Skip to main content

பாகிஸ்தான் பிரிவினை வரலாறு மோடிக்கு தெரியவில்லை - கோபண்ணா பேட்டி!

Published on 12/02/2018 | Edited on 12/02/2018

பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் எந்த அளவுக்கு காரணமோ அதற்கு சற்றும் குறையாத அளவு ஆர்எஸ்எஸ்சின் ஆதி வேரான இந்துமகா சபையும் காரணம் என்றும், மோடிக்கு அந்த வரலாறு தெரியவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கோபண்ணா தெரிவித்தார்.
 

நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா கூறியது...
 

Gopanna

ஒரு நாட்டினுடைய பிரதமர் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்தில் லாவணிக் கச்சேரி நடத்தக் கூடாது. ஒரு பொறுப்புள்ள பிரதமராக இருக்கக் கூடியவர், பொறுப்பற்ற முறையில் பேசி அரசியல் சர்ச்சைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமே தவிர, காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வதில் நேரத்தை செலவழிப்பதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.
 

இந்த நாட்டில் பிரிவினை எப்படி ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட துன்பங்கள் குறித்தெல்லாம் நரேந்திரமோடி பேசுகிறார். பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்துவதற்கு ஜின்னா எப்படி முக்கிய காரணமோ, அதேபோல் இந்துமகா சபையும் ஒரு காரணம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அன்றைக்கு மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் ஜின்னா ஈடுபட்டபோது, அதற்கு இணையாக மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் இந்து மத வெறியர்களும் ஈடுபட்டார்கள். குறிப்பாக இந்து மகாசபை ஈடுபட்டது. ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டது.
 

இந்த நாட்டில் மத கலவரமும், அதனால் மிகப்பெரிய பாதிப்புகளும் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸால் வளர்க்கப்பட்ட நரேந்திரமோடி, பாகிஸ்தான் பிரிவிணை பற்றி, இந்த நாட்டில் ஏற்பட்ட துன்பங்கள் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. இந்த பிரச்சனைக்கு ஒரு காரணமாக இருந்த, அந்த பாரம்பரியத்தில் இருந்து வந்த நரேந்திர மோடி இத்தகைய பேச்சை தவிர்க்க வேண்டும். காங்கிரஸ் தலைமையையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சிப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story

கேள்வி கேட்ட செய்தியாளர்; ஓட்டம் பிடித்த மத்திய அமைச்சர்!

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

meenakshi lekhi run viral video wrestlers video congress shared twitter 

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

 

ஓரிரு தினங்கள் முன் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி தர மறுத்தது. டெல்லியின் முக்கியமான பகுதியான ஜந்தர் மந்தரில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மல்யுத்த வீரர்கள் பேரணியாகச் சென்றது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனையடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் வேறு இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

இதனிடையே முன்பை விட டெல்லி ஜந்தர் மந்தரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து  மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்துள்ளார்கள். மேலும், டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

 

இந்நிலையில் இந்த அறிவிப்பின்படி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் ஒன்றாகக் கூடினர். மேலும் மனதில் வலிகளைச் சுமந்து கொண்டு இந்தியாவிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீச அவர்கள் ஆயத்தமாகி வந்தனர். 'எங்களுக்கு எதற்காக இந்த பதக்கங்கள்; இவற்றை நாங்கள் கங்கை தண்ணீரில் விட்டு விடுகிறோம். தேசத்திற்காக பதக்கங்களை சேர்த்து புகழ் சேர்த்ததைவிட வேறென்ன செய்தோம்' என கண்ணீர் வடித்தபடி இருந்த வீரர்களை சக வீராங்கனைகள், வீரர்கள் தோளைத் தட்டித் தேற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது இந்த பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசத் தயாராக இருந்த நிலையில் நரேஷ் திகாயத் வாங்கிக் கொண்டார். அப்போது அங்கு கூடி இருந்த விவசாயிகள் மற்றும் பலர் மல்யுத்த வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து சமாதானம் செய்தனர்.

