Skip to main content

சமூக நீதியில் நாம் தமிழர் கட்சி

Published on 04/04/2021 | Edited on 04/04/2021

 

Naam tamizhar in Social Justice

 

இந்தியாவில் சாதி என்பது ஒன்றின்மீது ஒன்று பொருந்தி சிக்கலான இறுகிய அமைப்பாக உள்ளது என்கிறார் பொதுவுடைமை பிதாமகன் கார்ல்மார்க்ஸ் அவர்கள்.

 

மேற்கத்திய  நாடுகளில் சாதி என்பது வர்க்க அடிப்படையில் உள்ளது. பணம் உள்ளவன் உயர்ந்த சாதி. பணம் இல்லாதவன் தாழ்ந்த சாதி. ஆனால், இந்தியாவில் சாதி என்பது வர்க்க வேறுபாடு மட்டுமல்ல. தொழில், பொருளாதார, சமூக, பண்பாட்டு அடிப்படையிலும் வேறுபாடுகளை கொண்டு அதிலிருந்து வெளிவரவே முடியாதபடி மனிதர்களை சுற்றி பின்னிப் பிணைத்துள்ளது.

 

சூத்திரன் என்ற வடமொழி சொல்லுக்கு கடினமான வேலைகள் செய்து வாழ்வின் வறுமையை விரட்டுபவன் என்று பொருள் சொல்லப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமின்றி மனுநீதியை பொறுத்தவரை பெண்களை ஓட்டுமொத்தமாகவே சூத்திரர்களாகத்தான் சித்தரிக்கிறது. அதனால்தான் அவர்களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது. 

 

கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக பங்கேற்பு, அரசியல் என்று எவற்றிலிருந்து யாரெல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ, அவர்களுக்கு அவற்றில் சிறப்பு வாய்ப்புகளை அளிப்பதன் மூலம், பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் ஏற்றத்தாழ்வினை முற்று முழுதாக களைய முயலும் முயற்சிக்கு பெயர்தான் சமூக நீதி.

 

Naam tamizhar in Social Justice

 

ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின்  மூத்த முதல் தொல்குடியான தமிழ்க்குடியில் சாதி என்பது இடை வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மன்னர்களை கரிகால் வளவன், பாண்டிய நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், அருண்மொழிச் சோழன், அரசேந்திரச் சோழன் ஆகியோரை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைக்க முடியாமல் இன்றளவும் தடுமாறிவருகின்றனர் சாதியவாதிகள். சாதி என்பது தமிழ்ச் சொல் இல்லை. சாதி பார்ப்பவன் தமிழனே இல்லை என்கிறார் புரட்சிப் பாவலர் பாரதிதாசன்.

 

தமிழ் முன்னோர்கள் பலரும் பல்வேறு வழிகளில்  சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகநீதிக்கு இலக்கணம் வகுத்தது தமிழ்மறை. அதை அடியொற்றியே வள்ளலார், அயோத்திதாச பண்டிதர், ரெட்டமலை சீனிவாசன் உள்ளிட்டோர் சனாதன கொடுமைக்களுக்கு எதிராக போராடினர். பிற்காலத்தில் பெரியாரும் அதற்காக  தீவிரமாக போராடினார். ஆனால் பெரியார் வழிவந்த திராவிடக் கட்சிகள் தங்களது ஆட்சி அதிகார பதவிகளை காப்பதற்காக  பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு அதற்கு எதிராகவும் செயல்பட்டதன் விளைவு தமிழகத்தில் சாதியக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. 

 

கடந்த ஐம்பது ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், தமிழகத்தில் சமூகநீதி என்கிற சொல்தான் உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உட்படச் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு நலத்திட்டங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத்தர சரியான கவனம் செலுத்தவில்லை. சமூகத்தில் சாதாரண மக்களுக்கு  நடக்கின்ற அனைத்து தீமைகளுக்கும் தீர்வு காண்பதே உண்மையான சமூக நீதியாகும்.  இதை சாதி மறுப்பு, பெண் விடுதலை, இடஒதுக்கீடு என சுருக்கிவிட்டார்கள் இந்த திராவிட ஆட்சியாளர்கள். சுயமரியாதை என்று பேசிக்கொண்டு பதவிக்காக காலில் விழுவதும் குனிந்தே செல்வதும் திராவிட திருவாளர்களின் செயல்களாக நாம் பார்க்கிறோம்.

