோடி! கெஞ்சிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021
ddd

 

ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். திடீர் டெல்லிப் பயணத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளன. இருவரும் பாரதப் பிரதமருடன் நடத்தியது ஒரே ஒரு மீட்டிங். அதைப்பற்றி பாரதப் பிரதமர் மோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இப்பொழுதுதான் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர்.

 

டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு எடப்பாடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தொடர்பாகத்தான் எடப்பாடி, பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.

 

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது கருப்புப் பணத்தை கருவறுக்கும் நடவடிக்கை என்று சொல்லப்பட்டதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, புதிய 2000 ரூபாய் வைத்திருந்தவர்களைத் தேடி வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும் களமிறக்கப்பட்டது. அதில் பெங்களூருவில் ஜெயச்சந்திரா என்பவர் சிக்கினார். லட்சக்கணக்கில் புதிய 2000 ரூபாய் வைத்திருந்தார் என சி.பி.ஐ. அவரை கைது செய்தது. கர்நாடகாவின் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என தமிழர் ஒருவர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கோடிக்கணக்கான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவருக்குப் புதிய நோட்டுகளைக் கொடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கியான தனலட்சுமி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் கர்நாடகா வங்கி அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள்.

 

ஈரோட்டைச் சேர்ந்த வியாபாரி அவர். ராமலிங்கம் என்கிற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார் என அறியப்பட்ட அவர், கர்நாடகாவில் சாலை போடும் பணியை செய்துவருகிறார் என சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை. எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் திருமணம் செய்துள்ள திவ்யாவின் இளைய சகோதரியான சரண்யாவை திருமணம் செய்தவர். அவர் பெயர் சந்திரகாந்த் ராமலிங்கம். அதாவது எடப்பாடியின் மகனின் சகலை. அவர் நடத்திவரும் கம்பெனியின் உரிமையாளர் மிதுனின் மாமனாரான ராமலிங்கம்.

 

2018-ஆம் ஆண்டு எஸ்.கோபி என்கிற சாலை போடும் நிறுவனத்தின் மீது வருமானவரித்துறை சோதனை நடத்தியது. 200 கோடி பணத்தை ரெய்டுக்குப் பயந்து 14 பி.எம்.டபுள்யு காரில் பதுக்கி வைத்தது இந்த கம்பெனி. 12,000 கோடி ரூபாய்க்கு சென்னையில் புறவழிச் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்றிருந்தது. 5000 கோடிக்கு மாநிலம் முழுவதும் சாலை அமைத்துக் கொண்டிருந்தது இந்தக் கம்பெனி. வெங்கடாசலபதி அண்ட் கோ என்கிற கம்பெனிக்கு சப்-காண்ட்ராக்ட் கொடுத்திருந்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு சப்-காண்ட்ராக்ட் பெற்ற வெங்கடாசலதிபதி அண்ட் கோவின் உரிமையாளர், 2016-ஆம் ஆண்டு பெங்களூருவில் கைது செய்யப்பட்ட சந்திரகாந்த் ராமலிங்கம் மற்றும் எடப்பாடியின் மகன் மிதுன் ஆகியோரின் மாமனார் ராமலிங்கம்.

 

இந்த வழக்குகள் பற்றிய கவலை எடப்பாடிக்கு எப்போதும் இருந்தது. அதே 2016-ஆம் ஆண்டு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை 20 கோடி ரூபாய் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, அவரிடம் கைப்பற்றப்பட்ட 136 கோடி ரூபாய்க்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் தொடர்பிருந்தது. அதைக்காட்டி மிரட்டித்தான் ஓ.பி.எஸ். பணிய வைக்கப்பட்டார். அதேபோல் எனது உறவினர்களையும் பா.ஜ.க. அரசு வழக்குகளைப் பதிவு செய்து சிறையிலடைக்கிறது என கூவத்தூர் முகாமில் சசிகலாவிடம் வருத்தப்பட்டார் எடப்பாடி. சசிகலாவை விட்டுப் பிரிந்து பா.ஜ.க. வசம் எடப்பாடி சென்றதற்கு, இந்த வழக்குகள் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

ddd

ஒன்றிய அரசு சார்ந்த இந்த வழக்குகள் முடியவில்லை. தொடர்ந்து தலைவலியாகவே எடப்பாடிக்கு இருந்துவருகிறது. அதில் ஒரு முடிவு ஏற்படுவதை பா.ஜ.க. விரும்பவேயில்லை. அடிக்கடி புண்ணை குத்துவதைப் போல எடப்பாடியை பா.ஜ.க. காயப்படுத்தி வந்தது. இதை பொறுக்க முடியாத எடப்பாடி, பலமுறை மோடியிடமும் நிர்மலா சீதாராமனிடமும் முறையிட்டார். ஆனால் பா.ஜ.க. சட்டமன்றத் தேர்தலில் சொன்ன சசி இணைப்பு உட்பட, சீட் ஒதுக்கீடு என அனைத்திலும் முரண்டுபிடித்தார் எடப்பாடி.

