Skip to main content

"நீட் தொடர்ந்தால் தமிழகம் பின்னடைவைச் சந்திக்கும்!" - ஏகே ராஜன் கமிட்டி எச்சரிப்பது ஏன்?

Published on 23/09/2021 | Edited on 24/09/2021

 

NEET will take Tamil Nadu to pre-independence days

 

நீட் தேர்வுமுறை தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆராய, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து, கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. இந்த குழு, கடந்த ஜூலை மாதம் தங்களின் அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. நீட் தேர்வு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, நீட் தேர்வை நீக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகி தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஏ.கே.ராஜன் தலைமையிலான இந்தக் குழுவில், சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முன்னாள் துணை வேந்தர் எல். ஜவஹர் நேசன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகலா உஷா, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ஆர். நாராயண பாபு உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.

 

NEET will take Tamil Nadu to pre-independence days


இந்தக் குழுவினர், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்தனர். அத்துடன், நீட் தேர்வின் தாக்கம் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரின் கருத்துகளையும் கேட்டறிந்தனர். அந்த வகையில், சுமார் 86 ஆயிரம் பேர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதில் 65,007 பேர் நீட் தேர்வை எதிர்த்தனர். 18,966 நீட் தேர்வை ஆதரித்தனர். 1,450 பேருக்கு கருத்து இல்லை எனக் கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினிடம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். 165 பக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த அறிக்கை, நீட் ஏன் ரத்து செய்யப்படவேண்டும் என்பதற்கான காரணங்களை புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக அடுக்கியுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு. 


SAT, ACT, GMAT, BMAT உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் போட்டித் தேர்வும் இந்தியாவின் CEE எனப்படும் பொது நுழைவுத் தேர்வும் எப்படி அமலாக்கப்பட்டது என்பதை ஒப்பிட்டுப் பேசும் ஏகே ராஜன் கமிட்டி, அத்துடன், அந்த நாடுகள் தற்போது நுழைவுத்தேர்வு முறையை மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறது. மேலும், நீட் தேர்வு கொண்டுவருவதற்கு முன்பு நடைபெற்ற 2016-17 ம் ஆண்டுக்கான மருத்துவத் தேர்வில், 537 ஆக இருந்த தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை, நீட் தேர்வு நடந்த 2017-18 கல்வியாண்டில் 56 ஆகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 2020-21 கல்வியாண்டில் 82 பேரும், 7.5% இட ஒதுக்கீட்டால் 217 பேரும் என உயர்ந்தாலும் நீட் தேர்வுக்கு முந்தைய 537-ஐ நெருங்க முடியவில்லை. 

 

NEET will take Tamil Nadu to pre-independence days


நீட் தேர்வுக்கு முன், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 65.66% மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வுக்கு பிறகு அது 43.13% ஆகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில், 0.39% ஆக இருந்த சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை 26.83% ஆக உயர்ந்து இருக்கிறது. நீட்டால் தமிழ் வழியில் படித்து மருத்துவராகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அத்துடன், நீட் தேர்வு மொழி, கலாச்சாரம், பிராந்தியம் மற்றும் சமூக பொருளாதார ரீதியாக பாரபட்சமாக இருக்கிறது எனவும் இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.


தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை நீட் தேர்வு உறுதிசெய்யவில்லை. அதற்கு மாறாகக் குறைவான திறனுள்ள மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெறுவதையே இந்தத் தேர்வுமுறை உறுதிசெய்கிறது. பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தான் நீட் பயனுள்ளதாக உள்ளது. மாறாக, முதல் முறை எழுதும் மாணவர்களுக்கு சாதகமாக இல்லை. இந்த நீட் தேர்வினால், மாநிலக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். அதேபோல, தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகமான பிறகு, மருத்துவப் படிப்பில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2016-17 கல்வி ஆண்டில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 18.26 சதவீதமாக இருந்த முதல் தலைமுறை பட்டதாரிகளின் விகிதம், இந்த ஆண்டில் வெறும் 10.46 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டை விட 1.87% சதவீதம் குறைவு. 

 

NEET will take Tamil Nadu to pre-independence days


நீட் கோச்சிங் சென்டர்களுக்கு குறைந்த கால கட்டணமாக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரையும் நீண்ட கால கட்டணமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரையும் மாணவர்கள் செலவிடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 2.5 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் ஈட்டக்கூடிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை, நீட் தேர்வுக்கு முன் 47.42% ஆக இருந்தது.    ஆனால், இந்த 2020-2021 கல்வியாண்டில், 41.05% ஆக குறைந்து உள்ளது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ என இந்தியா முழுவதும் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் தேர்வு மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துவது அவசியம் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ள இந்த கமிட்டி, 2007-ல் கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் போல, நீட் தேர்வை ரத்துசெய்யும் வகையிலும் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறவும் பரிசீலனை செய்துள்ளது. அத்துடன், எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும் நீட் தேர்வை அகற்றுவதற்கான சட்டரீதியான வழிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

 

NEET will take Tamil Nadu to pre-independence days


இந்த தேர்வு முறையால், நகர்ப்புறங்களில் மருத்துவராகப் பணிபுரிய விரும்பும் மருத்துவர்கள் அதிகரிக்கக் கூடுமே ஒழிய, கிராமங்களுக்கு மருத்துவர்கள் கிடைப்பதே திண்டாட்டமாகும் என்பதையும் குறிப்பிடுகிறது. நீட் தேர்வு இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து நடந்தால், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் வசித்துவரும் ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் போதிய அளவில் கிடைக்க மாட்டார்கள். தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமாகப் பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்குத் தமிழகம் திரும்பலாம். சுகாதார கட்டமைப்பு தரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழகம் செல்லும் அபாயம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது ஏகே ராஜன் கமிட்டியின் அறிக்கை. 

 

ஏகே ராஜன் சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையில், நீட் தேர்வில் உள்ள சமமின்மையை விளக்கும் வகையில், கீழ்கண்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

 

சமமின்மை

 

 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.