Skip to main content

ஓராண்டில் திமுக தமிழகத்திற்காக செய்தவை என்ன..? புதிய திட்டங்கள் குறித்த ஓர் பார்வை

Published on 10/05/2022 | Edited on 20/05/2022

 

new plans announced in tamilnadu by dmk government in one year rule

 

"கட்டம் சரியில்லை, அதிகாரத்துக்கு வர வாய்ப்பே இல்லை" என்ற தொடர் எதிர்ப்புக் குரல்களுக்கு மத்தியில் 2021 மே, 7 அன்று, கிண்டி ஆளுநர் மாளிகையில் ஒலித்தது "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..."  என்ற குரல். 1967 தேர்தலில் இளைஞர் அணியிலிருந்து முரசொலி மாறனின் வெற்றிக்காக ஒலிக்கத் தொடங்கி, 54 ஆண்டுகளில் மிக நீண்ட தூரத்தைக் கடந்து முதல்வர் பதவியேற்பு மேடை வரை வந்துள்ளது அந்த குரல். அந்த குரலுக்குச் சொந்தக்காரரும் தான். தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியிலும் கரோனா பேரிடருக்கு மத்தியிலும் பதவிக்கு வந்த மு.க.ஸ்டாலினும் அவரது அரசும் கடந்த ஓராண்டில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையிலான சாதனைகளைப் படைத்துள்ளது. 

 

ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த கரோனா பரவலை எதிர்கொள்வதற்காகப் பதவியேற்ற உடனேயே கட்டளை மையத்தை உருவாக்கி மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய சூழல்களைக் கண்காணித்தது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனையோடும் பங்களிப்போடும் எதிர்கொண்டு வெற்றிபெற்றது, கவச உடை அணிந்துகொண்டு நேரடியாக மருத்துவமனைக்கு விசிட் அடித்தது, மாஸ்க் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது, பொதுமக்களின் அழைப்பிற்கு தானே நேரடியாக பதிலளிப்பது, வெள்ளம் பாதித்த பகுதிகளை உடனடியாக நேரடியாக சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டது எனக் கவனம் ஈர்க்க தொடங்கினார் ஸ்டாலின்.

 

new plans announced in tamilnadu by dmk government in one year rule

 

வாக்கிங் செல்லும்போது பொதுமக்களுடன் சகஜமாகப் பேசுவது, டீக்கடைக்கு சென்று டீ குடிப்பது, சைக்கிளிங் செல்லும்போது மக்களைச் சந்திப்பது, வெகுஜனங்களின் வீடுகளுக்குச் சென்று சாதாரணமாக உரையாடுவது, உண்பது எனத் தமிழ்நாட்டு அரசியல் சமீப காலமாகக் கண்டிராத முதல்வராக மக்களிடையே தென்படத் தொடங்கினார் ஸ்டாலின். என்னதான் முதல்வரின் எளிமையும் அரசியலும் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் புதிய திட்டங்களை அறிவிப்பது, மக்கள் நலன்களுக்கு எதிரானவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்பது எனச் சாமானியர்களையும் கவனத்தில் வைக்க மறக்கவில்லை இவ்வரசு என்றே கூறலாம்.   

 

கரோனா தடுப்பு, பெண்கள் நலன், கல்வித்துறை, மருத்துவம், தொழில் முதலீடு போன்றவற்றில் தனி அக்கறை செலுத்தப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்றதும் நாட்டிலேயே முதல்முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா நான்காயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் இந்த நிதி சரியான முறையில் சென்றடைவது உறுதிசெய்யப்பட்டது. தேர்தல் வாக்குறுதிப்படி பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி எனத் தொடக்கத்திலேயே சிக்ஸர்களை பறக்கவிட்டது இந்த அரசு.

 

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அங்கீகாரம், தொழிற்கல்வி, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து அதன் அடிப்படையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது, மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது என எதிர்கால தலைமுறையின் கல்விக்காக அடுத்தடுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  

 

தமிழ் இலக்கியத்திற்கு சிறந்த படைப்புகளைத் தரும் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது மற்றும் கனவு இல்லம் கட்டித்தரப்படும் என்ற அரசின் அறிவிப்பு எழுத்தாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல, தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ புதிய விருது வழங்கு வழங்கப்பட்டது. இவை மட்டுமின்றி கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வகையில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்படியான திட்டங்கள் மூலம் தமிழின் இருப்பை ஆழமாகவும் அழுத்தமாகவும் அனைவர்க்கும் உணர்த்தியது தமிழ்நாடு அரசு.  

 

திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றபோது கரோனாவுக்கு அடுத்து அதிக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனையாக இருந்தது பொருளாதார நெருக்கடி. வரலாறு காணாத அளவு கடனுக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, அமைச்சர் நியமனம் முதலே இத்துறையில் சிறப்புக் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. பொருளாதாரத்தில் முன்னனுபவம் உடைய பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தலைசிறந்த பொருளாதார வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, ரகுராம் ராஜன், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ உள்ளிட்டோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். முதலீடுகளை ஏற்க அடுத்தடுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. 

 

new plans announced in tamilnadu by dmk government in one year rule

 

அவற்றின் அடிப்படையில், "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" எனும் நிகழ்வைக் கோவையில் நடத்தியது திமுக அரசு. சர்வதேச முதலீடுகளை ஈர்க்க, துபாய் மற்றும் அபுதாபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் சுமார் 6,100 கோடி ரூபாய் அளவிற்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது. மொத்தத்தில் கடந்த ஓராண்டில் 68, 375 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் 2 லட்சத்து 5 ஆயிரத்து 802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது ஒவ்வொரு தொகுதியிலும் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, "உங்கள் தொகுதியில் முதல்வர்" எனும் தனித்துறை உருவாக்கப்பட்டு மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது. டெல்டா விவசாயிகளுக்குக் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம், மின்துறை சம்பந்தமான புகார்களை அளிக்க புதிய மின் நுகர்வோர் சேவை மையம், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண தொகை, அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இலங்கை அகதிகள் முகாம் என்பது ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மறுவாழ்வு முகாமில் வாழும் தமிழர்களுக்காக ரூ.225 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 

 

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டதோடு, சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவையும் அமைத்தது அரசு. அதேபோல, அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தது. பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்படி ஆட்சிக்கு வந்த ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்ட பல திட்டங்களையும் சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கும் இந்த அரசு, எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய சவால்களும் இன்னும் ஏராளம். தேர்தல் நேர வாக்குறுதிகளில் நிறைவேறியவையும் உண்டு, காத்திருப்பவையும் உண்டு. நிறைவேறியவை நிறைவாக இருந்தாலும் காத்திருப்பவை காலந்தாழ்த்தப்படாமல் நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதே கடைக்கோடி சாமானியனின் எதிர்பார்ப்பாக உள்ளது.   
 

 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.