Skip to main content

அமெரிக்க சி.இ.ஓ.வை கால் டாக்சி டிரைவர் ஆக்கிய அமைச்சர் செல்லூர் ராஜு!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பார்கள். நவமணி விஷயத்திலோ இது  அப்படியே ‘உல்டா’ ஆகிவிட்டது. ஆம்..  நவமணியின் வாழ்க்கையை தமிழகம் புரட்டிப் போட்டுவிட்டது. அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டியான பொன்ராஜ், விமான நிலையத்துக்குச் சென்றபோது, நவமணியை கால் டாக்சி டிரைவராகச் சந்திக்க நேரிட்டது. இருவரும் உரையாடியது காணொளியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நேர்காணலில்,  நவமணி கொட்டித் தீர்த்த குமுறல் இதோ - 

 

navamani
நவமணி

 

என் பெயர் நவமணி. அப்பா பெயர் வேதமாணிக்கம். நான் பிறந்து வளர்ந்தது மதுரையில். அங்கே, செயின்ட் பிரிட்டோ ஸ்கூல் மற்றும் அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன்.  விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியில் எம்.எஸ்.சி. பிசிக்ஸ் படித்தேன். ஏ.வி. காமர்ஸ் குரூப்பில் மெயின் பிரேம் இன்ஜினியர் வேலை பார்த்துவிட்டு சிகாகோ போனேன். அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ – சேக்ரமன்டோ கலிபோர்னியாவில் ஒரு கம்பெனி ஆரம்பித்தேன். அங்கேயிருந்த 25 கம்பெனிகளில் 19-வது இடத்தில் உள்ள ஒரே இந்தியன் கம்பெனி என்னுடையதுதான். ஆனாலும், எனக்கு இந்தியா மீது தனிப்பட்ட பாசம். கலிபோர்னியாவில் சிட்டிசன் ஆகணும்னு விரும்பியதில்லை.  வேளாண்மைக்கு எப்படி கம்ப்யூட்டர் கொண்டு வருவது? ஸ்போர்ட்ஸ் அத்தாரிடிக்கு எப்படி கம்ப்யூட்டர் கொண்டுவருவது? குறிப்பாக, தனி மனிதனுக்கான டெக்னாலஜியை எப்படி கொண்டு வருவது என்பது என்னுடைய நோக்கமாக இருந்தது.  
 

மூடப்படும் கூட்டுறவு சங்கங்கள்!
 

நான் ஏன் தமிழ்நாட்டின் மீது பிரியமாக இருக்கிறேன் என்றால், இது என்னுடைய பூமி. என்னை வளர்த்துவிட்டவர்களுக்கு என்னால் என்ன பண்ண முடியும்? என்ற சிந்தனையே மேலோங்கி இருந்தது.   எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதெல்லாம் கடைசியில்தான். என்னுடைய ப்ராஜக்ட் எல்லாம் சமூக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும். கலிபோர்னியாவில், வேளாண்மையில் டெக்னாலஜி, ஸ்போர்ட்ஸ்ல டெக்னாலஜி எல்லாம் பண்ணியிருக்கேன். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையில் ஒரு நல்ல  ‘ஆஃபர்’ பார்த்தேன். இங்கே ஒரு மாநாட்டில், தேவிதார் என்ற ஐ.ஏ.எஸ். ஆபீசர், கூட்டுறவுத்துறையில் எல்லாரும் நோட்டு புத்தகங்களையே பயன்படுத்துகின்றனர். இத்துறை நலிவடைந்துகொண்டே போகிறது என்றார். பி.எஸ்.என்.எல்.லிலும் பிரச்சனைகள் இருக்கிறது என்று சொன்னார். இன்றைக்கு, ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு போட்டி யார் என்றால் வங்கிகள்தான். வங்கியில் கடன் வாங்க வேண்டுமென்றால், அவன் கம்ப்யூட்டரில் பார்க்கிறான். அதனால்,  எல்லா தகவல்களும் வேகமாக கிடைத்துவிடும். இதே கடனை கூட்டுறவு சங்கத்தில் கேட்டால், கிடைப்பதற்கு மிகவும் தாமதமாகும். இதனால், தொழிலாளர்களுக்கு ஒரு பயனும் இல்லை. போலீஸ், கோர்ட் ஊழியர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கங்கள் திறம்பட செயல்படுவதில்லை. அதனால், கடன் தருவதில் சிக்கல்கள் நிறைய உண்டு. கூட்டுறவு சங்கங்களில் பணம் இல்லை. வங்கியிலிருந்து இவர்கள் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும். எல்லாவற்றையும் கையில் எழுதும்போது, 100 பேருக்கு மேல் அவர்களால் செயல்படுத்த முடிவதில்லை. தமிழ்நாடு அரசில் மொத்தம் 25 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். 
 


