Skip to main content

புதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு இல்லை -நாராயணசாமி திடீர் பேட்டி! 

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

narayanasamy



கரோனா நோய்ப் பரவலை தடுக்கும் வகையில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. 
 


தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் கடலூர், விழுப்புரம், நாகை போன்ற புதுச்சேரி மாநிலத்தின் எல்லையோர பகுதிகளைச் சார்ந்த குடிவெறியர்கள் தமிழ்நாட்டுக்குள் மது பாட்டில்கள் வாங்க வருகின்றனர்.
 

அதையடுத்து புதுச்சேரி மாநிலத்திலும் மதுக்கடைகள் திறக்க நேற்று (18.05.2020) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
 

இதுகுறித்து நேற்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறக்க கடை உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் அரசின் வருவாயைக் கூட்ட புதுச்சேரியிலும் மதுபானக் கடைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (18.05.2020) முதல் மதுக்கடைகள் திறக்கப்படும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடை திறந்திருக்க வேண்டும்.  
 


மதுபானங்கள் வாங்குபவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் சாராயக்கடை, கள்ளுக்கடை என அனைத்து வகையான கடைகளும் திறக்க அனுமதித்துள்ளோம். அதேசமயம்  மதுபானங்களை  அமர்ந்து சாப்பிடும் வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
 

ஆனால் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "மதுக்கடைகளைக் காலை 7 மணியில் இருந்து திறக்க முடிவு எடுக்கப்பட்டது. வெளிநாட்டு மது வகைகளும் 5 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவை கூட்ட முடிவின் படி மதுபானக்கடைகள் திறக்க துணை நிலை ஆளுநர் ஒப்புதல் கிடைக்காததால் நாளை (19.05.2020) திறக்கப்படாது. துணை நிலை ஆளுநர் ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட வேண்டும். ஆதலால் நாளை (19.05.2020) மதுக்கடைகள் திறக்கப்படாது. அரசாணை வெளியிடப்பட்டு நாளை மறுநாள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 
 

 

 

Next Story

மண்ணுக்குள் கள்ளச்சாராயம்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.