 

meenakshi lekhi run viral video wrestlers video congress shared twitter 

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்காக சென்றது குறித்து மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அமைச்சர் மீனாட்சி லேகியிடம் தனியார் தொலைக்காட்சி நிறுவன பெண் செய்தியாளர் ஒருவர், ‘மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு, "சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கூறினார். அதனைத் தொடர்ந்து  மத்திய அமைச்சர் அங்கிருந்து அவரது காரை நோக்கி ஓட்டம் பிடித்தார். செய்தியாளர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே மத்திய இணை அமைச்சர் அவரிடம் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடீயோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 

 

Next Story

"அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை" - கார்த்திக் சிதம்பரம் எம்பி 

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

karthik chidambaram mp talks about erode by election 

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக, நாம் தமிழர், தேமுதிக, சுயேச்சைகள் என தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

 

இந்நிலையில் ஈரோட்டில் 11ம் தேதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க வந்துள்ளேன். சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெறுவார். ஈவிகேஎஸ். இளங்கோவன் இந்த ஊரைச் சேர்ந்தவர். நன்கு பிரபலமானவர் அவருக்கு அறிமுகம் தேவையில்லை. திமுக தலைமையில் நடைபெறும் ஆட்சிக்கு மக்கள் வாக்கு அளிப்பார்கள். தமிழ்நாட்டில் நச்சு அரசியல் வந்துவிடக் கூடாது. அதற்காக இளங்கோவனை வெற்றி பெற வைக்க வேண்டும். 77 வேட்பாளர்கள் 5 பெட்டி வைக்கும் நிலை உள்ளது. ப.சிதம்பரம் பிப்ரவரி 18 மற்றும் 19 தேதிகளில் பரப்புரைக்கு வருவார்.

 

எங்களை விட பலமான கட்சி திமுக என்பதை ஒப்புக் கொள்கிறேன். எங்களுக்கும் ஒரு வாக்கு வங்கி உள்ளது. செயற்கையாக ஒன்று சேர்க்கப்பட்ட கட்சி தான் அதிமுக. அதிமுக வைக்கும் விமர்சனங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுகவிற்கு வாக்குறுதி நிறைவேற்ற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. நிச்சயம் நிறைவேற்றுவார்கள். கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்க தான் செய்யும். நாங்களும் திராவிட கட்சிகளும் எல்லா விதத்திலும் ஒன்றுபடுவதில்லை. மத்திய பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பை வரவேற்று நான் கருத்து கூறினேன். எனது தந்தை அவரது கருத்தை கூறினார். இருவரும் ஒரே கருத்தை பிரதிபலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது தந்தைக்கும், எனக்கும் பல்வேறு விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. நான் எனது சிந்தனையை கூறுகிறேன்.

 

இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளில் 75 சதவீதம் பேர் விசாரணை கைதிகளாக பல ஆண்டுகளாக உள்ளனர். அவர்களை சிறப்பு நீதிபதிகளை நியமித்து தகுதியானவர்களை உடனே விடுவிக்க வேண்டும். பொதுவாக சந்தேகத்திற்கிடமாக கைது செய்யப்படுபவர்கள் 15 நாட்கள் காவலில் வைக்கப்படுவர். குற்றச்சாட்டு உறுதியானால் மட்டுமே தொடர்ந்து சிறையில் வைப்பார்கள். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் உட்பட 75 சதவீத சிறைக் கைதிகள் விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும்.

 

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பங்கு சந்தை ஊழல் நடைபெற்றது குறித்து கூட்டு பாராளுமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அதேபோன்று தற்போது அதானி நிறுவன குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் வங்கி, எல் ஐ சி போன்றவை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. பிரதமர் மோடி காங்கிரஸ் பற்றி கருத்து கூறும்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்யும் என்கிறார். கேம்பிரிட்ஜ் ஹார்வர்டு போன்றவையும் ஆராய்ச்சி செய்யட்டும். இது நடைமுறைதான். தமிழக முதல்வர், அமைச்சர்களின் செயல்பாடு குறித்து வருத்தம் தெரிவித்து பேசி உள்ளார். அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஏனென்றால் நான் திமுக செய்தி தொடர்பாளர் அல்ல. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல். எனவே ஏராளமான அமைச்சர்கள் ஆர்வம் காரணமாக இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்து எந்த கருத்து வேற்றுமையும் இல்லை" என்றார்.