ஜெயலலிதா போட்ட தீர்மானம்!
 

பிஎஸ்.என்.எல். என்பது இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கூட்டுறவு. இதில் 27000 பேர் வரை வேலை பார்க்கின்றனர். அதற்கென்றே ஒரு சாஃப்ட்வேர் ப்ராடக்ட் உருவாக்கினேன். அமெரிக்காவில் முதலீடு செய்த அந்த சாஃப்ட்வேர் ப்ராடக்டை இந்தியாவுக்காக மாற்றி கொண்டுவந்தேன். 100 பேரை வைத்து இங்கே ஒரு நிறுவனத்தை தொடங்கினேன். முதலில், நாங்கள் கொடுத்தது பி.எஸ்.என்.எல்.லுக்கு.  பி.எஸ்.என்.எல்.லில் ரூ.800 கோடி கடன் நிலுவையாக இருந்தது. சென்னையில் தலைமை அலுவலகம், மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூரில் கிளை அலுவலகங்கள் அமைத்து, பி.எஸ்.என்.எல்.லின் செயல்திறனை இரட்டிப்பாக்கினோம். 
 

navamani


தமிழ்நாட்டில்  1840 கூட்டுறவு சங்கங்களுக்கு பி.எஸ்.என்.எல். மாதிரி செய்துகொடுக்கும்படி கூட்டுறவு சங்கங்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டார்கள். இதற்கு, 2011-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவோடு பொன்ராஜ் சார் வேலை பார்த்தபோது, அவர் அளித்த விஷன் 2020 திட்டம்தான் காரணம். விஷன் 2020-ஐ சட்ட மன்றத்தில் வைத்து, கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் கொடுவந்தார்கள். அப்போது, அவர்கள் சாஃப்ட்வேர் தேடும்போது, பி.எஸ்.என்.எல்.லில் ஒரு சாஃப்ட்வேர் வெற்றிகரமாக ஓடுகிறது என்று தெரிந்து பார்க்க வந்தார்கள். யார் யாரென்றால், துணை பதிவாளர் ரமேஷ், சோமசுந்தரம் வந்து பார்த்துவிட்டு, அதன்பால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் இதைப் போடவேண்டும் என்று சொல்லி, தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்ட  தீர்மானத்தை ஃபாலோ பண்ணுறாங்க.  
 

அமைச்சர் செல்லூர் ராஜுவின் டிமான்ட்!
 