 

தேர்தலில் எடப்பாடி தோற்றதும், மறுபடியும் எடப்பாடிக்கு எதிராக வழக்கை பா.ஜ.க. கையிலெடுத்தது. அத்துடன், எடப்பாடி அமைச்சரவையில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் மீது வருமானவரித்துறை எடுத்த ரெய்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டது. அதேநேரத்தில் தி.மு.க.வுடன் பா.ஜ.க. நெருக்கம் காட்டி கலைஞரின் படத்தை திறக்க ஜனாதிபதியை அனுப்பி வைத்தது. ஜெ.வின் படத்தை திறக்க பிரதமரை அழைத்தும் வரவில்லை. ஜெ.வை ஊழல் குற்றவாளி என மோடி அன்று சொன்னார். இப்போது எடப்பாடி குடும்பம் சார்ந்த ஊழல் வழக்குகளையும் கிளறுகிறார்.

 

அதுபோலவே ஓ.பி.எஸ்.ஸின் இரு மகன்களான ரவீந்திரநாத் எம்.பி, ஜெய்பிரதீப் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான சர்ச்சைகள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால், அது குறித்தும் டெல்லி சந்திப்பின்போது மோடி கடுமை காட்டியிருக்கிறார். அத்துடன் சசிகலா விவகாரம் உட்பட அனைத்தையும் பேசி முடிக்கத்தான் அவசர அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டனர் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.

ddd

ஒருபக்கம் தி.மு.க. எங்களை ஊழல் குற்றம்சாட்டி தாக்குகிறது. அந்தவேளையில் மத்திய அரசு, அ.தி.மு.க.வினர் மீதான வருமானவரித்துறை வழக்குகளை வேகப்படுத்தி நோட்டீஸ்கள், சம்மன்கள் அனுப்புவது எந்தவிதத்தில் நியாயம் என மோடியிடம் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் தனித்தனியாகக் கெஞ்சிக் கேட்டார்கள். ஓ.பி.எஸ்.ஸின் மகன், எடப்பாடியின் மகன் ஆகிய இருவரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என மோடி அதிருப்தி தெரிவித்தார். தி.மு.க.வின் ரெய்டுகளுக்கு எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. சசிகலா விவகாரத்தில் நீங்கள், நாங்கள் சொன்னதை கேட்கவில்லை என அதிருப்தியை தெரிவித்தார். பஞ்சாயத்து அமித்ஷா வசம் சென்றது. அமித்ஷாவும் மோடி சொன்னதையே திருப்பிச் சொன்னார். எங்களை ஏன் தாக்குகிறீர்கள்? என எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் கூறியதைக் கேட்க, பஞ்சாயத்து தலைவராக நிதியமைச்சர் நிர்மலாவுக்கு உத்தரவிட்டனர் மோடியும் அமித்ஷாவும்.

 

இருவரின் பேச்சைப் பொறுமையாகக் கேட்ட நிர்மலா, "இந்த வழக்குகளில் வருமானவரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அந்த துறைகள் எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்க முடியாது என பதில் சொல்லிவிட்டார். நிர்மலா சொன்ன பதில் மோடியும் அமித்ஷாவும் சொன்ன பதில், என்பதைப் புரிந்துகொண்ட ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும், இனிமேல் நாம் ஒற்றுமையாக இருப்போம். அ.தி.மு.க.வை வலுப்படுத்துவோம், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. நம்மிடம் வரவேண்டும். அப்பொழுது பேசிக்கொள்ளலாம்'' என முடிவு செய்து சென்னைக்குத் திரும்பினர்.

 

"அந்த ஒற்றுமை உணர்வு அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் ஓ.பி.எஸ். சசிகலா பற்றி அளித்த பேட்டியிலும் எதிரொலித்தது' என நடந்ததை சொல்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

இதற்கிடையே, இனி தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையேதான் போட்டி என தமிழக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. இதில் என்ன செய்வது என குழப்பத்தில் அ.தி.மு.க. ஆழ்ந்துள்ளது.

 

 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Arvind Kejriwal, Kavita extended court custody

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா, சன்பிரீத் சிங் ஆகியோர் திகார் சிறையில் இருந்து காணொளி மூலம் இன்று (23.04.2024) டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மூவரின் நீதிமன்ற காவலையும் மே 7 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Arvind Kejriwal, Kavita extended court custody

முன்னதாக திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.