Skip to main content

கொப்பளிக்கும் எரிமலைக் குழம்பு; வேடிக்கை பார்க்கக் குவியும் மக்கள்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Mauna Loa Volcanic eruption

 

சர் சர்ரென கார்கள் வருவதும் வெட்டவெளியில் பார்க்கிங் செய்வதும் அதில் சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை கீழிறங்கிக் கொண்டு வந்திருந்த சேர்களைப் போட்டு அமர்ந்து எதையோ வேடிக்கை பார்ப்பதுமாக இருக்கிறார்கள். இன்னும் பலர், தங்கள் கேமராவை நிறுத்தி அதன் வழியே படமெடுப்பதும், வேடிக்கை பார்ப்பதுமாக வியக்கிறார்கள். எல்லாம் எங்கே? சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியான ஹவாய் தீவில் தான். அவர்கள் வேடிக்கை பார்ப்பது வேறெதுவுமில்லை... கொதிக்கக் கொதிக்கச் சிவந்த நிறத்தில் கொப்பளித்து, வழிந்து ஓடுகின்ற லாவா எனப்படும் எரிமலைக் குழம்பைத்தான்.

 

Mauna Loa Volcanic eruption

 

அமெரிக்காவின் மேற்கே பசிபிக் கடலுக்கிடையே அமைந்துள்ள பசுமையும் மலைகளும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சும் தீவுக்கூட்டமே ஹவாய் தீவு. இந்த தீவில் கடல் மட்டத்திலிருந்து 13,679 அடி உயரத்துக்கு அமைந்துள்ளது உலகின் மிகப்பெரிய மௌனா லோவா எரிமலை.  ஆனால் இந்த எரிமலையின் அடிப்பாகம் கடலின் அடிப்பரப்பில் கடலுக்குள் அமைந்துள்ளது. அந்த அடிப்பாகத்திலிருந்து எரிமலையின் உச்சி வரையிலான உயரம் 30,085 அடியாகும். நிலப்பரப்பிலுள்ள உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட்டின் உயரம் 29,030 அடியாகும். இந்த எவரெஸ்ட்டை விட உயரமானது மௌனா லோவா எரிமலை. இந்த எரிமலையின் மொத்த பரப்பளவு 2,035 சதுர கிலோமீட்டர்கள்.

 

Mauna Loa Volcanic eruption

 

கடந்த நவம்பர் 28ஆம் தேதி வெடித்துக் கிளம்பிய மௌனா லோவா எரிமலை உலகின் மிகப்பெரிய செயல்பாட்டிலிருக்கும் எரிமலை என்ற பெருமைக்குரிய இடத்திலிருக்கிறது. மௌனா லோவா எரிமலை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை எரிமலைக் குழம்புகளை வெளியேற்றுவது வழக்கமானது தான். ஆனால், கடந்த 1984ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் எரிமலைக் குழம்புகளை வெளியேற்றியதோடு சாந்தமான இந்த எரிமலை, அதன்பின்னர் 38 ஆண்டுகளாக எவ்வித அசைவுமின்றி கிடந்தது. அதற்கும் முன்னதாக 1843ஆம் ஆண்டிலிருந்து 30 முறைக்கும் மேலாக அதில் எரிமலைக்குழம்பு வெளியேறியிருக்கிறது. 

 

Mauna Loa Volcanic eruption

 

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து எரிமலைப் பகுதியின் அடிப்பகுதியில் கடமுடா என்று வித்தியாசமான சத்தம் அவ்வப்போது எழத்தொடங்கியது. அதையடுத்து விஞ்ஞானிகள் அந்த எரிமலையில் வெடிப்பு வர வாய்ப்புள்ளது என அலர்ட்டாகி இரவு பகலாக அதை கவனிக்கத் தொடங்கினார்கள். நாசாவின் சாட்டிலைட்கள் இந்த எரிமலையை ஃபோகஸ் பண்ணத் தொடங்கின. கடந்த நவம்பர் 28ஆம் தேதி, கொலராடோவைச் சேர்ந்த மேக்ஸர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் மேக்ஸர் சாட்டிலைட் தான் முதன்முதலில் அந்த எரிமலையின் மையப்பகுதியில் செக்கச் சிவந்த எரிமலைக்குழம்பு கொப்பளிக்கத் தொடங்குவதைப் படம்பிடித்துச் சொன்னது. உடனடியாக மற்ற சாட்டிலைட்டுகளும் இந்த எரிமலைச் சீற்றத்தைக் கண்காணிக்கத் தொடங்கின. எரிமலையின் உச்சியிலிருந்து 165 அடி உயரம் வரை எரிமலைக்குழம்பு மேலெழும்பிக் கொப்பளித்து ஓடத் தொடங்கியது. 1,000 டிகிரி செல்சியல் வெப்ப நிலை கொண்ட எரிமலைக் குழம்பானது மணிக்கு 40 மீட்டர் தூரம் என்ற வேகத்தில் ஓடைபோல நகர்கிறது.  இந்த எரிமலைத்தொடர் அத்தீவின் பாதிக்கு மேற்பட்ட பரப்பளவை ஆக்கிரமித்துள்ள போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பினால் அங்குள்ள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று ஹவாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

 

Mauna Loa Volcanic eruption

 

எனினும், எரிமலையிலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல் தூசி உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும். எனவே, ஹவாய் தீவிலுள்ள மக்களில் 2 லட்சம் பேர் வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தயாராக இருக்கும்படி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வளவு சீரியஸான நேரத்தில் அதுகுறித்து பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் அந்த எரிமலையை வேடிக்கை பார்ப்பதற்கு ஆர்வத்தோடு எரிமலையை நோக்கி மக்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது. திருவிழாக் கூட்டம்போல கார்களில் சென்று குவிகிறார்கள். சிறுவர்களுக்கு வேடிக்கை காட்டவும், குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டியபடியே சோறூட்டுவதும், விதவிதமாக படம் பிடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். அங்கே பஜ்ஜி, போண்டா கடைகள் போட வேண்டியது மட்டுமே மிச்சம். இப்படிக் குவிய வேண்டாமென அரசாங்கம் கேட்டுக்கொண்ட போதிலும் இப்படியான அரிதான நிகழ்வை இப்போது பார்க்காமல் எப்போது பார்ப்பதாம்? என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்களாம்.

 

- தெ.சு.கவுதமன் 

 

 

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.