அப்போதெல்லாம், தமிழ்நாட்டில் இப்படி ஒரு சாஃப்ட்வேரே கிடையாது. ஏனென்றால், நான் அமெரிக்காவிலிருந்து சாஃப்ட்வேர் ரெடி பண்ணி, இங்கே ரூ.20 கோடி முதலீடு செய்து, பி.எஸ்.என்.எல்.லுக்காக இந்த ப்ராடக்டை பண்ணினேன். அவர்கள், கூட்டுறவு சங்க  கூடுதல் பதிவாளர் ஜெயராமன் தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். இதை எப்படி செயல்படுத்துவது, என்ன விலைக்கு வாங்குவது என்று மதிப்பீடு செய்தார்கள். ஆறு மாதங்கள் கழித்து, அறிக்கை தந்தார்கள். இந்த ப்ராடக்ட் ஒன்றுதான் இருக்கிறது. சிங்கிள் சோர்ஸ் ரெக்ரூட்மென்ட்ல வாங்கி உடனடியாக போட்டுவிடலாம்னு 2012-ல் சொல்லுறாங்க. அவங்க கமிட்டி ரிப்போர்ட் வாங்கி வச்சிட்டு டெண்டர் போட்டாங்க. டெண்டருக்கு யாரும் வரவில்லை. சிங்கிள் சோர்ஸ் ரெக்ரூட்மென்ட்ன்னு சொன்னதுக்கு அப்புறம் ஏன் டெண்டர்ன்னு கேட்க முடியாது. கேட்டாலும் கவர்மெண்ட் ரூல்ஸ்னு சொல்லிருவாங்க. 

 

navamani

 

அப்புறம், அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் டாக்டர் செல்லப்பா தலைமையில் ஒரு கமிட்டி போட்டாங்க. மீண்டும் மூன்று மாதங்கள் சரிபார்ப்பு வேலை நடந்தது. அவர்கூட எல்காட், எம்.ஐ.சி மாதிரி ஆறு நிறுவனங்களை வைத்து கமிட்டி போட்டு, நூற்றுக்கு 97 மதிப்பெண்கள் எங்கள் ப்ராடக்ட்டுக்கு கிடைத்தது. பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பயோமெட்ரிக் கைரேகை வைத்து ஓபன் பண்ணுறது வேண்டும்னு கேட்டார்கள். எல்லாம் செய்து கொடுத்தோம். அது முழுவதும் இ-டென்டர். சென்னை மண்டலத்துக்கு மட்டும் 110 கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.30 கோடி. எல்லாம் ரெடி பண்ணுனதும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுகிட்ட கூட்டிட்டு போனாங்க. நிறைய அதிகாரிகள், அவருடைய பி.ஏ. எல்லாரும் இருந்தாங்க. அவங்க டிமான்ட் வச்சாங்க. நான் எந்திரிச்சி வந்துட்டேன். அவங்களுக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல. ரூ.30 கோடி ப்ராஜக்டை 19 சதவீதமே ஆன ரூ.6 கோடிக்கு கொடுத்தாங்க. நானும் அதை எடுத்துப் பண்ணினேன். முதலில் ரூ.20 கோடி முதலீடு செய்ததுபோக,  தமிழ்நாடு தலைமைச்செயலகம்,  சென்னை மாநகராட்சி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றுக்கு அந்த டெண்டரை எடுத்து  மேலும் ரூ.10 கோடி செலவு செய்தோம். 
 

பாராட்டிய பாண்டிச்சேரி முதல்வர்!
 

தமிழகத்தில் ரூ.25000 கோடி கடன் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் ஊழியர்கள் உண்மையிலேயே கஷ்டப்படுகிறார்கள். இதை நல்லபடியாக முடித்துவிட்டால், ஜெயலலிதா மேடம் கவனத்துக்கு வரும் என்று நம்பினேன். அப்போது அவங்க தமிழக முதல்வராக இருந்தாங்க. இதுவரைக்கும், இந்தியாவில் எந்த ஒரு ப்ராடக்டும் இத்தனை வெற்றிகரமாக வெளியிட்டதில்லை. மூன்று வருடங்களுக்கு இதைச் செயல்படுத்தினோம். முதலில் ரூ.4 கோடி லாபம் கிடைத்தது.  பிறகு ரூ.8 கோடியாக இரட்டிப்பானது. முக்கிய பரிவர்த்தனைகளெல்லாம் வேகமாக நடந்தது. ஒரே நிமிடத்தில் கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிடும். கையால் எழுதும் நடைமுறை இருந்தபோது, நிர்வாகச் செலவுகளுக்கே  மாதம் ரூ.11.5 லட்சம் செலவானது.  அதை ரூ.5 லட்சமாகக் குறைத்தோம். ஆறு மாதங்களில் முடித்துக்கொண்டிருந்த வேலையை 30 நிமிடங்களில் முடிக்கும் விதத்தில் பண்ணினோம். செயல்திறன் அதிகரிக்க.. அதிகரிக்க.. தொழிலாளர்களுக்கு கடன் விரைவாகக் கிடைத்தது சிலருக்கு உடன்பாடாக இல்லை. நான் கலிபோர்னியா ஸ்டைலில் செயல்திறனை அதிகரித்துக்கொண்டே சென்றேன். முன்பெல்லாம், 8 நாட்கள் நடையாய் நடந்தாலும் கடன் கிடைக்காது. என்னுடைய வாடிக்கையாளர்கள் யாரென்றால்,  தலைமைச்செயலக ஊழியர்கள், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் போன்றவர்கள்தான். அவர்கள் வந்தால், தேவையான கடனை வாங்கிவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும். இதற்கிடையே, நான் யாரையும் பார்க்க வேண்டியதில்லை. 