 

Naam tamizhar in Social Justice

 

சாதியை ஒழித்த கட்சிகள் எனக் கூறிக்கொண்டு சாதிய அமைப்புகளை உருவாக்கி அதைக் கொண்டு தேர்தல் அரசியல் செய்வதைப் பார்க்கிறோம். சனநாயகத் தேர்தலைப் பணநாயகத் தேர்தலாக மாற்றியது இந்த திராவிடக்கட்சிகளே. சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது, பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுப்பது, பணத்தைக் கொடுத்து வாக்கை ஒரு பண்டமாக மாற்றியது, முதல் போட்டு இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி சாமானியர்கள் அரசியலில் நுழைய முடியாதவாறு பணமுதலைகளுக்கான இடமாக மாற்றி வைத்துள்ளார்கள். இதில் நாம் தமிழர் கட்சியின் சமூக நீதி செயல்பாடுகள் எப்படியுள்ளது எனப்பார்ப்போம்.

 

வெற்று முழக்கமாக உள்ள பெண்களுக்கான 33 விழுக்காட்டைக்கூட  திராவிடக் கட்சிகள் வழங்காத நிலையில் நாம் தமிழர் கட்சி இந்தியாவிலேயே முதல்முறையாக ஐம்பது விழுக்காடு என அறிவித்து கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 40 தொகுதிகளில்  20 இடங்களைக் கொடுத்தது. இப்போது நடக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளில் சரிபாதி 117 தொகுதிகளை படித்த இளம் பெண்களுக்கு ஒதுக்கி களமாட வைத்துள்ளது.

 

Naam tamizhar in Social Justice

 

பொதுத் தொகுதிகளில் ஒரு இடத்தைக்கூட பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்காத திராவிடக் கட்சிகள் சமூகநீதி பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். நாம் தமிழர் கட்சி பொதுத் தொகுதியில் 16 பட்டியலின வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சாதி பார்த்து நீ வாக்களித்தால், உன் ஓட்டு எனக்கு தீட்டு என மேடையிலேயே அறிவிக்கிறார் சீமான். தமிழ்ச் சமூகத்தின் தொல்குடியான குறவர்கள், கோயில் பணி புரியும் பண்டாரங்கள், மண்பாண்ட தொழில் செய்யும் குயவர்கள், சலவைத் தொழில் செய்யும் வண்ணார்கள், மருத்துவ குடிகளான நாவிதர்கள், ஆசாரிகள் என காலகாலமாக திராவிடக் கட்சிகளால் கண்டுகொள்ளப்படாத தமிழ்க் குடிகளைத் தேடிப்பிடித்து அவர்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கச்செய்ய வேட்பாளராக நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலிலும் நிறுத்தியுள்ளது.

 

ஐந்நூறு, ஆயிரம் என்று உதவித்தொகைகளுக்குக் கையேந்த வைக்கும் நிலையை மாற்றி அவர்களுக்கான உரிமைகளைப் பெறச்செய்வதே உண்மையான பெண்கள் முன்னேற்றமாக இருக்க முடியும். அதிலும் சமூகம், பொருளாதாரம் என அனைத்து உரிமைகளையும் வழங்கும் அதிகார மையங்களான சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் அவர்களுக்கான சமவாய்ப்பைப் பெறச் செய்வதன் மூலம் தங்களுக்கான அனைத்து உரிமைகளையும் தாங்களே திட்டமிடவும், சட்டமிடவும் முடியும் என்பதால் நாம் தமிழர் கட்சி அத்தகைய மாற்றத்தை இந்த மண்ணில் சாத்தியப்படுத்த முனைகிறது.

 

தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்ந்து கிடப்பது கல்வி என்றால் இடஒதுக்கீடு மூலம் அதனைக் கொடுத்து விடலாம். பொருளாதாரத்தை வேலைவாய்ப்பின் மூலம் பெற்றுவிடலாம். ஆனால் அவர்கள் உண்மையாக வீழ்ந்துகிடப்பது உயர் சாதி எனச் சொல்லப்படுவோரின் மனங்களில். எனவே அங்கேயிருந்து அவர்களை உயர்த்தும் உன்னத நோக்கத்தோடு தான் பொதுத்தொகுதியில் அதிக அளவில் ஆதித்தமிழர் என்ற புதிய புரட்சிகர வரலாற்றை நாம் தமிழர் படைத்துள்ளது.

 

ஆகவே நாம் தமிழர் கட்சியின் சமூகநீதி என்பது ஆண்டாண்டு காலமாய் அடிமைபடுத்தபட்டிருக்கும் மக்களை, சலுகைகள் என்ற பெயரில்  வெறும் வாக்குவங்கிகளாக மட்டுமே  பயன்படுத்தும் திராவிடக் கட்சிகளை போல் அல்லாது, அவர்கள் ஒடுக்கப்படுவதற்கான  உண்மையான காரணங்களான  சமூக சிக்கல்களின் வேர்களை கண்டறிந்து அதனை களைய முயலும் நேர்மையான செயல்பாடாகும்.  நாம் தமிழரின் தமிழ்த்தேசிய அரசியல் அதனை உறுதியாக இந்த மண்ணில் சாதிக்கும்.

 

 


 

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார்.