Skip to main content

நெருக்கடியை சமாளிக்க அமைச்சரின் குடும்ப பிரச்சாரம்!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

ddd

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பரபரப்பான தொகுதி, அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியான விராலிமலை. தொகுதி உருவாக்கப்பட்டது முதல் 2 முறையும் இவரே சட்டமன்ற உறுப்பினர். மீண்டும் நம் தொகுதி இதுதான் என்பதைக் கருத்தில் கொண்டு, ஒரு மாவட்டத்திற்குத் தேவையான அத்தனை அரசு அலுவலகங்களையும் கொண்டுவந்து, தொகுதி மக்கள் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த கஜா புயல், கொரோனா ஊரடங்கு கால நிவாரணம், பொங்கல் சீர் என அனைத்து வீடுகளுக்கும் 6 முறை தனது ‘சி.வி.பி. பேரவை' மூலம் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்கி, "இன்னும் தருவேன்” என்று சொல்லியிருந்தார். 3 மாதங்களுக்கு முன்பே மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளையும் அழைத்து ஜாதி, மதவாரியாக பிரித்து தேர்தல் பணிகளை வீடு வீடாக செய்து உறுப்பினர்களின் கணக்கெடுப்பும், செல்ஃபோன் எண்கள் வரை வாங்கியும் வைத்திருக்கிறார்.

 

இத்தனை பணிகள் செய்த பிறகும், தனது விராலிமலை தொகுதிக்கு நெவளிநாதன் என்பவர் விருப்பமனு கொடுத்ததில் அதிர்ச்சியடைந்தார் விஜயபாஸ்கர். அதுபோல, தி.மு.க. வேட்பாளராக தென்னலூர் பழனியப்பனை அறிவித்ததும் அமைச்சருக்கு ஷாக்தான். பழனியப்பனுக்கு சீட் தராமல், வேறு யாருக்காவது சீட் தர வைக்க வேண்டும் என தி.மு.க.வில் உள்ள தனக்கு வேண்டியவர்கள் மூலம் அமைச்சர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அ.தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்கள் முத்தரையர் சங்கத்தினரைக் களத்தில் இறக்கி, வாக்குப் பிரிப்பு பணியிலும் இறங்கியுள்ளனர்.

 

அதனால் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக்கிவிட்டார் அமைச்சர். தன் மகள் பிரியதர்ஷினியை அவர் பேச வைப்பது வாக்காளர்களைக் கவர்கிறது. முத்தரையர் சமூகத்தினரை சரிசெய்ய அமைச்சர் முனைப்பாக இருக்கும் நிலையில், ஆலங்குடியில் பல தேர்தல்களாக காத்திருக்கும் பலருக்கும் சீட்டு கொடுக்காமல், 50 நாளைக்கு முன்னால் கட்சிக்கு வந்த தர்ம.தங்கவேலுக்கு சீட்டு கொடுத்ததால், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த ர.ர.க்கள் இணைந்து வழக்கறிஞர் நெவளிநாதனை பொது வேட்பாளராக விராலிமலையில் நிறுத்தவும் முடிவுசெய்து, அமைச்சரிடமும் சொல்லிவிட்டனர். இதனால் நொந்து மனச்சங்கடத்துடன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில்... அடுத்து தனது மனைவியையும் வீடு வீடாகச் சென்று பெண்களைச் சந்திக்க அனுப்பத் தயாராகியுள்ளார்.

 

இந்தமுறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நான்கு பக்கமும் நெருக்கடி அதிகரித்துள்ளது. "அனைத்தையும் சமாளிப்போம்” என்கிறார்கள் ர.ர.க்கள்.

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.