 

navamani

 

இதன்பிறகு, தமிழ்நாடு அளவில் ஒரு டெண்டர் எடுத்தார்கள். இடையில் மூன்று வருடங்களாக எனக்குப் பணமே தராமல் இழுத்தடித்தார்கள். எத்தனையோ கோடி எனக்கு நஷ்டமானது. ஆனாலும், நான் விடாமல் செய்து கொடுத்துக்கொண்டே இருந்தேன். நான் விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். நானோ,  கூட்டுறவு சங்க  உறுப்பினர்கள் சிரமத்துக்கு ஆளாகக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டேன். இந்தநிலையில், அப்போது பாண்டிச்சேரி முதலமைச்சராக இருந்த ரெங்கசாமி சட்ட மன்றத்திலேயே என்னைப் பாராட்டினார்.  “சார்.. எல்லா கூட்டுறவு சங்கங்களையும் நீங்களே பண்ணுங்க. பாண்டிச்சேரி இளைஞர்களுக்கு மட்டும் வேலை கொடுங்க.” என்று கூறினார் ரெங்கசாமி. 
 

ரூ.50 கோடி ஊழல்! கேவலமாக நடத்தப்பட்ட டென்டர்!
 

தமிழ்நாட்டில் டெண்டர் போட்டபோது, ஜெயலலிதா மேடம் அப்பல்லோவில் அட்மிட் ஆகிவிட்டார். டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி, இவ்விரண்டும் இணைந்த சி-எட்ஜ் என்ற நிறுவனம், பாண்டிச்சேரியில் எங்களின் செயல்திறனை அறிந்துகொண்டு,  எங்களுக்காக தமிழகத்தில் ஏலதாரர்கள் ஆனார்கள். எங்களது ப்ராடக்டை மதிப்பீடு செய்து, தமிழ்நாட்டில் உள்ள 1840 கூட்டுறவு சங்கங்களுக்கு ஏலம் கேட்டார்கள். தமிழ்நாட்டில் டெண்டர் நடக்குது. முதலமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்காங்க. இந்த நேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை வேறு. அப்போது நடந்த ஒப்பந்தகாரர்கள் கூட்டத்தில் எங்களின் ஏலதாரர்களாக டி.சி.எஸ்.  கலந்துகொண்டது. இரண்டாவது சுற்று நீடித்தது. திடீரென்று, நவம்பர் 2-ஆம் தேதி, எங்களின் ஏலத்தை மூடிவிட்டு,  கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார்கள். அந்த நிறுவனத்தின் வலைதளத்தில், அப்படி ஒரு ப்ராடக்டே இல்லை. எங்களுடைய ப்ராடக்டுக்கு ரூ.25 கோடிக்கு மேல் பயனடைந்ததைக் காட்டினோம். எல்லா கமிட்டியும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதையெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, வெறும் ரூ.40 கோடியிலிருந்து, ரூ.50 கோடி பணத்துக்காக, ஆர்டரை அந்த நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார்கள். எல்லாமே பழைய பணம். உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த அபிடவிட்டில் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன். 
 

எங்களுடைய ப்ராடக்டை மதிப்பீடு செய்தது டாக்டர் செல்லப்பா. இவங்க, அவங்களுக்குள்ளேயே ஒரு கமிட்டி வைத்து, கம்ப்யூட்டர் நிபுணர் என்று சொல்லிக்கொண்டு, எங்களுக்கு 40 மார்க் கொடுத்து நாங்க ஃபெயிலாம். அப்படி ஒரு ப்ராடக்டே அவங்ககிட்ட கிடையாது. அவங்க நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து பாஸாம். சி-எட்ஜ் நிறுவனத்தின் சி.இ.ஓ. கிருஷ்ணகுமார், இவ்வளவு கேவலமா டெண்டர் நடத்துவீங்கன்னு நாங்க நினைக்கவே இல்ல என்று எழுத்துமூலமாகவே ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்புறம், அந்த கேரள நிறுவனத்துக்கே ஆர்டர் கொடுத்துவிட்டார்கள். பிறகுதான், தமிழக அரசுடன் நான் மோதத் தொடங்கினேன். 
 

அத்துமீறி அள்ளப்பட்ட கம்ப்யூட்டர்கள்!
 

சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாட்சியங்களாக வைத்து, ரூ.40 கோடியிலிருந்து ரூ.50 கோடி வரை பழைய பணத்தைக் கொடுத்து, டெண்டர் எடுத்த மோசடியான செயலை, பாரத பிரதமர், தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம்,  கையேடாகவே தயாரித்து அளித்தோம். யாரும் எங்களை அழைத்துப் பேசவில்லை. எந்த விசாரணையும் நடைபெறவில்லை. ஆனாலும்,  அந்த டெண்டர் கேரள நிறுவனத்துக்கே போய்விட்டது. அவர்களோ, அந்த ப்ராஜக்டை தொடங்கவே இல்லை. முடிவாக, முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ். எட்டு மாதங்கள் கழித்து, அந்த ஆர்டரை கேன்சல் பண்ணிவிட்டார். ரூ.40 கோடியிலிருந்து ரூ.50 கோடி வரை வாங்கிவிட்டு, ஆர்டர் கேன்சல் பண்ணினால் என்ன நடக்கும்?  இதற்கிடையில், இந்த ஜனவரியிலிருந்து செப்டம்பருக்குள், என் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்கள். என்னுடைய முதலீட்டாளர்கள், முன்னாள் ஊழியர்களை எனக்கெதிராக திருப்பினார்கள். வீட்டுக்கு பதினைந்திலிருந்து இருபது பேர் வரை சம்பள பாக்கி கேட்டு வந்து மிரட்டினார்கள். ஒரு வாரக்கடைசியில் ரூ.100 கோடி மதிப்பிலான   என்னுடைய சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர்ஸ் எல்லாவற்றையும் அத்துமீறி தூக்கிச் சென்றுவிட்டார்கள். மேலும் அந்த அரசாங்க அதிகாரிகள், என்னுடைய இணை பங்குதாரர்களிடம்,   ‘நீங்க இவரை (நவமணி) இப்படியே விட்டு வைத்தால், தொல்லைகள் உங்களுக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அவரிடமிருந்து விலகிவிடுங்கள். உங்களுக்கு நாங்க ஏதாவது கான்ட்ராக்ட் தருகிறோம்.’ என்று கூறி அவர்கள் பக்கம் இழுத்தார்கள்.   
 

நான் யாருடன் மோதுவது? ஊழலுக்கு எதிராகப் போராடுவதா? இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பதா? அதனால், இதைக் கண்டுகொள்ளவில்லை. நிறைய எவிடென்ஸ் டாகுமென்ட்ஸ் என்னுடைய சர்வரில் இருந்ததால்தான், அத்தனையையும் எடுத்துச் சென்றார்கள். நான் என்னுடைய லேப்-டாப்பில் உள்ள காப்பியை வைத்து போராடிக்கொண்டிருக்கிறேன்.
 

நீதிக்கான போராட்டம்!
 

ஆர்.சி.எஸ்., முதன்மைச் செயலாளர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வரை பார்த்துவிட்டேன். அந்த டெண்டரை கேன்சல் பண்ணிவிட்டதால், சென்னையில் நடந்துகொண்டிருந்த ஒப்பந்த வேலையை அந்த கேரள நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார்கள். அதற்காகவும் ஆறு மாதங்கள் போராடினேன். அதனால்,  2018 ஏப்ரலில் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த்,  கேரள நிறுவனத்துக்குக் கொடுத்த ஒப்பந்த வேலையை ரத்து செய்விட்டார். பிறகு என்னிடம்  ‘இரண்டு டெண்டரிலும் ஊழல் நடந்ததாகச் சொன்னீர்கள். நாங்களும் கேன்சல் பண்ணிட்டோம். முடிந்து போய்விட்டது.’ என்றார்கள். 
 

ரூ.20 கோடி மூலதனம், ரூ.100 கோடி பெறுமான நிறுவனம், 100 தொழிலாளர்களுக்கு வேலை போனது என்று என்னுடைய இழப்புக்கள் ஏராளம். அப்புறம், நானே உயர் நீதிமன்றத்தில், பார்ட்டி-இன்-பெர்சனாக அபிடவிட் தாக்கல் செய்தேன். விசாரணையின்போது, நீதியரசர் 20 நிமிடங்கள் என்னைப் பேச அனுமதித்தார். பிறகு, அவர்களை முழுவதுமாக நிராகரித்துவிட்டார். ‘ஊழலால் உங்களுக்கு ரூ.15 கோடியிலிருந்து ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்குத் தனியாக கரப்ஷன்–கிரிமினல்– பெட்டிசனும்,  பொது மக்களுக்கு ரூ.1500 கோடி வரை கிடைக்காமல் போனதால், அதற்கு தனியாக இன்னொரு வழக்கும் என இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யுங்கள்.’ என்ற ஆலோசனை எனக்குக் கிடைத்தது. 
 

இரண்டரை வருடங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. எல்லாம் இழந்துவிட்டேன். நான் வீட்டுக்கு வாடகை கொடுத்தே ஒரு வருடம் ஆகிறது. ஊழலுக்கு எதிரான எதிர்ப்பையும் விட முடியவில்லை. சிங்கப்பூரில் ஒரு நண்பர் எனக்கு நிறைய உதவிகள் செய்துவருகிறார். அதனால், சின்ன வேலைகள், அதாவது, கான்ட்ராக்ட், கன்சல்டிங் எல்லாம் பண்ணுவேன். கால் டாக்ஸி ஸ்டார் ஹோட்டலில் பண்ணினால், வெளிநாட்டினர் தொடர்பு கிடைக்கும் என்று பண்ணி வருகிறேன். ஆனால், ஆச்சரியப்படும் வகையில், யாரை நான் பார்க்க வேண்டும் என்று நினைத்தேனோ, அவரே (பொன்ராஜ்) என்னுடைய கால் டாக்ஸியில் வருவது நடந்திருக்கிறது. இந்த வருமானத்தை வைத்து என்னுடைய குடும்பத்தைச் சமாளிக்கிறேன். சின்னச் சின்னதா கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் கொடுக்கிறேன். தார்மீக அடிப்படையில், இந்த எதிர்ப்பில் உறுதியாக இருந்துவருகிறேன்.” என்கிறார் அழுத்தமாக. 
 

பொன்ராஜுவும் ஆதங்கத்தோடு சில கருத்துக்களை முன்வைக்கிறார்.

 

navamani

 

“சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகம் வந்த அமெரிக்க சி.இ.ஓ.வை, தமிழக அரசின் லஞ்சமும் ஊழலும் கால் டாக்சி டிரைவராக மாற்றியிருக்கிறது. இதுதான் தமிழகத்தின் நிலைமை. அமெரிக்காவிலிருந்து வந்தவருக்கே இந்த நிலை.  தமிழ்நாட்டில் படித்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட  ஐ.டி. நிறுவனங்கள், வேறு எத்தனையோ நிறுவனங்கள்  மூடப்பட்டிருக்கின்றன. எத்தனையோ நிறுவனங்கள் ஐ.டி. ப்ராஜக்ட் கிடைக்காமல், சாஃப்ட்வேர் ப்ராஜக்ட் கிடைக்காமல் மூடப்பட்டிருக்கின்றன.  இதற்கெல்லாம் கணக்கு இல்லை. 
 

ஓட்டுக்காக வீட்டுக்கு வீடு சாப பணம்!
 

நம் கண்ணுக்கெதிராகத்தான் இதெல்லாம் நடக்கிறது. இதற்கு என்ன காரணம்? இது ஏன் நடக்கிறது? ரூ.20 கோடி ப்ளஸ் இங்கே வந்து ரூ.10 கோடி என ரூ.30 கோடியை நவமணி இழந்துவிட்டார். கூட்டுறவு சொசைட்டியை லாபகரமாக நடத்திக் காண்பித்த பிறகு, அவருக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.  கேரளாவிலிருந்து திடீரென்று ஒரு ஆளைக் கொண்டுவந்து, லஞ்சத்துக்காக ஊழலுக்காக இப்படி ஒரு நிர்வாகத்தை நடத்துகிறார்கள். இந்த தேர்தலில் லஞ்சப்பணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஓட்டுக்கு ரூ200, ரூ.300 என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.  இளைஞர்களின் கனவுகளை, தமிழ்நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற லட்சியங்களைச் சிதைத்து, அந்த ரத்தத்தினால் பெறப்பட்ட அந்த லஞ்சப் பணத்தை, ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அது ஒரு சாபமான பணமாகும். அந்த லஞ்சப் பணத்தை வாங்கி ஓட்டு போடுவது சாபமான காரியமாகும். 
 

தமிழ்நாட்டைத் தலைமுழுகிவிட்டு ஓட வேண்டியதுதான்!
 

தமிழ்நாட்டில் படிக்கக்கூடியவர்களுக்கு வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு இல்லை.. உள்நாட்டிலும் வேலை வாய்ப்பு இல்லை. வட இந்தியாவில் உள்ளவர்கள், மத்திய அரசின் ரயில்வே போன்ற துறைகளில் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கும் நிலை இருக்கிறது. தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கு வாய்ப்பு இல்லையென்று சொன்னால், படிக்காத, அதாவது லஞ்சத்திலே, ஊழலிலே திளைத்துவரும் கட்சிக்காரர்களும்,  ஜாதிக்காரர்களும், மதத்தைச் சார்ந்தவர்களும்தான் இங்கே வாழமுடியும் என்று சொன்னால், படித்தவர்கள் அத்தனை பேரும் தமிழ்நாட்டை தலைமுழுகிவிட்டு, வெளியே ஓடுவதைத்தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு நிலைமை வரும். அதனால், நவமணி விஷயத்தை ஒரு  முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, லஞ்சத்துக்கு,  ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை, ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுபோன்ற காரியங்கள் இனி தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது.” என்கிறார் சமூக அக்கறையுடன்.  
 

தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு நவமணியும் ஒரு சாட்சியாக இருக்கிறார். 

 

-அதிதேஜா

 

 

 

 

Next Story

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஓ நியமனம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Kilambakkam Bus Station Appoints CEO

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலரை நியமித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், “சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வரும் ஜெ. பார்த்திபன், கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சிஇஓ பதவிக்கு விண்ணப்பம்

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

Application for the post of CEO of Tamil Nadu Mercantile Bank

 

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வங்கிக் கணக்கில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியிலிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இதனையடுத்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதே சமயம் இவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்திருந்தது  நிதியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் காலியாக உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பணியிடத்தை நிரப்ப அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பதவிக்கு தகுதியுள்ளவர்கள் www.tmbnet.in./tmbcareers என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.